Total Pageviews

Tuesday, December 20, 2011

குலதெய்வம்

ஐந்தாம் வகுப்பில் படிக்கும் எனது மகள் மதிவதனியோடு சாமி கும்பிட்டு வரலாமென்று தீர்மானித்து இருவரும் ஹோண்டா சிட்டியில் புறப்பட்டோம். நான்கு கிலோ மீட்டர் தள்ளியிருந்தது வழக்கமாக நாங்கள் சாமி கும்பிடும் அந்த குலதெய்வக்கோவில். சின்னவேடம்பட்டியை தாண்டி செல்கையில் அங்கிருந்த முருகன் கோவிலில் பறையொலி சத்தம் காதைப் பிளக்க, சிறப்பு பூஜை நடந்து கொண்டிருந்தது. பெண்கள் வரிசையாக நின்று சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தார்கள். 

" அம்மா எதுக்கு அவ்வளவு தூரத்துல இருக்குற கோவிலுக்க்கு சாமி கும்பிடப்போகணும், வழியில இருக்கிற இந்த கோவில்லயே சாமி கும்பிட்டுட்டு போலாமே!" மதிவதனி கேட்டபோது எனக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தேன். என் மகள் விடவில்லை ,மீண்டும் கேட்கவே நான் மென்று விழுங்கியபடி அந்த உண்மையைச் சொன்னேன். 

 " அது தாழ்ந்த சாதிக்காரங்க கும்புடுற கோவில், நாம அங்கயெல்லாம் போகக்கூடாது!" என்றேன். " அப்போ அந்த கோவில்ல இருக்குற முருகன் சாமியும் தாழ்ந்த சாதி கடவுளா?" 

மதிவதனி வெகுளியாய் கேட்டபோது எனக்கு சுருக்கென்றிருந்தது. மனுஷங்கதான் உயர்ந்தவன், தாழ்ந்தவன்னு பிரிஞ்சு கிடக்கிறாங்க, 

அவங்க தனித்தனியே சாமி கும்பிடுறதால தெய்வங்கள் மேல தவறான எண்ணம் அந்த பிஞ்சு மனதில் பதிந்துவிடக்கூடாதென்று வண்டியை திருப்பி வழியிலிருந்த அந்த முருகன் கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு வீடு திரும்பினோம் எங்கள் குலதெய்வத்தை மறந்தபடி..

 நன்றி :பாக்யா

என் கேள்விக்கு என்ன பதில்?

ஒன்பதாம் வகுப்பில் படிக்கும் எனது மகன் இளமதியன் அன்று காலை அவனது தமிழ் பாடத்திலுள்ள மாவட்ட ஆட்சியாளரின் பணிகள் பற்றிய பாடத்தை சத்தம் போட்டு படித்துக்கொண்டிருந்தான். 

நான் அவன் பக்கத்தில் வந்தமர்ந்து அவன் படிக்கும் அழகை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தேன். " மாவட்ட ஆட்சி யாளரின் பணிகள் பாடத்துல உனக்கு ஏதாவது சந்தேகம் இருந்தா என்னக்கேளு, நான் விளக்கம் சொல்றேன்!'' என்று தெனாவெட்டாகக் கேட்டேன். அவன் பதில் சொல்லாமல் பாடத்தை படிப்பதிலேயே கவனமாக இருந்தான். 

மறுபடியும் நான் கேட்டு தொந்தரவு செய்யவே, " எனக்கொரு சந்தேகம் இருக்கு, ஆனா அதுக்கு நீங்க பதில் சொல்லமாட்டீங்க!" என் இம்சை தாங்க முடியாமல் சொன்னான் இளமதியன். எனக்கு கோபம் தலைக்கேறியது . எம்.ஏ படித்திருக்கும் என்னிடம் அவனது கேள்விக்கு பதில் இல்லாமல் போகுமா? எனக்குள் கர்வம் வந்தமர்ந்து உசுப்பேற்றிக்கொண்டிருந்தது. ''அட சும்மா கேளுடா, நான் பதில் சொல்றேன்!'' அவனிடம் மல்லுக் கட்டி நின்றேன்.

