Total Pageviews

Tuesday, November 21, 2017

சுதந்திரம் !


ஒழுக்கம் !

அப்பாவும், மகளும் சேர்ந்து பட்டம் விட்டுக் கொண்டிருந்தார்கள். அப்பா கேட்டார்,

“செல்லம்!.. நூலோட வேலை என்னன்னு சொல்லு பார்க்கலாம்?”

பொண்ணு  கொஞ்சமும் தாமதிக்காமல் சொன்னாள் “நூல்தாம்ப்பா பட்டத்தை இழுத்துப் பிடிச்சிருக்கு”.

அப்பா சொன்னார், “இல்லை மகளே நூல்தான் அதைப் பறக்க வச்சிகிட்டு இருக்கு”

மகள் சிரித்தாள். அப்பா ஒரு கத்தரியால் நூலை வெட்டினார். முதலில் பட்டம் விடுபட்டு தாறுமாறாகப் பறந்தது. கொஞ்ச நேரத்தில், சற்று தூரம் தள்ளி கீழே போய் விழுந்தது.

“ஒழுக்கம் இப்படியானதுதான் மகளே!. அது உன்னை இழுத்துப் பிடித்திருப்பதாக நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய். அதிலிருந்து அறுத்துக் கொண்டால் சுதந்திரம் என்று நினைத்திருக்கிறாய். ஆனால் அந்த சுதந்திரம் ரொம்ப தாற்காலிகமானது. சீக்கிரமே கீழே விழுந்து விடுவாய்.

ஒழுக்கம்தான் உன்னைக் கொடி கட்டிப் பறக்க வைத்துக் கொண்டிருப்பது. உன்னை அதிலிருந்து அறுத்துக் கொள்ளாதே” என்றார்

ஏமாற்றுதல்! ஏமாற்றதே ! ஏமாறாதே !


ரொட்டிக் கடை வைத்திருந்தார் ஒருவர். அவர் கடைக்கு வெண்ணெய் சப்ளை செய்பவர் மீது அவருக்கு வெகுவாக சந்தேகம். தன்னை அவர் ஏமாற்றுவதாக வருத்தம் இருந்தது. அரை கிலோ வெண்ணெய் என்று அவர் தருவது அரை கிலோவே இல்லை. எடை குறைவாக இருக்கிறது என்று குற்றம் சாட்டினார்.


சண்டை முற்றி ஒரு நாள் நீதிபதி முன் வழக்கு வந்தது.

வெண்ணெய் வியாபாரி தன்னிடம் கொடுத்த வெண்ணெய் பொட்டலத்தை நீதிபதி முன் நிறுத்துக் காட்டிய ரொட்டிக் கடைக்காரர்,

"பாருங்கள் 450 கிராம் தான் இருக்கிறது. இப்படித்தான் என்னை பலமுறை ஏமாற்றி இருக்கிறார். இவரை தண்டியுங்கள்" என்று கூச்சலிட்டார்.

நீதிபதி வெண்ணெய் வியாபாரியை பார்த்து "என்ன சொல்கிறீர்கள். ஒவ்வொரு முறையும் 50 கிராம் குறைவாகத் தரலாமா? அது குற்றமில்லையா?"என்று கேட்டார்.

"ஐயா.. என்னிடம் எடைக்கல் கிடையாது. அதனால் 500 கிராம் எடையுள்ள பொருள் ஏதேனும் ஒன்றை எடைக் கல்லுக்குப் பதிலாக பயன்படுத்துவது வழக்கம். பெரும்பாலும் இவரது கடை ரொட்டியைத் தான் வாங்குகிறேன். அதையே அவ்வாறு பயன்படுதுவேன். பாக்கெட் மீது எடை 500கிராம் என்று எழுதப்பட்டிருப்பதை நம்பி இவரது ரொட்டியை எடைக் கல்லுக்குப் பதிலாக தராசில் பயன்படுத்துவேன். இப்போது பாருங்கள் என் வெண்ணெயும் அவரது ரொட்டியும் சம எடையாக இருக்கும்." என்று தராசில் இரண்டையும் எதிர் எதிராக வைத்தார்.

சமமாக இருந்தது.

நீதி: எல்லோரும் பிறர் தன்னை ஏமாற்றக் கூடாது என்று நினைக்கிறார்களே ஒழிய தானும் பிறரை ஏமாற்றக் கூடாது என்று ஏன் நினைப்பதில்லை.


Friday, November 17, 2017

குயவனும் ஒரு வைரம் தீட்டுபவனும் !

ஒரு ஊரில் ஒரு குயவனும் ஒரு வைரம் தீட்டுபவனும் அருகருகே வாழ்ந்து வந்தார்கள். இருவரும் தத்தம் தொழிலில் சிறந்தவர்கள். அவர்கள் செய்யும் பொருட்களை பல ஊர்களிலும் உள்ள மக்கள் விரும்பி வந்து வாங்கிச் சென்றனர்.

குயவனிடம், வைரம் தீட்டுபவன் ஒரு நாள் "எப்படி இருக்கிறாய்? உன் வேலை எப்படிப் போகிறது?" என்று கேட்டான்.

குயவன் "அட போப்பா! எனக்குக் களிமண்ணில் வேலை.. நாளெல்லாம் சகதியை மேலே அப்பிக் கொண்டு ... கையெல்லாம் அழுக்காக்கிக் கொண்டு வேலை செய்ய வேண்டியிருக்கிறது. உன்னைப் போல வெள்ளையும் சள்ளையுமாகவா இருக்க முடிகிறது? அலுப்புத் தட்டுகிறது போ!" என்று கொட்டாவி விட்டான்.

அதற்கு வைர வியாபாரி சொன்னான் "உனக்கு என்ன தெரியும் என் வேலையைப் பற்றி... நாளெல்லாம் வைரத்தைத் தீட்டுகிறேன் என்று எத்தனை முறை நான் என் கையை அறுத்து ரத்த காயப் படுத்திக் கொள்கிறேன் தெரியுமா உனக்கு? உன் வேலையில் இந்த ஆபத்தெல்லாம் கிடையாதே. வேலை செய்து கையெல்லாம் புண்ணாகிப் போனதுதான் மிச்சம். இன்றும் நாள் முழுவதும் இந்த வேலையைத்தான் ஆபத்து என்று தெரிந்தே செய்ய வேண்டும்..." என்று அலுத்துக் கொண்டே புண்ணாகிப் போன தன் கைகளைக் காட்டினான்.

எல்லோருக்கும் அவரவர் வேலையில் மகிழ்ச்சி இல்லையா? மகிழ்ச்சியான வேலைதான் எது? என்று இருவரும் சிந்தித்தார்கள். அவர்களுக்கு எதுவும் பிடிபடவில்லை.

ஊரில் எல்லோரும் மதித்து நடக்கும் சிந்தனையில் சிறந்த பெரியவர் ஒருவர் இருந்தார். இருவரும் அவரிடம் சென்று "ஐயா எங்கள் வேலையில் அலுப்பும் ஆபத்தும்தான் தெரிகிறது? எப்போதும் மகிழ்ச்சியாகச் செய்யக் கூடிய வேலை ஏதாவது இருந்தால் சொல்லுங்கள்" என்று கேட்டார்கள்.
பெரியவர் புன்னகைத்துக் கொண்டே "உங்கள் இருவருக்கும் நீங்கள் செய்வதைத் தவிர வேறு வேலை ஏதாவது தெரியுமா?" என்று கேட்டார்.

