Total Pageviews

Monday, May 18, 2020

வாழ்க்கையில் எதுவும் நிரந்தரம் இல்லை !

வாழ்க்கையில் எதுவும் நிரந்தரம் இல்லை ?

 


கந்தசாமி என்ற ஏழை ஒருவர் திடீரென ஒருநாள் இறந்துவிடுகிறார். அவர் தான் இறந்துவிட்டதை உணரும் போது, கையில் ஒரு பெட்டியுடன் கடவுள் வந்து அவருக்கு காட்சி தருகிறார்.


அப்போது அவரின் அருகில் வந்த கடவுள் அவரிடம், மகனே.. நீ என்னுடன் வருவதற்கான நேரம் வந்துவிட்டது. இப்போது நீ என்னுடன் வர வேண்டும் புறப்படு என்று கூறுகிறார்.


அதற்கு கந்தசாமி, இப்பொழுதா? இவ்வளவு சீக்கிரமாகவா? என்னுடைய திட்டங்கள் எல்லாம் என்ன ஆவது? என்று கடவுளிடம் கேட்கிறார்.


அதற்கு கடவுள் மன்னித்துவிடு மகனே! உன்னை கொண்டு செல்வதற்கான நேரம் இது என்று கூறிவிட்டார். 


பிறகு கந்தசாமி, அந்த பெட்டியில் என்ன உள்ளது என்று கடவுளிடம் கேட்டார். அதற்கு கடவுள் உன்னுடைய உடைமைகள் தான் என்று பதிலளித்தார்.


உடனே கந்தசாமி ஆச்சரியத்துடன், என்னுடைய உடைமைகளா...என்னுடைய பொருட்கள், உடைகள், பணம் எல்லாமே இதில்தான் உள்ளதா? என ஆவலுடன் கடவுளிடம் கேட்கிறார்.


நீ கூறியவை அனைத்தும் உன்னுடையது அல்ல, அவைகள் பூமியில் நீ வாழ்வதற்கு தேவையானது மட்டுமே என்று கூறுகிறார். அப்படியானால் என்னுடைய நினைவுகளா என கந்தசாமி மீண்டும் கேட்கிறார்.


அதற்கு கடவுள், அவை காலத்தின் கோலம் என்று கூறுகிறார். கந்தசாமி மீண்டும் என்னுடைய திறமைகளா? என்று கடவுளிடம் கேட்கிறார். அவை உன் சூழ்நிலைகளுடன் சம்பந்தப்பட்டது என்று சொல்கிறார்.


அப்படியென்றால் என்னுடைய குடும்பமும் மற்றும் நண்பர்களா? என்று கடவுளிடம் கேட்கிறார். அதற்கு கடவுளும் இல்லை மகனே குடும்பமும், நண்பர்களும் நீ வாழ்வதற்கான வழிகள் மட்டுமே என்று சொல்கிறார்.


பிறகு சிறிது நேரம் யோசித்த கந்தசாமி, கடவுளிடம் என் மனைவி மற்றும் மக்களா என கேட்கிறார். அதற்கு கடவுள், உன் மனைவியும், மக்களும் உனக்கு சொந்தமானவர்கள் அல்ல. அவர்கள் உன் இதயத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமே என்று சொல்கிறார்.


சரி, என் உடலா என கேட்க, கடவுள் அதுவும் உனக்கு சொந்தமானதல்ல என்று கூறுகிறார்.


வேறு என்ன என் ஆன்மாவா என்று கேட்கிறார். அதுவும் உன்னுடையது அல்ல. அது என்னுடையது என்று கூறுகிறார். பிறகு கந்தசாமி மிகுந்த பயத்துடன் கடவுளிடமிருந்து அந்தப்பெட்டியை வாங்கி திறந்து பார்த்தார்.

பெட்டியை திறந்து பார்த்த கந்தசாமி மிகவும் அதிர்ச்சியடைந்தார். 

ஏனென்றால், அது வெறும் காலி பெட்டியாக இருந்தது. கண்ணில் நீர் வழிய கடவுளிடம், எனக்கு, என்னுடையது என்று எதுவுமே இல்லையா என்று கேட்டார்.