 அவன் தொண்டையை ஒரு முறை கனைத்துவிட்டு கேட்டான். " ஒரு மாவட்ட ஆட்சியாளர் ஆகணுமுன்னா அதுக்கு ஐ.ஏ.எஸ் படிச்சு பாஸ் பண்ணியிருக்கணும், அப்பறம் உதவி கலைக்டரா இருந்து அனுபவப்பட்டு அப்பறம் தான் ஒரு மாவட்டத்துக்கு கலைக்டரா போடுவாஙக, சாதாரண ஒரு மாவட்டத்த நிர்வாகம் பண்றதுக்கே ஐ.ஏ.எஸ் படிப்பு தேவையின்னு இருக்கிறப்போ,

மொத்த மாவட்டத்தையும் நிர்வாகம் பண்ற முதல்வர் மட்டும் ஏன் வெறும் அஞ்சாம் கிளாஸ் படிச்சிருந்தாகூட தேர்தல்ல ஜெயிச்சா போதுமுன்னு உட்கார வைக்கிறீங்க, கட்சியில ஐ.ஏ.எஸ் படிச்சவங்களே கிடையாதா? அவங்கள தேர்தல்ல நிக்க வெச்சு முதல்வர் பதவியுல ஏன் உட்கார வைக்கிறதில்ல..!" 

இளமதியனின் கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் ஒருகணம் தடுமாறி அந்த இடத்தைவிட்டு மெல்ல நகர்ந்தேன். விடையற்ற அவனது கேள்வி மட்டும் என்னை அரித்துக்கொண்டே இருந்தது. 

நன்றி :பாக்யா

மாலதி ஐ லவ் யூ

மூன்றாவது மாடியிலிருந்து கீழே எட்டிப்பார்த்த பார்வதி அந்த காட்சியைக் கண்டு திடுக்கிட்டாள். முதல்மாடியின் படிக்கட்டில் நின்று கொண்டு தனது மகன் பிரசாந்தும், தன்னிடம் டியூசன் படிக்க வரும் மாலதியும் நெருக்கமாக நின்றிருந்தார்கள். பிரசாந்த் கடிதம் ஒன்றை நீட்ட, மாலதி அதை வாங்கி தன் ஜாக்கெட்டுக்குள் திணித்தாள். பார்வதிக்கு எல்லாமே புரிந்தது. ' வரட்டும் அவ!' மனதிற்க்குள் கறுவிக்கொண்டாள். சற்று நேரத்தில் மாலதி வந்து சேர்ந்தாள். " என் மகன் உனக்கு லெட்டர் குடுத்தானா?" சற்று மிடுக்காகவே கேட்டாள் பார்வதி. " டீச்சர் அது வந்து...." தடுமாறி தலை குனிந்தாள் மாலதி. " எல்லாத்தையும் பார்த்துகிட்டுதான் நின்னேன், அந்த லெட்டர குடு!" பார்வதி முறைக்க வேறுவழியின்றி ஜாக்கெட்டுக்குள்ளேயிருந்து அந்த கடிதத்தை எடுத்து தந்துவிட்டு டியூசனுக்குக்கூட காத்திருக்காமல் வேகமாய் மாடிப்படியிறங்கி ஓடினாள் மாலதி. கடிதத்தை படித்த பார்வதியின் முகம் சுருங்கியது. மகனுக்கு புத்திமதி சொல்லி திருத்தவேண்டும் என்று அவனுக்காக காத்திருந்தாள். அரைமணி நேரம் கழிந்து வந்த பிரசாந்திடம் பொரிந்து தள்ளினாள் பார்வதி. " என்ன புள்ளடா நீ, இப்பிடியா பண்றது, உன்ன என் புள்ளயின்னு சொல்லவே வெட்கமா இருக்கு, ஒரு பொண்ணுக்கு இப்பிடியா லெட்டர் எழுதி தருவ? அந்த பொண்ணே வலிய வந்து அவ காதல உன்கிட்ட சொன்னதுக்கு ` முடியாது, வீட்டுல அம்மா அப்பாவுக்கு தெரிஞ்சா பிரச்சனையாயிடும் என்ன மறந்துடு! இப்பிடியா எழுதி அவகிட்ட குடுப்ப, காதலுக்கு நானும் உன் அப்பாவும் எப்பவுமே தடையா இருக்கமாட்டோம், காதலிச்சு கல்யாணம் பண்ணிகிட்டா ஜாதி, மதம் பார்க்கவேண்டியதில்ல, வரதட்சணையின்னு பொண்ணு வீட்டுக்காரங்கள வேதனப்படுத்த வேண்டியதில்ல, போய் மாலதிகிட்ட உன் காதல சொல்லு!" பார்வதியின் வார்த்தைகளைக்கேட்டு மின்னல் வேகத்தில் பறந்தான் பிரசாந்த், மாலதியிடம் ஐ லவ் யூ சொல்ல. நன்றி :பாக்யா

ஐம்பது ருபாய்க்கு முப்பதாயிரம்

"ஜாமிட்டிரி பாக்ஸ் பென்சில் பாக்ஸ் ரெண்டுல ஏதாவது ஒண்ணு வாங்கு" அடம் பிடிக்கும் தனது மகன் ஜானுவிடம் அமைதியாய் சொன்னார் சீனிவாசன். ``முடியாது எனக்கு ரெண்டும் வேணும்!'' என்று மறுபடியும் அடம் பிடித்தான் ஜானு. 

