Total Pageviews

Monday, September 16, 2024

சொர்க்கத்துலே நுழையறதுக்கான அனுமதிச் சீட்டு !

 

ஒரு பெரிய மனிதன். இந்த உலகத்தில் மிகவும் வசதியாக வாழ்ந்தான். ஒரு நாள் அவன் உலக வாழ்க்கையை முடித்துக் கொண்டு சொர்க்கத்துக்குப் போனான். அங்கே போன பிறகுதான் தெரிந்தது, சொர்க்கத்தின் வாசல் கதவு மூடி இருந்தது. மூடிய கதவின் முன்னால் போய் நின்றான். ‘‘இங்கே யாருமே இல்லையா?’’ என்று உரக்கக் கத்தினான். பதில் இல்லை.

‘‘நான் ஒரு பெரிய மனிதன் வந்திருக்கிறேன். கதவைத் திறந்து விடு’’.

சற்று நேரத்தில் சித்ரகுப்தன் அங்கே வந்தான். உடனே இந்தப் பெரிய மனிதன், தனது சட்டைப்பையிலிருந்து பத்து ரூபாய் நோட்டை எடுத்து அவன் கையில் திணித்தான். ‘‘இந்தா... இதை வெச்சுக்கோ, சீக்கிரம் கதவைத் திற... நான் உள்ளே போகணும்’’.

சித்ரகுப்தன் சிரித்தான்.

‘‘இதெல்லாம் உங்கள் பூலோக நடைமுறைகள், லஞ்சம் கொடுக்கறது, கதவைத் திறக்கச் சொல்றது... அதெல்லாம் இங்கே ஒண்ணும் எடுபடாது’’.

‘‘அப்படின்னா நான் எப்படி உள்ளே வர்றது?’’

‘‘சொர்க்கத்துலே நுழையறதுக்கான அனுமதிச் சீட்டு கொண்டு வந்திருக்கியா?’’

‘‘அனுமதிச் சீட்டா? அது எங்கே கிடைக்கும், சொல். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. வாங்கிக்கலாம்.’’

‘‘அதைக் காசு கொடுத்து வாங்க முடியாது’’.

‘‘வேறே எப்படி வாங்கறது?’’

‘‘அடுத்தவர்களுக்கு ஏதாவது உதவி செஞ்சாத்தான் அது கிடைக்கும்.’’

‘‘என்ன சொல்றே நீ?’’

‘‘பூலோகத்துலே நீ செய்யுற புண்ணிய காரியங்கள் தான் சொர்க்கத்துலே நுழையறதுக்கான அனுமதிச் சீட்டு’’.

‘‘இப்ப நான் உள்ளே வர என்ன வழி?’’

‘‘பூலோகத்துலே நீ யாருக்காவது... ஏதாவது உதவி செஞ்சிருக்கியா?’’

பெரிய மனிதன் ரொம்ப நேரம் யோசித்தான். பிறகு சொன்னான்: ‘‘ஒரு முறை ஒரு கிழவிக்கு 10 காசு தானம் கொடுத்திருக்கேன். அப்புறம் இன்னொரு நாள் ஓர் அநாதைப் பையனுக்கு ஐந்து காசு கொடுத்திருக்கேன்.’’

‘‘கொஞ்சம் பொறு’’ என்று சொல்லிவிட்டு சித்ரகுப்தன் உள்ளே போனான். கொஞ்ச நேரம் கழித்து வெளியே வந்தான். ‘‘உள்ளே போய் சொர்க்கத்தின் தலைவர்கிட்டே உனது கதையைச் சொன்னேன். அவர் உடனே உத்தரவு போட்டுட்டார்’’.

‘‘என்ன உத்தரவு?’’

‘‘அந்தப் பதினஞ்சு காசை உன்கிட்டே திருப்பிக் கொடுத்துடச் சொன்னார்’’.

‘‘அப்புறம்?’’

‘‘உன்னை நரகத்துக்கே அனுப்பி வச்சுடச் சொன்னார்’’. பெரிய மனிதன் மயங்கி விழுந்தான்.

ஆன்மிக உலகில் பயணம் செய்கிறவர்கள் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான பாடம் இது . காசு கொடுத்து சொர்க்கத்தை வாங்க முடியாது. ஆனால், கருணையைக் கொடுத்து அதைச் சுலபமாக வாங்க முடியும்.

#நன்றி : தென்கச்சி கோ.சுவாமிநாதன்

Friday, June 7, 2024

மனைவிக்கு தெரியாமல் எதுவும் செய்யக்கூடாது!

 



ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக் கொண்டிருந்தனர்.

  கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது! வையத்தியரும் சொன்னதில்லை!

  மனைவியின் வேலை அலைந்து திரிந்து வரும் கணவருக்கு உணவு சமைத்து வைப்பது, பரிமாறுவது, கைகால்கள் அமுக்குவது போன்ற பணிவிடைகள் தான்! இப்படியே பல ஆண்டுகள் கழிந்து இருவருமே வயதாகி விட்டனர். ஆனாலும் தேடுவதை நிறுத்தவில்லை!