அவர்கள் தத்தம் வேலைகளை மட்டுமே தமக்குச் செய்யத் தெரியும் என்று பதில் கூறினார்கள்.

"உலகிலே மண்பாண்டங்களும், தீட்டிய வைரங்களும் இயற்கையாகவே கிடைத்தால் என்ன நடக்கும்?" என்று அவர்களிடம் கேட்டார்.

"எங்கள் வேலைக்கே மதிப்பில்லாமல் போய்விடும்!" பயத்துடன் பதில் சொன்னார்கள்.

"அப்படியானால் உங்கள் வேலைக்கு என்ன மதிப்பு?" பெரியவர் கேட்டார்.

"களிமண்ணை பாண்டமாக உருவாக்குவதும், இயற்கையில் கிடைக்கும் வைரத்தை மின்னல் போல் பளபளக்கச் செய்வதும்தான்" என்று இருவரும் சொன்னார்கள்.

"உலகில் குறைகள் இருப்பதால்தான் உங்கள் இருவருக்கும் வேலை இருக்கிறது. அந்தக் குறைகளை நிறை செய்யும் திறமை உங்களுக்கு இருப்பதால் உங்களை மக்கள் மதிக்கிறார்கள். அந்தத் திறமை மற்றவர்களை விட உங்களுக்கு அதிகமாக இருப்பதால்தான் உங்களைத் தேடி வருகிறார்கள். நீங்கள் அதைப் பெரிதாக நினைக்காமல், குறைகளால் ஏற்படும் வருத்தங்களைப் பெரிதாக நினைக்கிறீர்கள். 
 
மகிழ்ச்சியும் மகிழ்ச்சியின்மையும் உங்கள் நோக்கிலேயே இருக்கிறது. செய்யும் வேலையில் இல்லை. குறைகளை அவற்றை நிறை செய்யும் வாய்ப்பாகப் பார்ப்பவன் மகிழ்ச்சியுடன் இருக்கிறான். குறையை அதில் உள்ள சிரமங்களாகப் பார்ப்பவன் வருத்தத்துடன் இருக்கிறான்" என்று முடித்தார்

விவாகரத்து ! ...................விட்டுக் கொடுத்தால் வாழ்க்கை பந்தம் என்றென்றும் அறுபடாது.

புதுமணத் தம்பதிகள் அவர்கள்.
கடுமையான கருத்து வேறுபாடு.
விவாகரத்தில் போய் நிற்கிறது.



யார் யாரோ சமாதானம் செய்தும் அவர்கள் இருவரும் சமரசம் ஆகவில்லை.
ஒரு நாள் ஓர் உறவுக்கார பெரியவர் அவர்கள் வீட்டுக்கு வருகிறார். சமாதானம் செய்ய,,,,
இவர்கள் அலட்சியமாக வரவேற்று பேசுகின்றனர்.
பிரச்னை தீரவில்லை.
இறுதியாக பெரியவர் ஒரு கருத்தை முன் வைக்கிறார்.
நான் சொல்வதை நீங்கள் செய்து விட்டால், நீங்கள் உங்கள் விருப்பப்படி பிரியலாம் எனச் சொல்ல, அவர்கள் ஒப்புக் கொள்கின்றனர்.
இப்போது பெரியவர், ஒரு பூ கட்டும் மெல்லிய நூலை காண்பித்து இதனை நீங்கள் பிய்க்க வேண்டும்(இழுத்து அறுக்க வேண்டும்)
என்கிறார்.
தம்பதியர் முகத்தில் அலட்சிய புன்னகை.
ப்பூ... இவ்வுளவு தானா?என்பது போல...
பெரியவர் அந்த நூலின் ஒரு முனையை தம்பதியரின் கையிலும்,
மறு முனையை தன் கையிலும் வைத்துக் கொண்டு,
அறுக்கச் சொன்னார்.
தம்பதியர் நூலை இழுக்க,.....
பெரியவர் அவர்கள் இழுத்த, இழுப்புக்கெல்லாம்
கூடவே செல்கிறார்.
நூல் இறுகவே அவர் விடாமல் தளர்வாகவே,
பிடித்தபடி உடன் செல்ல,
கடைசி வரை அவர்களால் அந்த மெல்லிய நூலை அறுக்கவே முடியவில்லை.
பெரியவர் சொன்னார்...
இந்த மெல்லிய நூல் தான் வாழ்க்கை...
விட்டுக் கொடுத்தால் வாழ்க்கை பந்தம் என்றென்றும் அறுபடாது.
இழுத்துப் பிடித்தால், பட்டென தெறித்து பயனில்லாமல் போய்விடும் என்றார்.
படாரென அவர் காலில் விழுந்த தம்பதியர், வாழ்க்கைத் தத்துவத்தை புரிந்து கொண்டோம் எனக் கூறி வணங்கினர்.
வாழ்க வளமுடன்.

Sunday, November 5, 2017

முடிவல்ல ஆரம்பம் - ( சிறுகதை )

முடிவல்ல ஆரம்பம் - ( சிறுகதை )

”அம்மா, அடுத்த சனிக்கிழமை நாம ஊருக்குப் போக டிக்கெட் வாங்கிட்டேன்.”.

“சரிப்பா” “அம்மா, இங்க இருக்கற பொருட்கள எல்லாம் யார், யாருக்கு குடுக்கணும்ன்னு தோணுதோ குடுத்துட்டு வந்துடும்மா”

“நானே உன் கிட்ட சொல்லணும்ன்னு நினைச்சேன் தேவா. பரம்பரையா பூசை செய்த பூசை சாமான்கள், உங்க தாத்தா, பாட்டி ஞாபகமா சில பரிசுப்  பொருட்கள், அப்பாவோட புத்தகங்கள், சில போட்டோக்கள் இதைத் தவிர எல்லாத்தையும் குடுத்துடலாம்ன்னு இருக்கேன்.”

”சரிம்மா, உன் இஷ்டம் போல செய். நீ சொன்ன மாதிரி இந்த வீட்டை விக்கவும் ஏற்பாடு செய்துட்டிருக்கேன். அது விஷயமா கொஞ்சம் வெளியேபோயிட்டு வந்துடறேன்.”

தேவனின் நிழல் மறையும் முன்னே, “ஏ தனம்!

உனக்கு என்ன பைத்தியமா புடிச்சிருக்கு? வீட்டை
விக்கச் சொல்லிட்டியா?

உனக்குன்னு இருக்கறதே இந்த வீடு ஒண்ணு
தான். அதையும் வித்துட்டு என்ன செய்யப்போற. உன் புள்ள எல்லா பணத்தையும் புடுங்கிக்கிட்டு உன்ன நடுத்தெருவுல விட்டுட்டா என்ன செய்வ? பேசாம இங்கயே இரு. தில்லி கண்காணாத ஊரு.
அங்க போய் என்ன செய்வ. உனக்கு என்ன தெரியும்?” என்று கத்தினாள் தாயம்மா.

