Total Pageviews

Wednesday, December 12, 2012

வட்டிக்கு குட்டி

விஜய நகரத்தில் வட்டித் தொழில் நடத்தி வந்த ஒருவன் மக்களிடம் அநியாயமாக அதிக அளவில் வட்டி வாங்கி வந்தான். இதனால் அவனிடம் வட்டிக்குப் பணம் வாங்கும் பலரும் அவதியுற்றனர்.

இதையறிந்த தெனாலிராமன் அந்த வட்டிக் கடைக்காரரை நயவஞ்சகமாகத்தான் திருத்த வேண்டுமென்று முடிவு செய்தான்.

அந்த வட்டிக் கடைக்காரன் திருமணம் போன்ற விழாக்களுக்கு பாத்திரங்களையும் வாடகைக்கு விடும் தொழிலையும் கூடுதலாகச் செய்து வந்தான்.

தெனாலிராமன் ஒருநாள் அவனிடம் தன் வீட்டில் விஷேசம் ஒன்று வைத்திருப்பதாகவும் அதற்குச் சில பாத்திரங்கள் வாடகைக்கு வேண்டுமென்றும் விழா முடிந்ததும் திரும்பத் தந்து விடுவதாகவும் கூறினான்.

அதன்படி அவனும் தெனாலிராமனுக்கு பாத்திரங்களைக் கொடுத்து அனுப்பினான்.

சில நாட்கள் கழித்து தெனாலிராமன் வாடகைக்கு எடுத்துச் சென்ற பாத்திரங்களுடன் சில சிறிய பாத்திரங்களையும் சேர்த்துக் கொண்டு வந்து கொடுத்தான்.

இதைப் பார்த்த வட்டிக் கடைக்காரன், " நான் பெரிய பாத்திரங்கள் மட்டும் தானே கொடுத்தேன். சிறிய பாத்திரங்களை நான் கொடுக்கவில்லையே..." என்றான்.

அதற்குத் தெனாலிராமன், " உமது பாத்திரங்கள் குட்டி போட்டன. அவற்றையும் உம்மிடம் கொடுப்பதுதானே முறை. ஆகவே அவற்றையும் சேர்த்துக் கொண்டு வந்தேன்" என்றான்.

இவன் சரியான வடிகட்டிய முட்டாளாக இருப்பான் போல என்று எண்ணியபடி " ஆமாம் நான் உன்னிடம் பாத்திரங்களைக் கொடுக்கும் போது அது கர்ப்பமாக இருந்தது. அதனால் குட்டி போட்டிருக்கும்..." என்றவாறு அனைத்துப் பாத்திரங்களையும் வாங்கி வைத்துக் கொண்டான்.

சில மாதங்கள் கழித்து தெனாலிராமன் , தன் வீட்டில் சிறப்பு விழா ஒன்று இருப்பதாகவும் அதில் அரசர், மற்றும் அமைச்சர்கள் பலரும் கலந்து கொள்ள இருப்பதால் அதற்குத் தங்கம் மற்றும் வெள்ளிப் பாத்திரங்கள் வேண்டும் என்றும் கேட்டான்.

ஏற்கனவே பாத்திரங்கள் குட்டி போட்டதாகக் கூறி கூடுதலாகப் பாத்திரங்கள் கொண்டு வந்து கொடுத்த தெனாலிராமனைப் பார்த்து, என்னிடம் உள்ள தங்கப் பாத்திரங்களும் , வெள்ளிப் பாத்திரங்களும் கர்ப்பமாக இருக்கின்றன. கவனமாகக் கொண்டு செல்வதுடன் வரும் போது குட்டிகளையும் சேர்த்துக் கொண்டு வந்து தர வேண்டும்." என்றபடி தங்க,வெள்ளிப் பாத்திரங்களைக் கொடுத்தனுப்பினான்.

சரி என்று ஒப்புக் கொண்டு தங்கம் மற்றும் வெள்ளிப் பாத்திரங்களை தெனாலிராமன் வாங்கிச் சென்றான்.

சில மாதங்கள் கடந்தும் வாடகைக்கு விட்ட தங்க, வெள்ளிப் பாத்திரங்கள் வந்து சேராததால் வாடகைக்குக் கொடுத்தவன் தெனாலிராமன் வீட்டுக்குத் தேடிச் சென்றான்.

தெனாலிராமனைப் பார்த்து, "வாடகைக்குப் பாத்திரங்கள் வாங்கி வந்து எவ்வளவு நாட்களாகி விட்டது. பாத்திரங்களை ஏன் திருப்பிக் கொண்டு வந்து தரவில்லை" என்று சத்தம் போட்டான்.

தெனாலிராமனும் அமைதியாக , "சொன்னால் நீங்கள் வருத்தப்படுவீர்கள் என்றுதான் நான் தங்களைப் பார்க்க வரவில்லை. நீங்கள் வாடகைக்கு பாத்திரங்கள் கொடுக்கும் போது அவையெல்லாம் கர்ப்பமாக இருந்ததல்லவா? அதனுடைய பிரசவத்தின் போது மிகவும் கஷ்டப்பட்டு அவையெல்லாம் இறந்து போய்விட்டன " என்றான்.

இதைக் கேட்ட வட்டிக் கடைக்காரன் மிகவும் கோபமடைந்தான்.

" யாரிடம் விளையாடுகிறாய் ? பாத்திரங்கள் எப்படி சாகும்?" என்று கத்தினான்.

தெனாலிராமன் அமைதியாக, "பாத்திரங்கள் குட்டி போடும் போது அவை ஏன் இறக்காது? " என்று கேட்டான்.

இருவரும் மன்னரிடம் சென்று இது குறித்து முறையிடுவது என்று முடிவு செய்து அரண்மனைக்குச் சென்றனர்.

அனைத்து விபரங்களையும் கேட்ட மன்னர், "பாத்திரங்கள் குட்டி போடும் என்றால் அவை பிரசவத்தின் போது ஏன் இறக்கக் கூடாது? உன் பேராசைக்கு இதுதான் சரியான தண்டனை. இனியாவது மக்களிடத்தில் நியாயமான வட்டி வாங்கு" என்று புத்திமதி கூறி அனுப்பி வைத்தார்.

தெனாலிராமனின் புத்திசாலித்தனத்தைப் பாராட்டி பரிசுகளும் வழங்கினார். 

Thanks to Muthukamalam.com

No comments:

Post a Comment

உலகம் உனக்கு சொர்க்கமாகும் !

குரு ஒருவரிடம்  செல்வந்தர் ஒரு கேள்வி கேட்டார்... என் மனம் மிகவும் குழப்பத்தில் இருக்கிறது. என் பணியாட்கள்கூட எனக்கு உண்மையாக இல்லை. என் மனை...