   ஒருநாள் வைத்தியர் வழக்கம் போல காட்டுக்குள் அலைந்து திரிந்து விட்டு வரும்போது அங்கே மனைவியைக்  காணவில்லை.  மாறாக இளம்பெண் ஒருத்தி நின்று கொண்டிருந்தாள்.

  வையித்திரை பார்த்ததும் சாஸ்டாங்கமாக விழுந்து சேவித்தாள். வைத்தியருக்கு ஒன்றும் புரிய வில்லை.  யாரம்மா நீ என்று கேட்டார்.  அதற்கு அந்த யுவதி நான்தான் உங்கள் மனைவி என்றாள்.   வைத்தியருக்கு மிகவும் குழப்பம்.  என்ன நடந்தது என்று கேட்க மனைவி நடந்ததை சொல்ல ஆரம்பித்தாள்.

 "  உங்களுக்காக கூழ் காய்த்து கொண்டிருந்தேன். காய்ச்சிய கூழை கலக்கும் கரண்டி உடைந்து விட்டது. அதனால் அங்கே கிடந்த ஒரு குச்சியை எடுத்து கலக்கினேன். கூழ் மொத்தமும் கருப்பாகி விட்டது. அந்த கூழை இறக்கி வைத்து விட்டு வேறு கூழ் காய்ச்சினேன். நீங்கள் வர தாமதமானதும் கருகி கிடந்த கூழை நான் குடித்து விட்டேன். குடித்த அரை நாழிகையில் எனது முதுமை போய் இப்படி இளைம் பெண் ஆகிவிட்டேன்" என்றாள் ! 

 

  வைத்தியர் பதறி அடித்து  போய்                " எங்கே அந்த குச்சி? இதை தானே நான் இத்தனை ஆண்டாக தேடிக்கொண்டிருந்தேன் " என்று கேட்க அதற்கு அந்த மனைவி 

"அதை தான் நான் அடுத்த கூழ் காய்ச்சும்போது அடுப்பில் வைத்து எரித்து விட்டேனே? " என்றாள்!

 

   வைத்தியர் நெஞ்சடைத்து மயங்கி சாய்ந்தார்!  

 

 நீதி 1. மனைவிக்கு தெரியாமல் எதுவும் செய்யக்கூடாது..  

 

நீதி 2.  ப்படி செய்தால் மனைவிக்கு தான் லாபம்..  

😀😃😄😁😆☺😊😇

Wednesday, July 12, 2023

உலகம் உனக்கு சொர்க்கமாகும் !

குரு ஒருவரிடம்  செல்வந்தர் ஒரு கேள்வி கேட்டார்...

என் மனம் மிகவும் குழப்பத்தில் இருக்கிறது. என் பணியாட்கள்கூட எனக்கு உண்மையாக இல்லை.

என் மனைவி, பிள்ளைகள் உள்பட உலகமே சுயநலக் கூட்டமாக உள்ளது. யாருமே சரியில்லை" என்றார்.

புன்னகைத்த குரு,  கதை ஒன்றைச் சொன்னார்...

"ஓர் ஊரில் ஆயிரம் கண்ணாடிகள் இருக்கிற அறை ஒன்று இருந்தது. அதற்குள் சென்று ஒரு சிறுமி விளையாடினாள். தன்னைச் சுற்றி ஆயிரம் குழந்தைகளின் மலர்ந்த முகத்தைக் கண்டு மகிழ்ந்தாள்.

அவள் கை தட்டியவுடன், ஆயிரம் பிம்பங்களும் கை தட்டின.
உலகிலேயே மகிழ்ச்சியான இடம் இதுதான்! என்று எண்ணி, அடிக்கடி அங்கே சென்று விளையாடினாள்.

அதே இடத்துக்கு ஒருநாள் மனநிலை சரியில்லாத ஒருவன் வந்தான். தன்னைச் சுற்றி ஆயிரம் கோபமான மனிதர்களைக் கண்டான்.

அச்சம் கொண்ட அவன், அந்த மனிதர்களை அடிக்க கை ஓங்கியவுடன், ஆயிரம் பிம்பங்களும் அவனை அடிக்க கை ஓங்கின. உலகிலேயே மோசமான இடம் இதுதான்! எனக் கூறி, அங்கிருந்து வெளியேறினான்.

இந்த சமூகம்தான் ஆயிரம் கண்ணாடிகள் இருக்கிற அறை.
நாம் எதை வெளிப்படுத்துகிறமோ அதையே சமூகம் பிரதிபலிக்கிறது.

உன் மனதை குழந்தையைப் போல் வைத்திரு..

உலகம் உனக்கு சொர்க்கமாகும்  என்றார் குரு...

 

Thursday, June 22, 2023

இந்த வேலை ! உங்கள் நேர்மைக்கும்! ஒழுக்கத்திற்கும்! நான் கொடுக்கும் பரிசு!

உலகுக்கே படியளக்கும் ஈசன் உமக்கு படியளக்க மாட்டாரா ???