“கொஞ்சம் மெதுவா பேசுங்க அக்கா. மருமக காதுல விழப் போகுது” “விழட்டுமே. நாட்டுல நடக்காததயா சொல்லிட்டேன். உன் மருமக வேற
பெரிய, பெரிய படிப்பெல்லாம் படிச்சுட்டு பெரிய வேலையில இருக்குறா. 

இந்தக் காலத்து பிள்ளைங்களுக்கு அம்மா, அப்பா, உறவுக்காரங்க எல்லாம் தேவையே இல்ல. சம்பளமில்லாம ஒரு வேலைக்காரி கிடைக்கறான்னு நினைக்கறாளோ என்னவோ உன் மருமக. உடம்புல தெம்பு இல்லாம போனா அப்ப தெரியும் உன் கதி.

சாரையெல்லாம் எடுத்துக்கிட்டு சக்கையை தூரப் போடும் போது தெரியும் என் பேச்சில எவ்வளவு உண்மை இருக்குன்னு”. விஷம் தோய்ந்த அம்புகளாக வந்து விழுந்தன வார்த்தைகள்.

“இங்க பாருங்க அக்கா. என் புள்ள மேலயும், என் மருமக மேலயும் எனக்கு நம்பிக்கை இருக்கு. அத்தோட எனக்கு இருக்கறது ஒரே புள்ள. அவன விட்டுட்டு நான் ஏன் இங்க தனியா இருக்கணும்.”

“ஏன், உனக்கு உன் புருஷன் வாழ்ந்த ஊர்ல இருக்கணும்ன்னு தோணவே இல்லையா?” ”எங்க இருந்தா என்ன அக்கா? உங்க தம்பியோட வாழ்ந்த அருமையான நாட்கள மனசுல அசை போட்டுக்கிட்டே என் மிச்ச வாழ்க்கைய கழிச்சுடுவேன்”.

“ம்... எப்படியோ போ. எனக்கென்ன, எனக்கு தோணினத சொல்லிட்டேன். அப்புறம் உன் இஷ்டம். நான் நாளைக்கு கிளம்பறேன். காரியமெல்லாம்தான் முடிஞ்சாச்சே. உனக்கு எப்பவாவது நிற்க ஒரு நிழல் வேணும்ன்னு தோணிச்சுன்னா, தேவைப்பட்டா தாராளமா என் வீட்டுக்கதவு உனக்காக திறந்தே இருக்கும்.”

“அந்த மாதிரி ஒரு நிலைமை வந்தா கண்டிப்பா நான் உங்களைத் தேடி வரேன் அக்கா” என்று சொல்லி நாத்தியின் பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைத்தாள் தனம்.

இவர்கள் பேசியதில் என்ன புரிந்ததோ, தனத்தின்
நான்கு வயது பேரன் கமலேஷ் தன் மழலைக் குரலில், “பாட்டி நாளைக்கு நீங்க எங்க கூட ஊருக்கு வந்துடணும்” என்றான்.

“கண்டிப்பா உங்க கூடதான் வரப் போகிறேன்” என்றாள் தனம்.

மே மாத வெயில் சுட்டெரிக்க, வாசலில் இருந்த வேப்ப மரத்தடியில் வந்து உட்கார்ந்தாள் தனம். ’ஏன் இப்படி ஒரு எண்ணம் எல்லாருக்கும். ஊர் உலகில் நடப்பதைத் தானே சொல்கிறேன் என்கிறார்கள். ஏன் ஊர், உலகத்துல நல்ல பிள்ளைங்களே இருக்கமாட்டாங்களா?', என் பிள்ளை அப்படி ஒரு நல்ல பிள்ளையா இருப்பான்னு நான் நம்பறேன்.

தங்கை கமலா என்னடான்னா, ‘அக்கா ஜாக்கிரதை, உன் பிள்ளை நல்லவனா இருக்கலாம். ஆனா முழுக்க நம்பிடாத. உனக்குன்னு கொஞ்சம் பணம், காசு வெச்சுக்கோன்னு’

சொன்னா. ஒரு வேளை நான் இவங்களுக்கெல்லாம் பாரமா வந்துடுவேனோன்னு பயப்படறாங்களோ. பக்கத்து வீட்டு பாட்டி கூட, ‘பேசாம இங்கயே இரு தனம். புள்ளயை நம்பி போகாத’ ன்னு சொல்றாங்க. கோவில் குருக்களும் இப்படியே சொன்னாரே. நம்ப புள்ளயை  நாமளே நம்பலைன்னா அப்புறம் வேற யார் நம்புவாங்க. இவங்களுக்கெல்லாம் பூக்கார பொன்னம்மா எவ்வளவோ தேவல. ’யார் பேச்சையும் கேக்காதீங்கம்மா.

உங்க மனசு என்ன சொல்லுதோ அதன்படி செய்யுங்க. உங்க நல்ல மனசுக்கு நீங்க எப்பவும் நல்லாதாம்மா இருப்பீங்க. உங்களுக்கு நல்லதுதாம்மா நடக்கும்’ என்றாளே. எண்ணம் நல்லா இருந்தா எல்லாம் நல்லா இருக்கும்ன்னு
பெரியவங்க சொல்லுவாங்களே.

கண்டிப்பா எனக்கு எல்லாம் நன்றாகத்தான் நடக்கும் என்று பலவாறு யோசித்தாள் தனம்.

நாற்பது வருடங்கள் வாழ்ந்த ஊர்.திருமணமாகி முதன் முதலில் அந்த ஊரில் பயந்து கொண்டே காலடி எடுத்து வைத்த நாள் ஞாபகம் வந்தது தனத்துக்கு.

பெரிய குடும்பத்துல ஒரே மருமகளாக வாக்கப்பட்டு வந்தபோது இருந்த சொத்துக்கள் ஒவ்வொரு நாத்தனாருக்கும் திருமணம் ஆக, ஆக, கொஞ்சம் கொஞ்சமாக சுருங்கி கடைசியில் இவர்களுக்கு என்று மிஞ்சியது அந்த வீடு ஒன்றுதான்.

உறவென்று சொல்லிக் கொள்ளவும் மிச்சம் இருந்தது நாத்தி தனம் ஒருத்திதான். மகன் உத்தியோகத்திற்க ாக தில்லி சென்ற போதும், மகனின் திருமணத்திற்குப் பின் தில்லி சென்ற போதும் தனத்திற்கு அங்கேயே குடியேற ஆசைதான். மேலும், தன் மகன் அங்கேயே சொந்த வீடு கட்டிக்கொண்டு குடியேறியபோது தில்லிக்குச் சென்று திரும்பியதில் இருந்தே வீட்டை விற்று விட்டு மகனுடன் போய் இருக்கவேண்டும் என்ற ஆசை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருந்தது. நீயும் நானுமடி, எதிரும் புதிருமடி என்று இருவர் மட்டும் எதற்காக இங்கு இருப்பது என்பது தனத்தின் வாதம். ஆனால் அவள் கணவர்.