அதற்கு கடவுள், அதுதான் உண்மை. நீ வாழ்ந்த ஒவ்வொரு நொடி மட்டுமே உன்னுடையது. வாழ்க்கை என்பது நீ கடக்கும் ஒரு நொடிதான். ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ வேண்டும். எல்லாமே உன்னுடையது என்று நினைக்காதே. ஒவ்வொரு நொடியும், உன்னுடைய வாழ்க்கையில் நிரந்தரமாகும் என்று கூறிவிட்டு கடவுள் மறைந்தார்.


நீதி :
 

நம் இறுதி காலத்தில் நாம் எதையும் நம்முடன் கொண்டு போக முடியாது. அதனால், வாழ்கின்ற ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம்.

Wednesday, April 8, 2020

பாசப்போராட்டம்

சிறுகதை

என்னங்க மூட்டை !

ஒண்ணுமில்ல. ரேசன் கடையில ஆயிரம் ரூபா குடுத்தாங்க அதான் கொஞ்சம் மளிகை சாமான் வாங்கிட்டு வந்தேன்

ஓடிவந்து மூட்டையைக் பிரிக்கும் மனைவியை அதட்டினார்

ஏய் அத எடுக்காத இது நமக்கு இல்ல. இது நம்ம பொண்ணு வீட்டுக்கு

ஏன் நமக்கு வாயும் வயிறும் இல்லையா. உங்க பொண்ணுக்கு மட்டும் தான் வாயும் வயிறும் இருக்குதா. ஆயிரம் ரூபா வாங்கிட்டு வந்துருக்கீங்க. மீதிய குடுங்க

இதுவே 1400 ரூபாய் ஆச்சு, 400 ரூபாய் கடன் சொல்லிட்டு வந்திருக்கேன்

அப்போ எனக்கு ஆஸ்துமா மாத்திரை வாங்கலே. அந்த உறிஞ்சிர மிசினு இன்னும் வாங்கல அதானே

வாங்கிக்கலாம். எப்படியும் காசு வரும்போது உனக்கு வாங்கி தரேன். உனக்கு வாங்கித் தராம வேற யாருக்கு வாங்கி தர போறேன்

அய்யோ வாங்கி கொடுத்தாலும், நான் ஆறு மாசமா கேட்டுட்டு இருக்கேன். மூச்சு விட முடியல. கஷ்டமா இருக்குன்னு சொல்லிட்டு இருக்கேன். அதை வாங்கி கொடுக்க முடியல. 1000 வா வாங்கி அப்படியே மகளுக்கு மளிகை சாமான் வாங்கிட்டு வந்துட்டீங்க

எப்படி போவீங்க பஸ் இல்ல. ட்ரெயின் இல்ல. ஆட்டோவும் கிடையாது.எப்படி போவீங்க.

சைக்கிள் ல போவேன்

ஏன் பாதிலேயே வெய்யில்ல சுருண்டு விழுந்து சாகுறதுக்கா

நல்ல வார்த்தையே பேச மாட்டியா நீ

இப்ப போக வேணாம் நாளைக்கு காலைல போய் குடுத்துக்கலாம்

இல்லல்ல நான் இப்பவே கிளம்புறேன்

போங்க. போலீஸ்காரன் சாமானையும் சைக்கிளையும் புடுங்கி வச்சுகிட்டு, உங்களை தோப்புக்கரணம் போட சொல்லுவானோ, குட்டிக்கரணம் போட சொல்லுவானோ. நடந்து தான் வரப் போறீங்க

நல்ல வார்த்தையே பேச மாட்டியா

அய்யய்யோ துரை போருக்கு போறாரு. நல்ல வார்த்தை சொல்லி அனுப்பனும்.

சரி கிளம்பனும் பழைய சோறு இருந்தா கொடு

அதான் மக வீட்டுக்கு போறீங்கள்ள. உங்க மக சமைச்சு வச்சிருப்பா. அங்கே போய் சாப்பிட்டு வாங்க

சரி நான் கிளம்புறேன்

சொன்னா கேக்க மாட்டீங்க. பட்டா தான் உங்களுக்கு புத்தி வரும்.போலீஸ்காரன் உங்கள அடிச்சு உதைச்சு அனுப்பும்போது தான் நான் சொன்னது ஞாபகத்துக்கு வரும்

அவர் சைக்கிளில் எல்லா மளிகை சாமான்களையும் மூட்டையாக கட்டி, பின்பக்கம் வைத்துக் கொண்டு கிளம்பினார்

ஒரு ஐந்து கிலோமீட்டர் வந்திருப்பார்.அங்கே சாலையில் தடுப்பு அமைத்து ஜிப்போடு போலீஸ்காரர்கள் நின்று கொண்டிருந்தார்கள்.
மனைவி சொன்னது போல் போலீஸ்காரர்கள் சாமானையும் சைக்கிளையும் பிடிங்கி கொள்வார்களோ. தோப்புக்கரணம் போடச் சொல்லி போட்டோ எடுத்து டிவியில் போடுவார்களோ.தெரியாமல் வந்து விட்டோமோ.
பயம் தொற்றிக் கொண்டது.