காலை 11 மணிக்கு ஒரு பிரபலமான நிறுவனத்தில் நேர்காணலுக்கு அழைத்து இருந்தார்கள்.

  நிறுவனத்தின் பாதுகாப்பு அதிகாரியிடம் விவரத்தை கூறிவிட்டு ஹாலில் அமர்ந்து நேர்காணல் அழைப்புக்கு காத்திருந்தேன்.

சற்று நேரத்தில் முருகவேல் என்று அழைப்பு வந்தது.

உள்ளே சென்றவுடன் சில கேள்விகள் கேட்டு விட்டு உங்கள் பயோடேட்டாவில்  வயது 40 என்று இருக்கே நிஜமா ?

ஆமாம் சார் உண்மை தான்.

  அப்படியா ..? எங்கள் நிறுவனத்தில் இளைஞர்களை தான் வேலைக்கு எடுக்கின்றோம். உங்கள் வயது 40 என்று சொல்கிறிர். கொஞ்சம் யோசனை செய்ய வேண்டி இருக்கும் முருகவேல் என்றார்கள்.

பரவாயில்லை சார் நான் வேலை செய்ய தயாராக இருக்கிறேன் என்று கூறினேன்.

மேலும் இதற்கு முன் வேலை செய்த நிறுவனம் நஷ்டத்தில் இயங்கியதால் திடீர் என்று மூடிவிட்டார்கள். அதனால் வேறு வேலை தேடும் சூழ்நிலை உருவாகிவிட்டது சார்..

அந்த அதிகாரி சற்று யோசிப்பது போல் பாவனை செய்து விட்டு . முருகவேல் உங்கள் பயோடேட்டாவை கொடுத்து விட்டு செல்லுங்கள் தேவைப்படும்போது அழைக்கின்றோம் என்றார்.

மிக்க நன்றி சார் என்று கூறி விட்டு வெளியே வந்தேன்.இங்கும் வேலை இல்லை.

மனம் கனத்தது கூடவே தலையும் வலித்தது. பெரும்பாலான இடங்களில் வயதை காரணம் காட்டி தவிர்த்து விடுகிறார்கள்.

இறைவா என்ன சோதனை...

அனைத்தும் நல்லபடியாக தான் போய்க்கொண்டு இருந்தது முன்பு வேலை செய்த நிறுவனம் மூடும் வரை.. அந்த வேலையை நம்பி வாங்கிய கடன்கள் கழுத்தை நெறிக்க தொடங்கியது..

ஒரே மகனின் படிப்பு செலவு , வீட்டுக்கு தேவையான செலவு மேலும்.. மேலும்.. ஐயனே ஈசனே எப்படி சமாளிக்க போகிறேன்.

தலை மேலும் வலித்தது. பேருந்துக்கு வைத்து இருக்கும் காசில் காபி சாப்பிட்டு நடந்து வீட்டுக்கு செல்லலாம் என்று முடிவு செய்து காபி சாப்பிட்டு நடக்க துவங்கினேன். வாங்கிய வண்டியும் ஒரமாக இருக்கிறது.

ஆழ்ந்த சிந்தனையில் நடந்து செல்லும்போது ரோட்டின் ஓரத்தில் ஒரு தோல் பை அனாதையாக கிடந்தது.

சின்னதாக ஒரு சபலம் எடுத்து திறந்து பார்த்தேன் . குப்பென்று வியர்த்து கொட்டியது.

பையில் கட்டு கட்டாக 2000 ரூபாய் நோட்டுகள்.. கை கால்கள் உதறல் எடுத்தது. இருப்பினும் எடுத்து வைத்து கொண்டேன்.

மனம் பலவிதமாக என்னுள் பேசியது. ஒரு பக்கம் எச்சரிக்கை செய்தது. அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்து விடலாம் என்ற எண்ணம் தோன்றியது.

ஆனாலும் கட்ட வேண்டிய கடன்களும் , குடும்ப செலவுகளும் கண் முன்னே நின்று பயமுறுத்தியது.

வீடு வந்து சேரும் வரை மனச்சத்தங்கள் ஏராளம் , உடல் முழுவதும் வியர்வை ஊற்றியது. வீட்டில் உள்ள அலமாரியில் பணத்தை பத்திரமாக வைத்தேன்.

வெளியே சென்று திரும்பிய மனைவி என்னங்க ஒரு நடுக்கமா இருக்கறிங்க என கேட்டாள்.

வள்ளி அந்த கதவை சாத்திட்டு உள்ளே வா என்றேன்.

நடந்த விவரங்களை சொல்லி . யாராவது கேட்பார்கள் என்று திரும்பி, திரும்பி பார்த்தேன் யாரும் வரவில்லை , எனப் பொய் கூறினேன். பணத்தை எண்ணி பார்த்தேன் மொத்தமாக 12 லட்சம்.

வள்ளி சில மாதங்கள் வேலை கிடைக்கும் வரை நமக்கு கவலை இல்லை.நம் செலவுக்கு இது போதும் என்றேன்.