பிடிவாதமாக சொந்த ஊரை விட்டு வர மறுத்ததால் அவள் எண்ணம் நிறைவேறவில்லை. ஆயிற்று அவர் காலமும் முடிந்தபின் உற்றார், உறவினர் யாரும் இல்லாத ஊரில், அந்த வீட்டில் எதற்கு பூதம் காப்பது போல் தனியே இருப்பது என்றுதான் அந்த வீட்டை விற்று விடச் சொல்லி விட்டாள்.

தில்லி வந்து சேர்ந்த போது இரண்டு, மூன்று நாட்கள் மகன், மருமகளின் நண்பர்கள், குறிப்பாக மருமகளின் நண்பர்கள்தான் அதிகம், தனத்தைப் பார்க்க வந்திருந்தனர். வந்தவர்கள் எல்லாம் ஊருக்கு வராததற்கு மன்னிப்பு கேட்டு, தங்களது வருத்தத்தையும் தெரிவித்தனர்.

ஒரு வாரம் மகன், மருமகள் இருவரும் அலுவலகத்துக்குச் சென்றதும், பேரனும் பள்ளிக்குச் சென்றதும் என்ன செய்வதென்றே தெரியவில்லை தனத்துக்கு. எவ்வளவு நேரம் தொலைக்காட்சி பார்ப்பது, எவ்வளவு நேரம் புத்தகம் படிப்பது? வார இறுதியில் சனி, ஞாயிறு எல்லோரும் தில்லியை சுற்றிப் பார்க்க சென்றார்கள்.

அடுத்த வார இறுதியில் தனத்தின் மருமகள் ரேகா, “அத்தை, இங்க நம்ப காம்பவுண்டிலேயே உங்கள மாதிரி பெரியவங்களுக்கு கம்ப்யூட்டர் வகுப்பு எடுக்கறாங்க. மாமா கூட சொல்லி இருக்கார். நீங்க அந்த காலத்திலேயே ஆங்கில பேப்பர் எல்லாம் படிப்பீங்களாமே. அது இப்ப உங்களுக்கு கை கொடுக்கும். சின்னச் சின்ன விஷயங்களா மெயில் அனுப்பறது, இண்டர்நெட் பாக்கறது, இப்படி எல்லாம் சொல்லிக் கொடுப்பாங்க. நாளையில இருந்து நீங்க கம்ப்யூட்டர் வகுப்புக்கு போகணும். ஒரு நாளைக்கு ரெண்டு மணி நேரம் தான் வகுப்பு எடுப்பாங்க. உங்களுக்கு விருப்பம் இருந்தா போகலாம்.” என்றாள்.

“கரும்பு தின்னக் கூலியா ரேகா. எனக்கும் சும்மா இருக்க போர் அடிக்குது. நான் ரெடி” என்றாள் தனம்.

“ஹைய்யா, பாட்டி நீங்களும் என்ன மாதிரி ஸ்கூலுக்குப் போகப் போறீங்களா? ஹா, ஹா,
ஹா” என்று கை தட்டி சிரித்தான் பேரன். மறுநாள் முதல் தாயின் முகத்தில் ஒரு தெளிவைப் பார்த்தான் தேவன்.

“அம்மா, வீடு வித்த பணம் எல்லாம் வந்துடுச்சு. அதை உன் பேரில டெபாசிட் செய்திருக்கேன். இந்தாம்மா” என்றான் தேவன்.

“எனக்கெதுக்குப்பா பணம். இதையெல்லாம் நீயே எடுத்துக்கோ” என்றாள் தனம்.

”இல்லம்மா. இப்ப இந்தப் பணம் உன்கிட்டயே இருக்கட்டும். இதுல இருந்து வர வட்டியை மாசா, மாசம் உன் கிட்ட குடுக்கறேன். உனக்குன்னு சில செலவுகள் இருக்கும்”.

“எனக்கென்னப்பா செலவு, எல்லாம் நீயேதான் செய்துடறயே.” “அப்படி இல்லம்மா. ஒரு கோவிலுக்குப் போனா, ஒரு பிச்சைக்காரனைப் பாத்தா, ஏன் உன் மனசுக்கு எது மகிழ்ச்சியைத் தருமோ, அதுக்கு செலவு செய்துக்கம்மா. அத்தை,
சித்தி, பெரியம்மா பசங்களுக்கு ஒரு பிறந்த நாள், ஒரு நல்லது கெட்டதுன்னா பணம் அனுப்பி வை.

இதெல்லாம் நீ எப்பவும் செய்யறது தானேம்மா, இவ்வளவு தூரம் வந்ததுக்காக இதையெல்லாம் நிறுத்த வேண்டாம்மா”என்றான் தேவன்.

”உன்னுடைய திருப்திக்காக இதை வாங்கிக்கறேன் தேவா” என்றாள் தனம். நான்கு, ஐந்து மாதங்களில் கம்ப்யூட்டரில் மெயில் அனுப்ப, டைப் செய்ய, மற்றும் அடிப்படை விஷயங்களைக் கற்றுக் கொண்டு விட்டாள் தனம்.

”அம்மா, இந்த வாரம் ஞாயிற்றுக் கிழமை நாம ஒரு இடத்துக்குப் போறோம், தயாரா இரும்மா” என்றான் தேவன்.

அதற்குள் கமலேஷ் “பாட்டி உங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை பிறந்த நாள் தானே” என்றான்.

“என்ன தேவா, என் பிறந்த நாளுக்காகத்தான் வெளியே போறோமா? கொண்டாட்டமெல்லாம்
எதுவும் வேண்டாம்ப்பா”. “கொண்டாட்ட மெல்லாம் எதுவும் இல்லம்மா”

ஞாயிற்றுக்கிழமை அந்த மன வளர்ச்சி குன்றிய
குழந்தைகளின் விடுதிக்குள் நுழைந்ததும், எல்லா குழந்தைகளும் ஒன்று சேர ’HAPPY BIRTHDAY TO PAATTI’ என்று வாய் குழறிக் கொண்டு வாழ்த்தியதைக் கேட்டதும் திக்கு முக்காடிப் போனாள் தனம். அவள் கையாலேயே அந்தக் குழந்தைகளுக்கு இனிப்பு வழங்க வைத்து, அன்று அவர்களுடனேயே மதிய உணவு உண்டு மாலை வீடு திரும்பினர்.

வீட்டிற்குள் நுழைந்ததும் ரேகா, தனத்தின் அறைக்குள் நுழைந்து, “அத்தை இங்க வாங்க. இது உங்களுக்கு எங்களுடைய பிறந்த நாள் பரிசு” என்றாள். ஒரு புத்தம் புதிய கம்ப்யூட்டர் மேசையில் அமர்ந்திருந்தது. தனத்துக்கு ஆச்சரியம்.

இதை எப்ப வாங்கினாங்க? எப்ப என் மேசையில்
செட் செய்தாங்க? ஆச்சரியத்துடன் மருமகளைப் பார்த்தாள்.

“அத்தை உங்க மகனோட நண்பர்கிட்ட வீட்டு சாவியை குடுத்துட்டு வந்தோம். வாங்க அத்தை
உக்காருங்க. உங்க கையால முதல்ல ஆன் செய்யுங்க”

”இல்ல ரேகா, நீயே ஆன் செய்.”