அவர் அருகில் சென்றபோது ஒரு போலீஸ்காரர் தடுத்து நிறுத்தினார்

என்னா பெருசு எங்க கிளம்பிட்டே

ஐயா அயனாவரம் வரை போறேங்கய்யா. மக வீட்டுக்கு மளிகை சாமான் வாங்கிட்டு போறேங்கய்யா

சைக்கிளை ஓரமாக நிறுத்து.  அந்த மூட்டைய தூக்கிட்டு வா

அவ்வளவுதான் 1,400 ரூபாய் மளிகை சாமான் போக போவுது

மிதிவண்டியை நிறுத்தி ஸ்டாண்ட் போட்டு, மளிகை சாமான் மூட்டையை இறக்கி கீழே வைத்தார்

யோவ் பெருசு அந்த ஜீப்புக்குள்ள இன்ஸ்பெக்டர் உக்காந்திருக்காரு அவரை போய் பாரு

அவர் போலீஸ் வண்டியை நோக்கி நடந்தார். வண்டியில் வாட்டசாட்டமாய் கூலிங் கிளாஸ் போட்ட பெரிய மீசை வைத்திருந்த அந்த இன்ஸ்பெக்டர் அமர்ந்திருந்தார்

என்ன பெரியவரே எங்க கிளம்பிட்டீங்க

ஐயா அயனாவரம் வரை போறேங்கய்யா. பொண்ணு அங்க இருக்கு.  மாப்பிள்ளை டிரைவரா இருக்காரு. வேலை இல்ல. அதான் கவர்மெண்ட் கொடுத்த ஆயிரம் ரூபாயில கொஞ்சம் மளிகை சாமான் வாங்கிட்டு போறேங்கய்யா

ஊர்ல தடை போட்டுருக்காங்க தெரியாதா பெரியவரே

தெரியுங்கய்யா. ஆனா நாலு உசுரு அங்க சோத்துக்கு இல்லாம கஷ்டப்படுமே. அதனாலதான் இத போயி கொடுத்துட்டு வந்துடலாம்னு கெளம்பினேய்யா

என்ன வயசு ஆகுது பெரியவரே உங்களுக்கு

63 வயசு ஆகுதுங்கய்யா

அருகில், நடு சாலையில் பத்துப் பதினைந்து இளைஞர்கள் தோப்புக்கரணம் போட்டுக் கொண்டிருந்தார்கள். இவருக்கு மனசு பிசைந்தது. நடுக்கம் வந்தது.

கான்ஸ்டபிள் வந்தார்.

சார் இந்த ஆள் கொண்டு வந்த மூட்டைய சீஸ் பண்ணிட்டேன் சார்

உன் வயசென்னை அவரு வயசு என்ன ஆளுன்ற

சாரி சார்

அந்த கான்ஸ்டபிள் தள்ளி போய் நின்று கொண்டார்.

பெரியவரே சாப்பிட்டீங்களா

இல்லீங்க சார்

கான்ஸ்டபிள் அந்த சாப்பாடு பொட்டலத்துல ஒண்ணு  எடுத்து குடு

ஐயா எனக்கு வேண்டாய்யா. நான் மகள் வீட்டுல போய் சாப்பிடுகிறேன்

 சாலையில் தோப்புக்கரணம் போட்டுக் கொண்டிருந்த இளைஞர்களில் ஒருவன் ஏதோ சொல்ல,

சட்டமா பேசறே என்று ஒரு கான்ஸ்டபிள் அவனை முதுகில் அடித்தார்

அங்க போய் கறியும் சோறும் தின்னுங்க.  இது சும்மா பிரிஞ்ஜி தான்.  சாப்பிட்டுக்கங்க. வெயில்ல எப்படி சைக்கிள் மிதிப்பீங்க

சாப்பிட்ட பின் தோப்புக்கரணம் போட சொல்வார்களோ

ஜீப் மைக் கர கரவென்று பேசிக்கொண்டே இருந்தது.