மனைவி அமைதியாக இருந்தாள். ஏதாவது பேசு என்றேன்.

இந்த பணம் நமக்கு வேண்டாங்க என்றாள் மனைவி.

வள்ளி என்ன பேசுற நீ இறைவனா பார்த்து தான் நமக்கு துன்பங்கள் தீர வழி காட்டி இருக்காரு..

உங்க அல்ப புத்திக்கு இறைவன் மேல் பழிபோடாதீங்க என்றாள்.

வள்ளி எனக்கு இன்னும் வேலை கிடைக்கல கட்ட வேண்டிய கடன்களும் செலவுகளும் கழுத்தை நெரிக்க ஆரம்பித்துவிட்டது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த பணம் நமக்கு எவ்வளவு உதவியாக இருக்குமே நினைத்து பார் வள்ளி.

  இன்னொருவர் பணத்தில் வாழ்வது தப்புங்க. அதுக்கு பதிலா இருவருமே கஷ்டப்பட்டு சம்பாதிக்கலாம் என்றாள் மனைவி.

அப்போ வீட்டு செலவுக்கு என்னதான் நான் செய்வேன் என்று கோபமாய் குரலை உயர்த்த..

இறைவன் சோதிபாருங்க ஆன கைவிடமாட்டார். என்று கூறி டக்கென்று கழுத்திலிருந்த தாலியை கழற்றி இதை விற்று விடுங்கள் எனக்கு மஞ்சள் கயிறு போதும் என்றாள்.

வள்ளி என அதிர்ந்து விட்டேன்.

அடுத்தவங்க பணத்துல வயிற்றை நிரப்பிக் கொள்வதைவிட இது எவ்வளவோ மேலுங்க. இந்த பணம் யாருக்கு சொந்தமோ அவர்களிடம் கொடுத்து விட்டு தான் நீங்கள் வீட்டில் நுழைய வேண்டும் என்று ஓடி கதவை சாத்திக்கொண்டு அழ ஆரம்பித்தாள்.

மனைவியின் தாலி கையில் கனத்தது. பணப்பையில் ஆராய்ந்து பார்த்தேன் முகவரி இருந்தது.

அந்த பங்களாவுக்கு நான் நுழைந்த போது கோயிலில் நுழைந்த உணர்வு. மெல்லிய ஓசையில் சிவனைப் பற்றி பாடல்கள்.

அழைப்பு மணியை அடித்தேன். நெற்றி நிறைய விபூதியுடன் ஒரு பெரியவர் வந்து பார்த்தார்.

நடந்த விவரங்களை அவரிடம் கூறி பணப்பையை கொடுத்தேன். மகிழ்ந்த அவர் உள்ளே அழைத்து சென்று குளிர்பானம் கொடுத்து உபசரித்தார்.

தம்பி நிறுவனத்தில் இருந்து காரில் வரும் போது பணப்பை தவறி விழுந்தது விட்டது. திரும்பி தேடி செல்லும் போது கிடைக்கவில்லை.

உங்களை போல் நல்லவர்களும் இருக்கிறார்கள் . அதான் தவறவிட்ட பணம் திரும்ப வந்து விட்டது என்றபடி என்னை பற்றிய விவரங்களை கேட்டார்.

என்னுடைய சூழ்நிலை பற்றிய விவரங்களை கூறினேன்.

அப்படியே யோசித்து தம்பி கொஞ்சம் இருங்கள். இதே ஒரு போன் செய்து விட்டு வருகிறேன் என்று உள்ளே சென்றார்.

திரும்பி வந்தவர் தம்பி என்னோட நிறுவனத்தில் வேலை செய்ய உங்களுக்கு விருப்பமா? அடுத்த வாரம் எங்கள் மேலாளர் ஓய்வு பெறுகிறார். அவரோட இடத்தில் யாரை நியமிப்பது என நினைத்து கொண்டு இருந்தேன்.

நீங்கள் ஏன் அந்த வேலையில் சேரக்கூடாது?

நீங்கள் நாளைக்கு சேர்ந்து நிறுவனத்தில் டிரைனிங் எடுங்கள். வேலைக்கான உத்தரவு கடிதம் இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்து விடும்.

வேறு யாராவது உங்களுடைய சூழ்நிலையில் இருந்து இருந்தால் இந்த 12 லட்சம் பணம் திரும்ப வந்து இருக்காது.

இந்த வேலை உங்கள் நேர்மைக்கும் ஒழுக்கத்திற்கும். நான் கொடுக்கும் பரிசு என்றார்.

நமச்சிவாயா !!!  என் கண்ணில் கண்ணீர். கண்ணீரில் ஆயிரம் நன்றிகள் என் மனைவி வள்ளிக்கு...

  அந்த வீட்டின் ஒலிநாடாவில் குரு உபதேசம் மெல்லியதாக கேட்டது. "மூவுலகையும் ஆளும் சிவபெருமான் சோதிப்பான் ஆனால் நம்பியோரை கைவிட மாட்டார்." என்று கேட்டது.

அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில் போஓய்ப் பெறுவ தெவன்.
          (குறள்)

அறநெறியில் இல்வாழ்க்கை அமைத்துக் கொண்டவர்கள் பெற்றிடும் பயனை, வேறு நெறியில் சென்று பெற்றிட முடியுமோ ???

ஓம் நமசிவாய 🙏


Monday, May 18, 2020

வாழ்க்கையில் எதுவும் நிரந்தரம் இல்லை !

வாழ்க்கையில் எதுவும் நிரந்தரம் இல்லை ?

 


கந்தசாமி என்ற ஏழை ஒருவர் திடீரென ஒருநாள் இறந்துவிடுகிறார். அவர் தான் இறந்துவிட்டதை உணரும் போது, கையில் ஒரு பெட்டியுடன் கடவுள் வந்து அவருக்கு காட்சி தருகிறார்.


அப்போது அவரின் அருகில் வந்த கடவுள் அவரிடம், மகனே.. நீ என்னுடன் வருவதற்கான நேரம் வந்துவிட்டது. இப்போது நீ என்னுடன் வர வேண்டும் புறப்படு என்று கூறுகிறார்.


அதற்கு கந்தசாமி, இப்பொழுதா? இவ்வளவு சீக்கிரமாகவா? என்னுடைய திட்டங்கள் எல்லாம் என்ன ஆவது? என்று கடவுளிடம் கேட்கிறார்.


அதற்கு கடவுள் மன்னித்துவிடு மகனே! உன்னை கொண்டு செல்வதற்கான நேரம் இது என்று கூறிவிட்டார். 


பிறகு கந்தசாமி, அந்த பெட்டியில் என்ன உள்ளது என்று கடவுளிடம் கேட்டார். அதற்கு கடவுள் உன்னுடைய உடைமைகள் தான் என்று பதிலளித்தார்.


உடனே கந்தசாமி ஆச்சரியத்துடன், என்னுடைய உடைமைகளா...என்னுடைய பொருட்கள், உடைகள், பணம் எல்லாமே இதில்தான் உள்ளதா? என ஆவலுடன் கடவுளிடம் கேட்கிறார்.


நீ கூறியவை அனைத்தும் உன்னுடையது அல்ல, அவைகள் பூமியில் நீ வாழ்வதற்கு தேவையானது மட்டுமே என்று கூறுகிறார். அப்படியானால் என்னுடைய நினைவுகளா என கந்தசாமி மீண்டும் கேட்கிறார்.


அதற்கு கடவுள், அவை காலத்தின் கோலம் என்று கூறுகிறார். கந்தசாமி மீண்டும் என்னுடைய திறமைகளா? என்று கடவுளிடம் கேட்கிறார். அவை உன் சூழ்நிலைகளுடன் சம்பந்தப்பட்டது என்று சொல்கிறார்.


அப்படியென்றால் என்னுடைய குடும்பமும் மற்றும் நண்பர்களா? என்று கடவுளிடம் கேட்கிறார். அதற்கு கடவுளும் இல்லை மகனே குடும்பமும், நண்பர்களும் நீ வாழ்வதற்கான வழிகள் மட்டுமே என்று சொல்கிறார்.


பிறகு சிறிது நேரம் யோசித்த கந்தசாமி, கடவுளிடம் என் மனைவி மற்றும் மக்களா என கேட்கிறார். அதற்கு கடவுள், உன் மனைவியும், மக்களும் உனக்கு சொந்தமானவர்கள் அல்ல. அவர்கள் உன் இதயத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமே என்று சொல்கிறார்.


சரி, என் உடலா என கேட்க, கடவுள் அதுவும் உனக்கு சொந்தமானதல்ல என்று கூறுகிறார்.


வேறு என்ன என் ஆன்மாவா என்று கேட்கிறார். அதுவும் உன்னுடையது அல்ல. அது என்னுடையது என்று கூறுகிறார். பிறகு கந்தசாமி மிகுந்த பயத்துடன் கடவுளிடமிருந்து அந்தப்பெட்டியை வாங்கி திறந்து பார்த்தார்.

பெட்டியை திறந்து பார்த்த கந்தசாமி மிகவும் அதிர்ச்சியடைந்தார். 

ஏனென்றால், அது வெறும் காலி பெட்டியாக இருந்தது. கண்ணில் நீர் வழிய கடவுளிடம், எனக்கு, என்னுடையது என்று எதுவுமே இல்லையா என்று கேட்டார்.


அதற்கு கடவுள், அதுதான் உண்மை. நீ வாழ்ந்த ஒவ்வொரு நொடி மட்டுமே உன்னுடையது. வாழ்க்கை என்பது நீ கடக்கும் ஒரு நொடிதான். ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ வேண்டும். எல்லாமே உன்னுடையது என்று நினைக்காதே. ஒவ்வொரு நொடியும், உன்னுடைய வாழ்க்கையில் நிரந்தரமாகும் என்று கூறிவிட்டு கடவுள் மறைந்தார்.