சீனிவாசனுக்கு கோபம் பொத்துக்கொண்டு வர அவன் கன்னத்தில் பளாரென்று அறைந்தார் அழுகையும் ஏமாற்றமும் கன்னத்தில் வாங்கிய அடியும் அவனை உலுக்க அன்றைய இரவு சங்கடத்தோடு நகர்ந்து போனது. 

மறுநாள் காலை பள்ளிக்கூடம் போக தயாராகையில் ஜானுவுக்கு தலை சுத்துவதுபோல் தோன்ற தனது ஞாபசக்தியை மொத்தமும் இழந்து நின்றான் ஜானு. அவனை தூக்கிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு சென்று டாக்கரிடம் காட்டி பதட்டமானார் சீனிவாசன். 

 "ஜானுவுக்கு வந்திருக்கிறது டிஸ்ஸோஸியேட் அம்னீஷியங்கிற வியாதி, இது மன அழுத்தத்தாலயும், பயத்தாலயும் வர்ற நேய், மூணு மாசம் தொடர்ந்து சிகிட்சை எடுத்தா இழந்த ஞாபகசக்திய திரும்ப கொண்டு வந்துடலாம் அதுக்கு முப்பதாயிரத்துக்கு மேல செலவாகும்"

 டாக்டர் சொல்லி முடித்த போது ஐம்பது ருபாய் பென்சில் பாக்ஸ் வாங்கி தராமல் போனதற்க்கு இத்தனை பெரிய செலவா என்று மயங்கி சரிந்தார் சீனிவாசன் 

நன்றி :பாக்யா

'ம்' புடிச்சிருக்கு,

ராஜேந்திரனும் அவன் தாயாரும் தரகர் சொன்ன வீட்டுக்கு பெண் பார்க்கச் சென்ற போது, இருவரையும் வரவேற்று ஹாலில் அமர வைத்து காபி பரிமாறினார்கள். " நீங்க என்ன படிச்சிருக்கீங்க, என்ன வேலை பார்க்கறீங்க?" ஹாலில் அமர்ந்திருந்த பெண்களில் ஒருத்தியான மைதிலி மெல்லக் கேட்டாள். " பி.காம் முடிச்சிருக்கேன், ஒரு தனியார் கம்பனியுல அக்கவுண்டெண்டா வேல பார்க்கறேன்!" தான் பார்க்க வந்த மணப்பெண்ணின் தோழியாக இருக்கக்கூடும் என நினைத்து பவ்யமாய் பதிலளித்தான் ராஜேந்திரன். " உங்க உதடு கறுத்திருக்கு, நீங்க சிகரெட் பிடிப்பீங்களா?" மறுபடியும் கேட்டாள் மைதிலி. " கல்லூரியில படிக்குறப்போ புடிச்சிருக்கேன் இப்போ விட்டுட்டேன்!" என்றான் ராஜேந்திரன். அரைமணி நேரத்துக்கு மேலாக மைதிலி கேள்விக்கு மேல் கேள்வி கேட்க அதற்கெல்லாம் சளைக்காமல் பதிலளித்தான் ராஜேந்திரன். " சரி பேசினது போதும் பொண்ண வரச்சொல்லுங்க!" அவனது தாயார் கடுப்பாகி கேட்டாள். " நாந்தாங்க பொண்ணு, எத்தன நாளைக்குத்தான் காபி தட்டோட, குனிஞ்ச தல நிமிராம வந்து காபி பரிமாறிக்கிட்டு மாப்பிள்ளைய அரையும் குறையுமா பார்த்துட்டு போறது, ஒரு சேஞ்சுக்கு இப்பிடி பண்ணீட்டேன், மாப்பிள்ளைய எனக்கு புடிச்சிருக்கு, உங்களுக்கு என்ன புடிச்சிருக்கா? மைதிலி நேரடியாக கேட்டபோது 'ம்' என்று தடுமாறியபடி பதிலளித்தான் ராஜேந்திரன். நன்றி :பாக்யா

வேற பொண்ணு இருந்தா பாரேன்!''

இருபது வருடங்களுக்கு முன்பு என்னுடன் படித்த நண்பனை எதோச்சையாக பேருந்து நிலைய வளாகத்தில் சந்தித்தேன். முகத்தில் சுருக்கம் விழுந்து தலையில் பாதி முடி நரைத்திருந்தது. இன்னும் அவனுக்கு திருமணம் ஆகவில்லை என்ற விபரம் கேட்டபோது மனசு கஷ்டமாக இருந்தது. 