நாளைக்கு காலையில் சீக்கிரமா கிளம்பி போயிருக்கலாம் என்று நினைத்துக்கொண்டார்.
கான்ஸ்டபிள் எடுத்து வந்து கொடுத்த ஒரு பொட்டலத்தையும் ஒரு தண்ணீர் பாட்டிலையும் வாங்கிக்கொண்டார்.

பெரியவரே அதோ ரூம் இருக்குல்ல. அங்க உக்காந்து சாப்பிடுங்க.
இன்ஸ்பெக்டர் சொன்ன இடத்தில் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தார்

பெரியவரே நல்லா சாப்பிடுங்க இன்னொரு பொட்டலம் வேணுமா

இன்ஸ்பெக்டர் கேட்க, அவர் வேண்டாம் என்று தலையாட்டினார்.

சாப்பிட்டு தண்ணீர் குடித்து கை கழுவினார். பரவாயில்லை வயிறு ரொம்பிடுச்சி. இப்ப முட்டி போடலாம். தோப்புக்கரணம் போடலாம்.

பெரியவரே சாப்பிட்டீங்களா

சாப்பிடங்கய்யா

ஜீப்ல கொண்டு வந்து உங்க மகள் வீட்டுல விடட்டுமா

ஐயா வேண்டாங்கய்யா நான் போயிடுவேங்கய்யா

சரி இந்த பனியனை போட்டுக்கோங்க. இந்த தொப்பிய போட்டுக்கோங்க. இது வாலண்டியர்ஸ்  போட்டுக்கறது. அரசாங்கம் கொடுக்கிற பணத்தை வாங்கினமா தண்ணி அடிச்சமா தலைகுப்புற விழுந்தமான்னு இல்லாம, நாலு உசுருக்கு சோறு போட சாமான் வாங்கிட்டு போறீங்களே. நீங்க தான் உண்மையான வாலண்டியர்.
 இந்த பனியனை  போட்டுக்கோங்க. பத்திரமா போயிட்டு வாங்க.

அது கனவா நனவா என்று நம்ப முடியாமல் பனியனை வாங்கி மாட்டிக்கொண்டார்.

இன்ஸ்பெக்டருக்கு இரண்டு கை குவித்து வணக்கம் வைத்தார்.
 சைக்கிளில் ஏறி, மகள் வீட்டை நோக்கி சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தார்.
*
அப்பா எப்படி வந்தீங்க. எதுக்குப்பா சைக்கிள்ல வந்தீங்க. கை கழுவுங்க. 

பேரன்கள் ஓடி வந்து கட்டிக் கொண்டார்கள்.

பேரன்களை அணைத்து உடனே தள்ளிப் போகச் சொன்னார்.

மகள், அவர் வாங்கி வந்த பொருட்களை எடுத்து உள்ளே வைத்துவிட்டு

என்னப்பா தனியா வந்துருக்கீங்க அம்மாவை கூட்டிட்டு வந்து இருக்கலாம்ல

இல்லம்மா. இன்னொரு நாளைக்கு  கூட்டிட்டு வரேன். நான் கிளம்பட்டுமா. இங்க இருக்கிறது அவ்வளவு நல்லது இல்லம்மா. நான் வீட்டுக்கு போயிடுறேன். உங்க அம்மா தனியா இருக்கும்.

அப்பா சாப்பிட்டு போங்கப்பா. சாப்பாடு ரெடியா இருக்குப்பா

நான் சாப்பிட்டேன்மா

ஏதுப்பா இந்த பனியன் நீங்க வாலண்டியரா இருக்கீங்களா

நடந்த எல்லா விஷயங்களையும் மகளிடம் சொன்னார்

பேரன்களை அழைத்து அவர்களுக்கு காசு கொடுத்து விட்டு கிளம்பினார்

மகள் ஒரு பையோடு வந்தாள்.

அப்பா  பையில கொஞ்சம் பழங்கள் இருக்கு. எடுத்துட்டு போயி அம்மாகிட்ட கொடுங்கப்பா. அம்மாவுக்கு ரோட்ஹெலர் மெஷின் வாங்கினேன். அத கொடுத்துடுங்கப்பா.  அம்மாவுக்கு ஆஸ்துமா மாத்திரை வாங்கி இருக்கேன் அதையும் மறக்காம குடுத்துடுங்கப்பா.

பையை வாங்கிக்கொண்டார்.