“சரி அத்தை. அத்தை! இங்க பாருங்க இதுக்குப்பேருதான் ப்ளாக். இவங்க காமாட்சி அம்மா. இவங்களுக்கு 80 வயசுக்கு மேல ஆகுது. இவங்க லட்சுமி அம்மா, இது இவங்களோட ப்ளாக்.

 இது நம்ம ஊர் ராஜப்பா தஞ்சை ப்ளாக் அவர் பதிவை,பகிர்வை அவசியம் படிங்க உங்களுக்கு பயனுள்ளதா இருக்கும். (சுய விளம்பரம்) இவங்களோட பதிவுகளுக்கு நீங்க கருத்து சொல்லலாம் அத்தை, உங்களுக்கும் வாழ்க்கையில நிறைய அனுபவங்கள் இருக்கும்.
எங்களுக்கும் அப்புறம் வரப்போற சந்ததிகளுக்கும் நல்ல விஷயங்கள எடுத்து சொல்ல யாரும் இல்ல. அதனால நீங்களும் இது
மாதிரி ப்ளாக் ஆரம்பிச்சு, உங்க அனுபவங்கள், சமையல் குறிப்புகள், அப்பறம் உங்க எண்ணங்கள பதிவு செய்யலாம் அத்தை. 

ஆரம்பத்துல கொஞ்சம் கண்ணக்கட்டி காட்டுல விட்டா மாதிரி இருக்கும். போகப் போகச் சுலபமாகிடும். நானும் உங்களுக்கு எப்படி பதிவு போடணும்ன்னு அப்பப்ப சொல்லித்தரேன் அத்தை.” என்று மருமகள் சொன்னதும் தனம்
மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்று விட்டாள்.

தனம் மனதுக்குள், *“யாரப்பா சொன்னது, புள்ளைங்கன்னா நம்ம சொத்தை எல்லாம் பிடிங்கிக்கிட்டு நம்பள கொண்டு போய் முதியோர் இல்லத்துல தள்ளி விட்டுடுவாங்கன்னு. இந்த மாதிரி நல்ல பிள்ளைங்களும் இருக்கத்தான் செய்யறாங்கப்பா இந்த உலகத்துல”* என்று சொல்லிக்கொண்டு, *“தேவா, ரேகா, என்னுடைய இத்தன வருடபிறந்த நாட்கள்ள இந்த மாதிரி மகிழ்ச்சியா நான் ஒரு நாள் கூட இருந்ததில்ல. உங்க ரெண்டு பேருக்கும் ரொம்ப நன்றி”.*

ரேகாவும், தேவாவும் ஒன்றாக, *“நன்றி எல்லாம் சொல்லக்கூடாது, நாங்களும் கடமைக்காக செய்யல. உண்மையா ஆசையாதான் செய்யறோம்”* என்றனர்.

தனக்கும் புரிந்தது போல் “ஆமாம், ஆமாம்” என்றான் குட்டிப்பையன் கமலேஷ். நிறைவான மனத்துடன், தன் மகிழ்ச்சியை எழுத்தில் வடிக்கத் தயாரானாள் தனம்...

படித்ததில் பிடித்தது.

Tuesday, August 29, 2017

வாழ்க்கை தத்துவம் - சிறு கதை ! எதுவும் நம்மோடு வரப்போவதில்லை!



அன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை ஒரு செல்வந்தர் தனது வீட்டு பால்கனியில் சாய்வு நாற்காலியில் அமர்ந்து ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார்.

அந்த பால்கனியில் ஒரு சிறிய எறும்பு ஒரு சிறிய ஆனால் அதனை விட பலமடங்கு பெரிதான ஒரு இலையை நகர்த்திக் கொண்டே ஊர்ந்து சென்றது. மெதுவாகவும், மிகவும் கவனமாகவும் சென்றது.

செல்வந்தருக்கு ஒரே ஆச்சர்யம் மேலும் தரையில் ஒரு பிளவைப் பார்த்தவுடன் அது சாமர்த்தியமாக இலையை அச்சிறு பிளவின் குறுக்காக வைத்து அதன் மீது ஏறிச் சென்று பின்னர் இலையை இழுத்துச் சென்றது. மேலும் பல தடங்கல்கள் அது தன் திசையை சற்றே மாற்றி வெற்றிகரமாக முன்னேறியது.

ஒருமணி நேரம் விடாமுயற்சி செய்தவாறே பயணம் செய்தது. இதை கண்ட அவர் வியந்து போனார்.

ஒருசிறு எறும்பின் விடாமுயற்சி
சாதுர்யம் மற்றும் புத்திசாலித்தனம்
அவரை அசர வைத்தது.

கடவுளின் படைப்பின் விந்தையை நினைத்து அதிசயித்தார். ஆனால் எறும்பிடம் மனிதனிடம் உள்ள சில
குறைபாடுகளும் உள்ளன.

எறும்பு இறுதியில் தனது இருப்பிட இலக்கை அடைந்தது. அது எறும்புப் புற்று எனப்படும் ஒரு சிறிய, ஆனால் ஆழமான குழி அருகே வந்தது எறும்பால் அந்த இலையுடன் குழியினுள் செல்ல இயல வில்லை. அதுமட்டுமே செல்ல முடிந்தது!

தான் ஒருமணிநேரம் கஷ்டப்பட்டு
இழுத்து வந்த இலையை குழியருகே விட்டுவிட்டுத் தான் செல்ல வேண்டியதாயிற்று. இதற்கு இவ்வளவு சிரமப்பட்டிருக்க வேண்டாமே!

மனித வாழ்க்கையும் இவ்வாறு தான். மனிதன் தனது வாழ்க்கைப் பயணத்தில் மிகவும் சிரமப்பட்டு முயற்சி செய்து பல வசதிகளை
ஏற்படுத்திக் கொள்கிறான்.

அடுக்கு மாடிவீடு சொகுசான கார்
ஆடம்பரமான வாழ்க்கை எனப் பலப்பல…

இறுதியில் அவன் கல்லறையை நோக்கிச் செல்கையில், அவன் சேமித்த அனைத்தையும் விட்டுத் தான் செல்ல வேண்டும்.

எறும்பிடமும் பாடம் கற்கலாம்.

வீணாக சுமைகளைச் சேர்த்து கட்டி இழுக்க வேண்டாம். 

எதுவும் நம்மோடு வரப்போவதில்லை!

புரிந்தால் மதி!

புரிந்துகொள்ள 

மறுத்தால் விதி!!

Thursday, August 24, 2017

ஆசிரியர் அரிஸ்டாட்டில் - மாவீரன் அலெக்சாண்டர் !

பிலிப் என்கின்ற மன்னனுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது

ஊர் மக்களை ஓன்று திரட்டி தனது உப்பரிகை மேல் நின்று கொண்டு தங்க நாணயத்தை திரண்டு நின்று கொண்டு இருந்த மக்கள் வீது அள்ளி வீசினான். அங்கு நின்று கொண்டு இருந்த கடைசி மனிதன் கையில் நாணயம் கிடைக்கும் வரை வீசி கொண்டே இருந்தான் அப்போது மக்கள் எல்லாம் மகிழ்ச்சி பொங்க மன்னனின்  குழந்தையை வாழ்த்துவது கண்டு மனம் பூரித்தான்.
 