நீதி :
 

நம் இறுதி காலத்தில் நாம் எதையும் நம்முடன் கொண்டு போக முடியாது. அதனால், வாழ்கின்ற ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம்.

Wednesday, April 8, 2020

பாசப்போராட்டம்

சிறுகதை

என்னங்க மூட்டை !

ஒண்ணுமில்ல. ரேசன் கடையில ஆயிரம் ரூபா குடுத்தாங்க அதான் கொஞ்சம் மளிகை சாமான் வாங்கிட்டு வந்தேன்

ஓடிவந்து மூட்டையைக் பிரிக்கும் மனைவியை அதட்டினார்

ஏய் அத எடுக்காத இது நமக்கு இல்ல. இது நம்ம பொண்ணு வீட்டுக்கு

ஏன் நமக்கு வாயும் வயிறும் இல்லையா. உங்க பொண்ணுக்கு மட்டும் தான் வாயும் வயிறும் இருக்குதா. ஆயிரம் ரூபா வாங்கிட்டு வந்துருக்கீங்க. மீதிய குடுங்க

இதுவே 1400 ரூபாய் ஆச்சு, 400 ரூபாய் கடன் சொல்லிட்டு வந்திருக்கேன்

அப்போ எனக்கு ஆஸ்துமா மாத்திரை வாங்கலே. அந்த உறிஞ்சிர மிசினு இன்னும் வாங்கல அதானே

வாங்கிக்கலாம். எப்படியும் காசு வரும்போது உனக்கு வாங்கி தரேன். உனக்கு வாங்கித் தராம வேற யாருக்கு வாங்கி தர போறேன்

அய்யோ வாங்கி கொடுத்தாலும், நான் ஆறு மாசமா கேட்டுட்டு இருக்கேன். மூச்சு விட முடியல. கஷ்டமா இருக்குன்னு சொல்லிட்டு இருக்கேன். அதை வாங்கி கொடுக்க முடியல. 1000 வா வாங்கி அப்படியே மகளுக்கு மளிகை சாமான் வாங்கிட்டு வந்துட்டீங்க

எப்படி போவீங்க பஸ் இல்ல. ட்ரெயின் இல்ல. ஆட்டோவும் கிடையாது.எப்படி போவீங்க.

சைக்கிள் ல போவேன்

ஏன் பாதிலேயே வெய்யில்ல சுருண்டு விழுந்து சாகுறதுக்கா

நல்ல வார்த்தையே பேச மாட்டியா நீ

இப்ப போக வேணாம் நாளைக்கு காலைல போய் குடுத்துக்கலாம்

இல்லல்ல நான் இப்பவே கிளம்புறேன்

போங்க. போலீஸ்காரன் சாமானையும் சைக்கிளையும் புடுங்கி வச்சுகிட்டு, உங்களை தோப்புக்கரணம் போட சொல்லுவானோ, குட்டிக்கரணம் போட சொல்லுவானோ. நடந்து தான் வரப் போறீங்க

நல்ல வார்த்தையே பேச மாட்டியா

அய்யய்யோ துரை போருக்கு போறாரு. நல்ல வார்த்தை சொல்லி அனுப்பனும்.

சரி கிளம்பனும் பழைய சோறு இருந்தா கொடு

அதான் மக வீட்டுக்கு போறீங்கள்ள. உங்க மக சமைச்சு வச்சிருப்பா. அங்கே போய் சாப்பிட்டு வாங்க

சரி நான் கிளம்புறேன்

சொன்னா கேக்க மாட்டீங்க. பட்டா தான் உங்களுக்கு புத்தி வரும்.போலீஸ்காரன் உங்கள அடிச்சு உதைச்சு அனுப்பும்போது தான் நான் சொன்னது ஞாபகத்துக்கு வரும்

அவர் சைக்கிளில் எல்லா மளிகை சாமான்களையும் மூட்டையாக கட்டி, பின்பக்கம் வைத்துக் கொண்டு கிளம்பினார்

ஒரு ஐந்து கிலோமீட்டர் வந்திருப்பார்.அங்கே சாலையில் தடுப்பு அமைத்து ஜிப்போடு போலீஸ்காரர்கள் நின்று கொண்டிருந்தார்கள்.
மனைவி சொன்னது போல் போலீஸ்காரர்கள் சாமானையும் சைக்கிளையும் பிடிங்கி கொள்வார்களோ. தோப்புக்கரணம் போடச் சொல்லி போட்டோ எடுத்து டிவியில் போடுவார்களோ.தெரியாமல் வந்து விட்டோமோ.
பயம் தொற்றிக் கொண்டது.