மாப்பிள்ளை எங்கம்மா

அப்பா அரசாங்கத்துல  காய்கறி எல்லாம் வண்டியில் போய் விக்க சொல்லியிருக்காங்க. அதான் ஒரு காய்கறி வண்டியில டிரைவரா போயிருக்காருப்பா

இந்த ஆஸ்துமா மெஷினுக்கும்,'ஆஸ்துமா மாத்திரைக்கும் ஏதும்மா காசு

போன மாசம் சம்பளத்திலேயே இது இரண்டும் வாங்கி வச்சுட்டேன் பா

அவர் சைக்கிளை எடுக்க வீட்டை விட்டு வெளியே வந்தபோது மகள் ஓடிவந்து அவர் சட்டைப்பையில்  இரண்டு ஐநாறு ரூபாய் நோட்டுகளை வைத்தார்

அப்பா எங்களுக்கும் நேத்து தான் அரசாங்கத்திலிருந்து ஆயிரம் ரூபாய் கொடுத்தாங்க. நேத்து நைட்டு உங்க மாப்பிள்ளை சொல்லிட்டாரு, உங்க அப்பா அம்மாக்கு கொடுத்துடு. நம்ம ஏதாவது வேலை செஞ்சி சம்பாரிச்சுக்கலாம். வயசானவங்க என்ன பண்ணுவாங்கன்னு சொன்னாருப்பா.

சரிம்மா. மாப்பிள்ளைய கேட்டேன்னு சொல்லு. பத்திரமா இருங்கம்மா.

அவர் உயிரை தன் மகள் வீட்டில் வைத்து விட்டு மிதிவண்டியில் ஏறி தன் வீட்டை நோக்கி மிதிவண்டியை இயக்க ஆரம்பித்தார்.
 
- புஷ்பா ராஜ்குமார்

Monday, March 9, 2020

ஸ்மார்ட்போன்!




ஒரு பெண்ணின் கனவில் பூதம் தோன்றி, “உனக்கு என்ன வேண்டுமோ... அதைக் கேள்!” என்றது.

“என் கணவர் முழிச்சுக்கிட்டிருக்கும் போதேல்லாம் என் மேலே கண்ணா இருக்கணும்.”

“அப்புறம்..?”

“அவர் வாழ்க்கையில் என்னைத் தவிர வேற எதுவுமே அவருக்கு முக்கியமா இருக்கக் கூடாது.”

“அப்புறம்..?”

“அவர் தூங்கும் போது நான் பக்கத்துல இல்லாமல் தூங்கவே கூடாது.”

“அப்புறம்..?”

“அவர் காலையில் எழுந்திருக்கும்போது என் முகத்துல தான் முழிக்கணும்.”

“அப்புறம்..?”

“அவர், நான் இல்லாம எங்கேயும் போகக் கூடாது.”

“அப்புறம்..?”

“எம்மேல ஒரு கீறல் பட்டாலும் அவர் வாடி வருத்தத்துல உறைஞ்சுபோயிடணும்.”

“அப்புறம்..?”

“அவ்வளவுதான்.”

பூதம், அந்தப் பெண்ணை ஸ்மார்ட்போனாக மாற்றியது!

Wednesday, February 12, 2020

*முதுமை + தனிமை= *கொடுமை !

*முதுமை + தனிமை= *கொடுமை !

பிள்ளையை... பெண்ணை... பெற்று, வளர்த்து, படிக்க வைத்து..., ஆளாக்கி..., மணமுடித்து... வைக்கிறோம்!

வேறு ஊரில்..., வேறு மாநிலத்தில்..., வேறு நாட்டில்... வேலை நிமித்தமாக சென்று விடுகிறார்கள்...

இங்கு... 70 வயதிற்கு மேல்... வாழ்ந்த வீட்டிலேயே தனிமை...

இங்குதான் என் மகள் படிப்பாள்...

இங்குதான் விளையாடுவாள்...

என் மகன் கிரிக்கெட் ஆடி உடைத்த ஜன்னல் இதுதான்...

என்று ஏதோ ஆர்க்கியாலஜி போல அவைகளை நினைத்துப் பார்த்து....

என்ன சமைப்பது?...

என்ன சாப்பிடுவது?...

அரை டம்ளர் அரிசி வடித்தாலே மிச்சம்..

பல காய்கள் உடலுக்கு ஒத்துக் கொள்ளாது...

தனிமை... வெறுமை...