மன்னனின் அமைச்சர் ஒருவர் சொன்னார் மன்னர் ஆண் குழந்தை பிறந்த சந்தோசத்தை மக்களிடம் தங்க காசு கொடுத்து அதனை தெரிவித்து மகிழ்கிறார் என்று சொன்னபோது மன்னன் குறிக்கிட்டு சொன்னான் இல்லை இல்லை எனக்கு ஆண் மகவு பிறந்ததற்காக நான் தங்க காசு கொடுக்கவில்லை எனக்கு பாடம் நடத்தி என்னை புத்தி சாலியாக ஆக்கிய ஆசிரியர் அரிஸ்டாட்டில் இருக்கும்போது என் மகன் பிறந்து விட்டான் அவர் என் மகனை மிக பெரும் அறிவாளியாக இந்த உலகத்திற்கு உருவாக்கி தருவார் என்ற சந்தோசத்தில் தான் இந்த பொற் காசுகளை அள்ளி தூவுகிறேன் என்று சொல்லி மீண்டும் அள்ளி தூவினான் அவன் சொன்னபடி பிற்காலத்தில் மிக பெரும் அறிவாளியாக உருவெடுத்தவந்தான் பிலிப் என்ற  மன்னனின் மகன் மாவீரன் அலெக்சாண்டர் ஒரு சிறந்த ஆசிரியரால் மட்டுமே ஒருவனை மிக சிறந்த ஒருவனாக மாற்றமுடியும் என அன்றே பிலிப் மன்னன் நம்பினான் ஆசிரியர் அரிஸ்டாட்டிலும் அவன் நம்பிக் கைக்கு பங்கம் விளை விக்காமல் அவன் நம்பிக் கையை காப்பாற்றினான். 

Always Teachers are Wondering in the world.

Sunday, August 20, 2017

சந்தேகம் !

ஒரு மன்னரின் மகன் ஒரு முறை அரண்மனை உப்பரிகையில் நின்று காற்று வாங்கியபோது, அந்த வழியாகக் கடந்து போன ஒருவனைப் பார்த்து ஆச்சரியப்பட்டுப் போனான்.


காரணம், அவன் தன்னைப் போலவே தோற்றத்தில் இருப்பதால்தான்.

 ரு வேளை அவனது தயார் இந்த அரண்மனையில் பணியாற்றி, தனது தந்தைக்கும் அந்தப் பெண்ணிற்கும் தவறான உறவு ஏற்பட்டு அதன் மூலம் இவன் பிறந்திருப்பானோ என்ற சந்தேகம் வரத் தொடங்கியது.

அவனை அரண்மனை ஊழியர்களைக் கொண்டு அழைத்து வந்து, தனது சந்தேகத்தைத் தீர்க்கும் முகமாக, “ ஏம்பா, உனது தாயார் இந்த அரண்மனையில் சிறிது காலம் வேலை பார்த்திருக்கிறாரா? “ என்று கேட்டான். 

 அதற்கு அவனோ, எனது தாயார் வேலை செய்யவில்லை. 

ஆனால் எனது தந்தை இந்த அரண்மனையில் சிலகாலம் பணியாற்றி இருக்கிறார் என்றானாம்.

 இப்படித்தான் சிலர் மற்றவர்களை குற்றம் கண்டுபிடிக்கவும், மட்டம் தட்டவும் துடியாய் துடிக்கிறார்கள்.

 உண்மை நிலை வேறு என்று வரும்போது, ஓடிவிடுகிறார்கள்.

பேசும் வார்த்தைகள் கவனமுடன் உபயோகித்தால் வாழ்வில் ஜெயிக்கலாம்.!!!!!!!!



ஒரு அரசனுக்கு அவனுடைய எல்லா பற்களும் விழுந்து பொக்கை வாயுடன் இருப்பதாக ஒரு கனவு வந்தது. இதனால் காலையில் பீதியுடன் எழுந்த அவன், அந்தக் கனவால் என்ன விளைவுகள் நேருமோ என்று பயந்துபோய் முதல் வேலையாக ஒரு நாடி ஜோதிடரை வரவழைத்தான்.

அந்த நாடி ஜோதிடர் தனது ஓலைச்சுவடியை எடுத்து, அதில் பொக்கை வாய் கனவு பற்றி விளக்கியிருந்த ஒரு ஓலையை வாசித்துவிட்டு, ‘அரசே! உங்கள் மனைவி, குழந்தைகள், சொந்த பந்தங்கள் எல்லாம் உங்களுக்கு முன்பே இறந்து விடுவார்கள்’ என்று பலன் சொன்னார்.

உடனே அந்த அரசன் மிகவும் கோபமுற்று, ‘இவனைப் பிடித்து சிறையில் தள்ளுங்கள்!’ என்று உத்தரவிட்டான். அதன் பிறகும் மன்னனின் மனம் சமாதானமடையவில்லை. இன்னொரு நாடி ஜோதிடரை வரவழைத்து, அவரிடம் தன் பொக்கை வாய் கனவின் அர்த்தம் என்ன என்று வினவினான்.

அந்த ஜோதிடரும் அதே மாதிரியான ஓலைச்சுவடியைத்தான் வைத்திருந்தார். அவரும் அதைப் பார்த்துவிட்டு, ‘மன்னா! உங்கள் சொந்த, பந்தங்களையெல்லாம் விட நீங்கள் நீண்ட காலம் நீடூடி வாழ்வீர்கள்’ என்று பலன் கூறினார். இதனால் மனம் குளிர்ந்த அரசன், அந்த ஜோதிடருக்கு தகுந்த பரிசுகள் வழங்கி அனுப்பி வைத்தான். இருவரும் அதே ஓலையைத்தான் படித்தார்கள், அதே விஷயத்தைதான் சொன்னார்கள். ஒருவர் எல்லோரும் இறந்துவிடுவார்கள் என்றார், இன்னொருவர் எல்லோரையும் கடந்து வாழ்வீர்கள் என்றார், அவ்வளவுதான் வித்தியாசம்.

பேசும் வார்த்தைகள் கவனமுடன் உபயோகித்தால் வாழ்வில் ஜெயிக்கலாம்.!!!!!!!!

நாம் பேசும் வார்த்தைகள் மற்றவரை சந்தோஷம் படுத்த வேண்டுமே தவிர எந்த விதமனகசப்பும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

Tuesday, March 28, 2017

பெருந்தன்மை!

♥என் வீடு இருக்கும் தெருவுக்கு அடுத்த தெருவில் ஓரமாக இருந்தது அந்த மரம்!

♥என் அலுவலக நண்பர் விக்ரம் தினம் காரில் அந்த வழியாக வருவார். ஓசி லிஃப்ட் தருவார். அவருக்காக மர நிழலில் காத்திருந்தபோது, செருப்பு தைக்கும் தொழிலாளி எதிர்ப்பக்க டீக்கடையிலிருந்து கையில் ஒரு டீ கிளாஸுடன் சாலையைக் கடந்து வந்துகொண்டு இருந்தார். மரத்தடியில் சுருண்டு படுத்திருந்த அவர் மனைவிக்கு உடல் நலம் சரியில்லை போலும்...