அவர் அருகில் சென்றபோது ஒரு போலீஸ்காரர் தடுத்து நிறுத்தினார்

என்னா பெருசு எங்க கிளம்பிட்டே

ஐயா அயனாவரம் வரை போறேங்கய்யா. மக வீட்டுக்கு மளிகை சாமான் வாங்கிட்டு போறேங்கய்யா

சைக்கிளை ஓரமாக நிறுத்து.  அந்த மூட்டைய தூக்கிட்டு வா

அவ்வளவுதான் 1,400 ரூபாய் மளிகை சாமான் போக போவுது

மிதிவண்டியை நிறுத்தி ஸ்டாண்ட் போட்டு, மளிகை சாமான் மூட்டையை இறக்கி கீழே வைத்தார்

யோவ் பெருசு அந்த ஜீப்புக்குள்ள இன்ஸ்பெக்டர் உக்காந்திருக்காரு அவரை போய் பாரு

அவர் போலீஸ் வண்டியை நோக்கி நடந்தார். வண்டியில் வாட்டசாட்டமாய் கூலிங் கிளாஸ் போட்ட பெரிய மீசை வைத்திருந்த அந்த இன்ஸ்பெக்டர் அமர்ந்திருந்தார்

என்ன பெரியவரே எங்க கிளம்பிட்டீங்க

ஐயா அயனாவரம் வரை போறேங்கய்யா. பொண்ணு அங்க இருக்கு.  மாப்பிள்ளை டிரைவரா இருக்காரு. வேலை இல்ல. அதான் கவர்மெண்ட் கொடுத்த ஆயிரம் ரூபாயில கொஞ்சம் மளிகை சாமான் வாங்கிட்டு போறேங்கய்யா

ஊர்ல தடை போட்டுருக்காங்க தெரியாதா பெரியவரே

தெரியுங்கய்யா. ஆனா நாலு உசுரு அங்க சோத்துக்கு இல்லாம கஷ்டப்படுமே. அதனாலதான் இத போயி கொடுத்துட்டு வந்துடலாம்னு கெளம்பினேய்யா

என்ன வயசு ஆகுது பெரியவரே உங்களுக்கு

63 வயசு ஆகுதுங்கய்யா

அருகில், நடு சாலையில் பத்துப் பதினைந்து இளைஞர்கள் தோப்புக்கரணம் போட்டுக் கொண்டிருந்தார்கள். இவருக்கு மனசு பிசைந்தது. நடுக்கம் வந்தது.

கான்ஸ்டபிள் வந்தார்.

சார் இந்த ஆள் கொண்டு வந்த மூட்டைய சீஸ் பண்ணிட்டேன் சார்

உன் வயசென்னை அவரு வயசு என்ன ஆளுன்ற

சாரி சார்

அந்த கான்ஸ்டபிள் தள்ளி போய் நின்று கொண்டார்.

பெரியவரே சாப்பிட்டீங்களா

இல்லீங்க சார்

கான்ஸ்டபிள் அந்த சாப்பாடு பொட்டலத்துல ஒண்ணு  எடுத்து குடு

ஐயா எனக்கு வேண்டாய்யா. நான் மகள் வீட்டுல போய் சாப்பிடுகிறேன்

 சாலையில் தோப்புக்கரணம் போட்டுக் கொண்டிருந்த இளைஞர்களில் ஒருவன் ஏதோ சொல்ல,

சட்டமா பேசறே என்று ஒரு கான்ஸ்டபிள் அவனை முதுகில் அடித்தார்

அங்க போய் கறியும் சோறும் தின்னுங்க.  இது சும்மா பிரிஞ்ஜி தான்.  சாப்பிட்டுக்கங்க. வெயில்ல எப்படி சைக்கிள் மிதிப்பீங்க

சாப்பிட்ட பின் தோப்புக்கரணம் போட சொல்வார்களோ

ஜீப் மைக் கர கரவென்று பேசிக்கொண்டே இருந்தது.

நாளைக்கு காலையில் சீக்கிரமா கிளம்பி போயிருக்கலாம் என்று நினைத்துக்கொண்டார்.
கான்ஸ்டபிள் எடுத்து வந்து கொடுத்த ஒரு பொட்டலத்தையும் ஒரு தண்ணீர் பாட்டிலையும் வாங்கிக்கொண்டார்.

பெரியவரே அதோ ரூம் இருக்குல்ல. அங்க உக்காந்து சாப்பிடுங்க.
இன்ஸ்பெக்டர் சொன்ன இடத்தில் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தார்

பெரியவரே நல்லா சாப்பிடுங்க இன்னொரு பொட்டலம் வேணுமா

இன்ஸ்பெக்டர் கேட்க, அவர் வேண்டாம் என்று தலையாட்டினார்.

சாப்பிட்டு தண்ணீர் குடித்து கை கழுவினார். பரவாயில்லை வயிறு ரொம்பிடுச்சி. இப்ப முட்டி போடலாம். தோப்புக்கரணம் போடலாம்.

பெரியவரே சாப்பிட்டீங்களா

சாப்பிடங்கய்யா

ஜீப்ல கொண்டு வந்து உங்க மகள் வீட்டுல விடட்டுமா

ஐயா வேண்டாங்கய்யா நான் போயிடுவேங்கய்யா

சரி இந்த பனியனை போட்டுக்கோங்க. இந்த தொப்பிய போட்டுக்கோங்க. இது வாலண்டியர்ஸ்  போட்டுக்கறது. அரசாங்கம் கொடுக்கிற பணத்தை வாங்கினமா தண்ணி அடிச்சமா தலைகுப்புற விழுந்தமான்னு இல்லாம, நாலு உசுருக்கு சோறு போட சாமான் வாங்கிட்டு போறீங்களே. நீங்க தான் உண்மையான வாலண்டியர்.
 இந்த பனியனை  போட்டுக்கோங்க. பத்திரமா போயிட்டு வாங்க.