அவர்கள் இருக்கும் இடத்திற்கு போகலாம் என்றால்...

பயணம் ஒரு கொடுமை...

லோயர் பர்த் கிடைக்கவில்லை - என்றால் எல்லோரிடமும் பிச்சை எடுக்க வேண்டும்...

சென்னை சென்ட்ரல் - போய்ச் சேருவதே ஒரு யாத்திரை ஆகிவிட்டது...

ஓலாவும், ஊபரும்...
நமக்கு தேவைப்படும் நேரத்தில்,
பீக் hour சார்ஜ்
போட்டு களைப்படைய
செய்கின்றனர்...

நான்கு அடி உயர பச்சை குதிரை தாண்டிய கால்கள்....

இன்று சென்ட்ரலில், அரை அடி படி ஏற... இறங்க... கைப்பிடி கேட்கிறது...

எல்கலேட்டரில் போக மனசு குதித்தாலும்...

வாட்ஸ்ஆப் வீடியோக்கள் மனதில் வந்து, வந்து பயமுறுத்துகின்றன!

இவை வேண்டாமென ஒதுங்கி...

பிள்ளையை வாட்சப்பில் பிடிப்போம்...

பெண்ணை வீடியோ காலில் அழைப்போம்...
என்றால்...

அந்த நேரம் அவர்கள்...

ஏதோ ஒரு மாலில்...

ஏதோ ஒரு ஓட்டலில்...

ஏதோ ஒரு சினிமா தியேட்டரில்...

பிசியாக இருப்பார்கள்...

"ஏதாவது அர்ஜன்ட்டா? அப்புறம் கூப்பிடறேம்ப்பா..." என்பார்கள்...

"இல்லை" என்று ஃபோனை கட் பண்ணி விடுவோம்...

நாலு நாள் கழித்து...

"எதுக்குப்பா ஃபோன் பண்ணினே?" என்று கேட்பர்...

நான் பாசத்தோடு வளர்த்த என் பிள்ளைகள்...

அவர்கள் டைமிற்கு...

நம் தூக்க நேரம்...

பாசத்தை என்றும் மிஞ்சுகிறது தூக்கம்!

நமக்கு பேரப் பிள்ளைகளின் மேல் இருக்கும் பாசம்...,

அவர்களுக்கு, நம்மிடம் இருக்காது.

மூன்று வயது வரைதான் தாத்தா... பாட்டி... என்று அடிக்கடி ஃபோனில் கூப்பிட்டு பேசுவர்...

பிறகு எப்போது அவர்களை ஃபோனில் அழைத்தாலும்...

அவன் வெளியே விளையாடறான்...

அவன் கம்ப்யூட்டர் கேம்சில் இருக்கான்...

அவன் டியூஷன் போயிருக்கான்...

யோகா போயிருக்கான்...

என்று ஏதோ ஒரு பதில் மட்டுமே கிடைக்கும்...

எப்போதாவது குழந்தை முகம்... ஃபோனில்... வீடியோ காலில்...

முகத்தைக் காட்டி... ஹாய்... என்று ஒன்றைச் சொல் சொல்லி விட்டு...

ஓடி விடும்...

என் தாடி வளர்ந்த வயதான முகம் அதற்கு நெருடலாய் இருக்குமோ?...

நமது பண்பாடு... கலாச்சாரம்... தாத்தா பாட்டி உறவுகள்...

அனைத்தையும் டெக்னாலஜி முழுங்கி விட்டது!...

எத்தனை நேரம்தான் டிவி பார்ப்பது...?

இந்த அரசியல்களும்...

இந்த பொய்களும் B Pயை உயர்த்துகின்றன!...

என் சொந்த வீடே... எனக்கு அனாதை இல்லமாகிப் போனது...

ஏதோ... வாட்சப்... Facebook... இருப்பதால் பைத்தியம் பிடிக்காமல் இருக்கிறது...!

மகனும், மகளும் போடும் Status-தான்... என் அன்றாட சுவாரசியங்கள்...

"எப்படிப்பா இருக்கே?" என்று மற்றவர்கள் கேட்கும்போது...

(விட்டுக் கொடுக்க முடியுமா... என் பிள்ளைகளை...)

"எனக்கென்னப்பா... ஜாம் ஜாம்ன்னு... பசங்களோட..., பேரனுங்களோட... அட்டகாசமா.." ( மனதுக்குள் ஏதோ...) வாழ்கிறேன்!