♥திடீரென்று டயர் தேயும் ‘கிரீச்’ சத்தம். வேகமாக வந்து சடன் பிரேக் போட்ட ஸ்கூட்டியில் அமர்ந்திருந்த இளம் பெண் மிக நாகரிகமாக இருந்தாள். ஏதோ யோசனையில் ஓட்டி வந்தவள், மிக அருகில் வந்ததும்தான் கிழவரைக் கவனித்திருக்க வேண்டும். ‘‘யோவ்! பாத்து வரக் கூடாதா? அன்ன நடை நடக்கிறியே, ராஸ்கல்!’’ - கோபத்துடன் சீறிவிட்டு, அதே வேகத்தில் ஸ்கூட்டி யைச் சீறிக் கிளப்பிப் போனாள்.

♥ஓர் அழகிய நாகரீகமான படித்த பெண்ணிட மிருந்து அத்தனை மூர்க்கமான, நாகரிகமற்ற வார்தைகளை நான் எதிர்பார்க்கவில்லை. அதிர்ந்துபோய் பெரியவரின் முகத்தைப் பார்த்தேன். தன் மீது தவறு இல்லாதபோது, அந்தப் பெண் அப்படிப் பேசியது அவரை நியாயமாகக் கோபப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், அவர் முகத்தில் கோபம் இல்லை. சிறு சுளிப்புகூட இல்லை. இதற்குள் நண்பர் விக்ரமின் கார் வந்து நிற்க, நான் யோசனையுடன் அதில் ஏறிக் கொண்டேன். மனசு ஆறவில்லை.

♥நண்பரிடம் நடந்ததை விவரித்தேன். ‘‘இந்தக் காலப் பெண்கள் வயசுக்குக்கூட மரியாதை கொடுக்காம கண்டபடி பேசறாங்களே விக்ரம்? கலாசார சீரழிவுனு இதைச் சொல்லலாமா?’’

♥விக்ரம் சொன்னார்: ‘‘இப்படிப் பேசிட்டுப் போன ஒரு பெண்ணை வைத்தோ, மொத்த தமிழ்ப் பெண் களையும் நாம் மதிப்பிட்டுவிடக் கூடாது இளங்கோ சார்! சில பெண்கள் இப்படிப் பண்பாடில்லாம நடப்பது ஒரு பக்கம் இருந்தாலும், பண்பு குறையாத, பெண்மையின் மேன்மையைக் கடைப்பிடிக்கும் பெண்களுக்கு நம் நாட்டில் பஞ்சமே இல்லை!’’

♥என் மனசில் அந்தக் காட்சி திரும்பத் திரும்ப வந்தது. இரு சக்கர வாகனத்தில் வலது காலைத் தரையில் ஊன்றி நின்றாள் அவள். கோபத்தில் கொதித்தாள்.

♥ மறுநாள்... அதே சாலை யோர மரத்தடி... செருப்பு தைக்கிற முதியவர் எனக்குச் சற்றுத் தள்ளி நின்று, யாரையோ எதிர்பார்ப்பவர் போல தூரத்திலிருந்து வருகிற வாகனங்களைப் பார்த்துக்கொண்டு இருந்தார். ஒருக்கால் நேற்று அவரை வசை பாடிவிட்டுப் போன பெண்ணை இன்று தடுத்து நிறுத்தி மனசில் தைக்கிற மாதிரி புத்தி சொல்வது அவருடைய நோக்கமாக இருக்குமோ? அதோ அந்தப் பெண்ணின் வாகனம்!

♥பெரியவர் கையை நீட்டி அந்த வாகனத்தை நிறுத்தினார். எனக்கு சுவாரஸ்யம் ஏற்பட்டது. நேற்று பெரியவரை அவமதித்த அந்தப் பெண்ணுக்கு இன்று சரியான டோஸ் கிடைக்கப் போகிறது. அவள் தன் வாகனத்தை நிறுத்தினாள். முகத்தில் பயம் தெரிந்தது. முந்தின நாள் அவரைத் திட்டிய தற்கு இன்று வம்பு வளர்க்கக் கிழவன் வண்டியை நிறுத்துகிறானோ?

♥‘‘என்னய்யா?’’ என்று கேட்டாள் அவள். கிழவர் அவளருகில் சென்றார். தன் கையிலிருந்த ஒரு பொருளை அவளிடம் நீட்டினார். அது ஒரு செல்போன்!

♥‘‘நேத்து நீங்க இங்கே வண்டியை பிரேக் போட்டு நிறுத்தினீங்களே, அப்ப, இது கீழே விழுந்திடுச்சும்மா. நீங்க கவனிக்காம வேகமாகப் போயிட்டீங்க. எடுத்து வெச்சேன். வழக்கமா இந்த நேரத்துக்கு வருவீங்களேனு காத்துட்டிருந்தேன். இந்தாங்கம்மா!’’

♥அவள் முகம் வியப்பால் விரிந்தது. அது ஒரு விலையுயர்ந்த செல்போன். அதை எங்கே காணடித்தோம் என்று ஒரு நாள் முழுவதும் அவள் எங்கெங்கோ தேடியிருக்கக்கூடும். பரவசத்தோடும் அதே நேரம் இந்தப் பெரியவரை முந்தின நாள் தரக்குறைவாகப் பேசிவிட்டோமே என்கிற குற்ற உணர்வோடும் அப்படியே நின்றாள்.

♥திரும்பிச் சென்ற பெரியவரை நோக்கி, ‘‘ஒன் மினிட் சார்’’ என்று நிறுத்தி, தன் ஹேண்ட் பேக்கிலிருந்து ஐந்நூறு ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்து அவரிடம் நீட்டினாள். ‘‘எதுக்குமா குழந்தை?’’ என்று கனிவாகக் கேட்டார் அவர். ‘‘இந்த செல்போன் வெலை என்னா தெரியுமா, செவன்டீன் தௌஸண்ட். , பதினேழாயிரம் ரூபா. இது காணாமப் போயிடுச்சுன்னே நெனச்சிட்டேன். எடுத்து வெச்சிருந்து கொடுத்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ் ஸார்... ப்ளீஸ் வாங்கிக்கோங்க!’’ ‘‘இல்லேம்மா, கண்ணுக்கு முன்னே ஒங்க பொருள் கை தவறிக் கீழே விழுந்துச்சு. அதை ஒங்ககிட்டே ஒப்படைச்சேன், அவ்ளோதான். நல்லா இருங்கம்மா!’’

♥சிறிது நேரம் அப்படியே நின்றவள், மெள்ள தன் வாகனத்தை ஓடவிட்டாள். முந்தினம் தான் அவரைக் கண்டபடி திட்டிப் பேசியது மிகவும் தவறு என்று அவள் கண்டிப்பாக உணர்ந்திருப்பாள் என்று தோன்றியது எனக்கு.