அது கனவா நனவா என்று நம்ப முடியாமல் பனியனை வாங்கி மாட்டிக்கொண்டார்.

இன்ஸ்பெக்டருக்கு இரண்டு கை குவித்து வணக்கம் வைத்தார்.
 சைக்கிளில் ஏறி, மகள் வீட்டை நோக்கி சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தார்.
*
அப்பா எப்படி வந்தீங்க. எதுக்குப்பா சைக்கிள்ல வந்தீங்க. கை கழுவுங்க. 

பேரன்கள் ஓடி வந்து கட்டிக் கொண்டார்கள்.

பேரன்களை அணைத்து உடனே தள்ளிப் போகச் சொன்னார்.

மகள், அவர் வாங்கி வந்த பொருட்களை எடுத்து உள்ளே வைத்துவிட்டு

என்னப்பா தனியா வந்துருக்கீங்க அம்மாவை கூட்டிட்டு வந்து இருக்கலாம்ல

இல்லம்மா. இன்னொரு நாளைக்கு  கூட்டிட்டு வரேன். நான் கிளம்பட்டுமா. இங்க இருக்கிறது அவ்வளவு நல்லது இல்லம்மா. நான் வீட்டுக்கு போயிடுறேன். உங்க அம்மா தனியா இருக்கும்.

அப்பா சாப்பிட்டு போங்கப்பா. சாப்பாடு ரெடியா இருக்குப்பா

நான் சாப்பிட்டேன்மா

ஏதுப்பா இந்த பனியன் நீங்க வாலண்டியரா இருக்கீங்களா

நடந்த எல்லா விஷயங்களையும் மகளிடம் சொன்னார்

பேரன்களை அழைத்து அவர்களுக்கு காசு கொடுத்து விட்டு கிளம்பினார்

மகள் ஒரு பையோடு வந்தாள்.

அப்பா  பையில கொஞ்சம் பழங்கள் இருக்கு. எடுத்துட்டு போயி அம்மாகிட்ட கொடுங்கப்பா. அம்மாவுக்கு ரோட்ஹெலர் மெஷின் வாங்கினேன். அத கொடுத்துடுங்கப்பா.  அம்மாவுக்கு ஆஸ்துமா மாத்திரை வாங்கி இருக்கேன் அதையும் மறக்காம குடுத்துடுங்கப்பா.

பையை வாங்கிக்கொண்டார்.

மாப்பிள்ளை எங்கம்மா

அப்பா அரசாங்கத்துல  காய்கறி எல்லாம் வண்டியில் போய் விக்க சொல்லியிருக்காங்க. அதான் ஒரு காய்கறி வண்டியில டிரைவரா போயிருக்காருப்பா

இந்த ஆஸ்துமா மெஷினுக்கும்,'ஆஸ்துமா மாத்திரைக்கும் ஏதும்மா காசு

போன மாசம் சம்பளத்திலேயே இது இரண்டும் வாங்கி வச்சுட்டேன் பா

அவர் சைக்கிளை எடுக்க வீட்டை விட்டு வெளியே வந்தபோது மகள் ஓடிவந்து அவர் சட்டைப்பையில்  இரண்டு ஐநாறு ரூபாய் நோட்டுகளை வைத்தார்

அப்பா எங்களுக்கும் நேத்து தான் அரசாங்கத்திலிருந்து ஆயிரம் ரூபாய் கொடுத்தாங்க. நேத்து நைட்டு உங்க மாப்பிள்ளை சொல்லிட்டாரு, உங்க அப்பா அம்மாக்கு கொடுத்துடு. நம்ம ஏதாவது வேலை செஞ்சி சம்பாரிச்சுக்கலாம். வயசானவங்க என்ன பண்ணுவாங்கன்னு சொன்னாருப்பா.

சரிம்மா. மாப்பிள்ளைய கேட்டேன்னு சொல்லு. பத்திரமா இருங்கம்மா.

அவர் உயிரை தன் மகள் வீட்டில் வைத்து விட்டு மிதிவண்டியில் ஏறி தன் வீட்டை நோக்கி மிதிவண்டியை இயக்க ஆரம்பித்தார்.
 
- புஷ்பா ராஜ்குமார்

சொர்க்கத்துலே நுழையறதுக்கான அனுமதிச் சீட்டு !

  ஒரு பெரிய மனிதன். இந்த உலகத்தில் மிகவும் வசதியாக வாழ்ந்தான். ஒரு நாள் அவன் உலக வாழ்க்கையை முடித்துக் கொண்டு சொர்க்கத்துக்குப் போனான். அங...