🤔🤭🤫😰😥😓😦😪

பல குழந்தைகளின் தாத்தா, பாட்டிகளுக்கு... இது சமர்ப்பணம்!

Wednesday, January 29, 2020

நாயுடன் நானும் வரலாமா?

வீட்டுக்கு வெளியே ? நாய் சத்தம் கேட்டு வெளியே வந்தார்.

தனது வீட்டு கேட் முன் நின்று கொண்டு இருந்த உயர்சாதி நாயை அப்போது தான் கவனித்தார் அவர்.


அது நீண்ட நேரமாக நின்று கொண்டு இருப்பதாக தோன்றியது. அவரையே கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டு இருந்தது சற்று வியப்பை தந்தது.
மேலும் ஐந்து நிமிடம் கழிந்தது.


மெதுவாக விசிலடித்து கூப்பிட்டார். 


உடனே அது நாலுகால் பாய்ச்சலில் உள்ளே ஓடி வந்து அவரருகே நின்றது.


வாஞ்சையுடன் அதன் கழுத்தை தடவிக்கொடுத்தார். பதிலுக்கு அதுவும் அவரது கால்களை நக்கியது. 


பின்னர் மாடிப்படிக்கு கீழே சென்று படுத்து நிமிடத்தில் சுகமாக உறங்கிப் போய் விட்டது.


இவருக்கோ குழப்பம். எதோ செல்வந்தருடைய நாய் என்பது அதன் தோற்றம், கட்டியிருந்த பெல்ட், தட்டியான உடம்பு போன்றவற்றில் இருந்து புரிந்தது.


இங்கே எதற்காக வந்தது.?


எழுந்து குளித்து உடைமாற்றி காலை உணவு முடித்து அலுவலகம் புறப்பட்டு செல்லும் வரை அது தூங்கிக்கொண்டு இருந்தது.


வேலையாளிடம் சொல்லிவிட்டு புறப்பட்டு சென்றார்.


மாலை வந்து பார்க்கும் போது நாய் அங்கில்லை. விசாரிக்கும் போது மதியமே சென்று விட்டதாக சொன்னார் பணியாள்.


மறுநாள் காலை. மறுபடியும் அதே நேரம். அதே நாய். 


அதே போல் உள்ளே வந்து இவரிடம் சற்று குலாவிவிட்டு அதே இடத்தில் தூங்கி விட்டது.


மாலை வந்து பார்க்கும் போது நாய் அங்கில்லை.


இந்த சம்பவம் பல நாட்கள் தொடர்ந்தது. வேலையாளை விட்டு பின் தொடர்ந்தும் நாய்
எங்கிருந்து வந்தது என்று கண்டுபிடிக்க முடியவில்லை.


ஒருநாள் ஒரு துண்டு சீட்டில்  விபரம் எழுதி கழுத்தில் கட்டி அனுப்பினார். 


மறுநாள் அந்த நாய் வரும்போது கழுத்தில் வேறு ஒரு துண்டு சீட்டு இருந்தது. 


படித்து விட்டு உருண்டு புரண்டு சிரிப்பதை பார்த்து வேலையாளுக்கு ஒன்றும் புரியவில்லை.


அப்படி என்ன தான் எழுதியிருந்தது?..


"அன்பு மிக்கவருக்கு வணக்கம். 


இந்த நாய் என்னுடையது தான். இது என்னுடைய மனைவியின் காட்டு கூச்சலால் விடிய விடிய தூங்காமல் கஷ்டப்பட்டு கொண்டிருந்தது. சில நாட்களாக காலை வேளைகளில் காணாமல் போய்க்கொண்டு இருந்தது. 


தங்கள் கடிதம் மூலம் தங்கள் வீட்டில் அது நிம்மதியாக உறங்கி எழுந்து வருவது அறிந்து கொண்டேன். தங்களது அன்பிற்கு மிக்க நன்றி".

பி.கு."ஒரு விண்ணப்பம். நாளை முதல் நாயுடன் நானும் வரலாமா? நானும் நன்றாக தூங்கி பல ஆண்டுகள் ஆகின்றன."


உலகம் உனக்கு சொர்க்கமாகும் !

குரு ஒருவரிடம்  செல்வந்தர் ஒரு கேள்வி கேட்டார்... என் மனம் மிகவும் குழப்பத்தில் இருக்கிறது. என் பணியாட்கள்கூட எனக்கு உண்மையாக இல்லை. என் மனை...