இருவரும் தொலைபேசி எண்களை பகிர்ந்துகொண்டு பிரிந்தோம். அன்றிரவு நண்பனை சந்தித்த விபரத்தை என் மனைவியிடம் சொல்லி வருத்தப்பட்டேன். '' நம்ம பொண்ணு படிக்கிற ஸ்கூல்ல கூட ஒரு டீச்சருக்கு இன்னும் திருமணம் ஆகலை, வயசு முப்பத்தைந்துக்குமேல இருக்கும!" என்றாள் என் மனைவி.

 எனக்கு பொறி தட்டியது. மறுநாள் அந்த டீச்சரை சந்தித்து எனது நண்பனைப்பற்றி எடுத்துச்சொல்லி, `ஏன் நீங்க ரெண்டு பேரும் திருமணம் செய்துகொள்ளக்கூடாது?' என்று கேட்டேன். ரொம்ப நேரம் யோசித்துவிட்டு இறுதியில் சம்மதிக்க, விபரத்தை நண்பனுக்கு தெரிவித்து உடனே ஸ்கூலுக்கு வரச்சொன்னேன். 

அடுத்த அரைமணி நேரத்தில் வந்த அவனுக்கு டீச்சரை காண்பித்து `பிடிச்சிருக்கா' என்று கேட்டேன். '' டீச்சர் பார்க்கிறதுக்கு எனக்கு அக்கா மாதிரி தெரியறாங்க, வயசு குறைவா வேற பொண்ணு இருந்தா பாரேன்!'' அவன் சொன்னபோது எனக்கு தலை சுற்றியது.  

நன்றி :பாக்யா

நன்கொடை

பஞ்சாயத்து தலைவர் தங்கராஜ் வீட்டுக்கு வந்து `ஐயா' என்று குரல் எழுப்பி அடக்கமாக நின்றார் ராமசாமி. " என்ன வேணும்!'' என்றபடியே வெளியே வந்தார் தங்கராஜ்.. " லோண் வேணும் சார்!" மறுபடியும் பணிவாய் கேட்டார் ராமசாமி. 

" என்ன லோண் வேணும், வீடு கட்ட லோணா, இல்ல மாடு வாங்க லோணா!" " அதெல்லாம் வேணாங்க, என் வீடு குடிசையுங்க, வீட்டுக்கு பின்புறம் ஒரு கழிவறை கட்டணும், அதுக்கு லோண் குடுங்க சார்!"

 " அதுக்கெல்லாம் லோண் கிடைக்காது!" என்றார் தங்கராஜ். " என்ன சார் இது, ஒருத்தருக்கு வீடு கூட இல்லாம இருக்கலாம், ஆனா கழிவறை இல்லாம இருக்க முடியுமா? முதல்ல கழிவறை கட்ட லோண் குடுத்துட்டு அப்பறமா வீடு கட்ட லோண் குடுங்க!" விரக்தியாய் சொன்ன அவரது வார்த்தைகள் தங்கராஜின் மனதை ஒரு பிடி பிடித்தது. 

 " கொஞ்சம் இருங்க!" என்று சொல்லிவிட்டு தனது அறைக்குச் சென்று ஐயாயிரம் பணம் எடுத்து வந்து அவரிடம் தந்தார். " இத நீங்க திரும்ப கட்ட வேண்டாம், போய் கழிவறை கட்டிக்குங்க!" அவரது வார்த்தைகளையும் பணத்தையும் கண்டு அசந்துபோய், " நீங்க மகராசனா இருக்கணும்!" என்று மனதார வாழ்த்திவிட்டு வெளியேறினார் ராமசாமி. 

" என்னங்க, கோவில் கட்ட நன்கொடை தர்றதுக்கு வெச்சிருந்த பணத்த யாரோ வந்து கேட்டதும் உடனே தூக்கி குடுத்துட்டீங்களே, 

உங்களுக்கென்ன புத்தி கித்தி கெட்டு போச்சா?" வார்த்தைகளை கோபமாய் உதிர்த்தபடி வெளியே வந்தாள் அவரது மனைவி.

 " கோவில் கட்ட உதவி பண்ணுனா என்ன புண்ணியம் கிடைக்குமோ அதைவிட பலமடங்கு புண்ணியம் ஒரு ஏழைக்கு கழிவறை கட்ட உதவினா கிடைக்கும்!" 

அவரது வார்த்தைகள் அர்த்தமுள்ளவை என்பதை உணர்ந்து பதிலின்றி அடங்கிப் போனாள் அவரது மனைவி. 

நன்றி :பாக்யா

மாப்பிள்ளை உனக்கு பிடிச்சிருக்காம்மா?!

  மாப்பிள்ளை உனக்கு பிடிச்சிருக்காம்மா?! அப்பா கேட்கும் போது இந்த மாப்பிள்ளை வேண்டாம்பா என்றேன்!.. நீ கவலைப்படாதே! இந்த வரனை ஒப்புக்கோ! உ...