♥நான் அந்தப் பெரியவரை நெருங்கினேன். ‘‘நேத்து நடந்ததை நானும் பார்த்தேன். அந்தப் பொண்ணு உங்களை தரக்குறைவாத் திட்டிப் பேசிச்சு. அதைக் கொஞ்சமும் பொருட்படுத்தாம அந்தப் பொண்ணுக்கு உதவி செஞ்சு, ரொம்ப மரியாதை கொடுத்தும் பேசிட்டு வர்றீங்களே?’’ என்று கேட்டேன்.

♥சிரித்தவர், ‘‘என் பேத்தி என்னைத் திட்டினா நான் கோவிச்சுக்குவேனா? நேத்து திட்டின பொண்ணு, இன்னிக்கு என்னை ‘சார்’னு சொல்லுது. என்ன பேசறோம்னே தெரியாத வயசு. இதுக் கெல்லாம் வருத்தப்பட்டு திருப்பித் திட்டினா நான் என்ன மனுஷன்? வயசு ஏற ஏற, பக்குவம், மரியாதை எல்லாம் தானா வந்துடும். கொழந்தைங்க அது... சின்னப் பூவு! இன்னும் கல்யாணம் காச்சியெல்லாம் ஆகலை. எல்லாம் சரியாப் போயிடும்!’’
♥விக்ரமின் காரில் போகும்போது மனசு லேசாக இருந்தது. செருப்பு தைக்கிற தொழிலாளி கூறிய தத்துவம், லேசாகக் கிழிந்திருந்த என் மனசையும் பக்குவமாகத் தைத்துவிட்டதாக உணர்ந்தேன்

Wednesday, March 15, 2017

நிர்வாகத் திறமை !

நிர்வாகத் திறமைக்கு ஒரு குட்டி கதை...!

ஒரு நாள், நாய் ஒன்று காட்டில் வழி தவறிவிட்டது. அப்பொழுது அங்கு சிங்கம் ஒன்று பசியோடு அலைவதைப் பார்த்த நாய் ஒரு நிமிடம் பதறி இன்றோடு நம் கதை முடிந்தது என்று எண்ணியது.


அப்பொழுது அங்கு கிடந்த எலும்பு துண்டுகளைப் பார்த்ததும் அருமையான திட்டம் ஒன்றை தீட்டியது. சிங்கம் வரும் வழியில் திரும்பி உக்கார்ந்து கொண்டு எலும்பு துண்டுகளை சுவைக்க தொடங்கியது.


சுவைத்து கொண்டே சத்தமாக, "சிங்கத்தை கொன்று தின்பது எவ்வளவு சுவையாக உள்ளது, ஆனால் வயிறு நிறையவில்லை. இன்னொரு சிங்கம் கிடைத்தால், ஆஹா! வயறு நிறைந்து விடும்" என்று கூறியது.


இதைக் கேட்ட சிங்கம் "அய்யோ..! இந்த நாய் சிங்கத்தை அல்லவா கொன்று தின்கிறது" என்று நினைத்து பயந்து அங்கிருந்து ஓடி போனது.


இதையெல்லாம் மரத்தின் மேல் இருந்து குரங்கு ஒன்று பார்த்து கொண்டிருந்தது. சிங்கத்தை ஏமாற்றிய இந்த நாயை சிங்கத்திடம் போட்டுக் கொடுத்தால், சிங்கத்தின் நடப்பை பெற்று வாழ் நாளெல்லாம் பயம் இல்லாமல் வாழலாம் என்று நினைத்தது.


உடனே சிங்கத்திடம் சென்று, நாய் செய்த தந்திரத்தைப் பற்றி சொன்னது. அதை கவனித்த நாய் எதோ தப்பு நடக்க போகிறது என்று உணர்ந்தது.


குரங்கு சொன்னதைக் கேட்ட சிங்கம் கோபம் கொண்டு, "இப்பொழுது அந்த நாயை என்ன செய்கிறேன் பார். நீ என் முதுகில் ஏறி கொள்" என்று குரங்கை முதுகில் ஏந்திய படி நாய் இருந்த இடத்தை நோக்கி ஓடியது.


இப்போது அந்த நாய் என்ன செய்திருக்கும் என்று உங்களால் கற்பனை செய்ய முடியுமா?


தன்னை நோக்கி சிங்கம் பாய்ந்து வருவதைப் பார்த்த நாய், முன் போலவே திரும்பி உட்கார்ந்து கொண்டு, 

"இந்த குரங்கை அனுப்பி ஒரு மணி நேரமாகிவிட்டது. இன்னும் ஒரு சிங்கத்தைக் கூட ஏமாற்றி அழைத்து வரவில்லையே" என்று உரக்க கூறியது.


இதை கேட்டதும், சிங்கம் குரங்கைத் தூக்கி எரிந்து விட்டு திரும்பிக்கூட பார்க்காமல் ஓடியே விட்டது.

---

நாம் பணிபுரியும் இடத்தில் பல குரங்குகள் நம்மை சுற்றி இருக்கலாம், அவர்களை அடையாளம் காண முயற்சி செய்யுங்கள். "கடுமையாக உழைப்பதை விட திறமையாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்".

Tuesday, February 28, 2017

நேர்மைக்கு என்றுமே அழிவில்லை !

நேர்மைக்கு என்றுமே அழிவில்லை *

பொதுப் பணித்துறை ஊழியராயிருந்து ஓய்வுபெற்றவர் ‘பச்சை தண்ணி’ பத்மநாபன். ஊழல் புரையோடிப்போன ஒரு துறையில், பச்சைத் தண்ணீர் கூட அடுத்தவரிடம் கேட்டு வாங்கி குடிக்கமாட்டாராம் பத்மநாபன். அதனால் அவருக்கு சக ஊழியர்களால் கிண்டலாக சூட்டப்பட்ட பட்டப்பெயர் தான் ‘பச்சை தண்ணி’ பத்மநாபன். ஒரு நாள் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் வீழ்ந்தவர் தனது உயிர் பிரியப்போகிறது என்பதை அறிந்து தனது பிள்ளைகளை அழைத்தார்.

“இறைவா… என் பிள்ளைகளை அனாதையாக விட்டுவிட்டுப் போகிறேன். நீ தான் அவர்களை காக்கவேண்டும்” என்று பிரார்த்தித்தவர் பிள்ளைகளிடம் “நான் எப்படி வாழ்ந்தேன் என்று உங்களுக்கு தெரியும். நீங்களும் எந்த சூழலிலும் நீதி தவறாமல் தேவைகளை சுருக்கிக்கொண்டு நேர்மையாய் வாழ்ந்து என் பெயரைக் காப்பாற்றவேண்டும்…” என்று நா தழு தழுக்க சொன்னார்.

இரண்டு மகன்களும் அமைதியுடன் கேட்டுக்கொண்டிருக்க, கடைசி மகள் ப்ரியா மட்டும் கோபத்தில் வெடித்தாள். ப்ரியா கல்லூரி முதலாமாண்டு படித்துவருகிறாள். அவள் விரும்பிய கல்லூரியில் கூட அவளை சேர்க்க வழியின்றி ஏதோ அரசு உதவி பெறும் கல்லூரியில் தான் பத்மநாபனால் சேர்க்க முடிந்தது. அதுவே அவளுக்கு கோபம்.

“அப்பா…. உங்க பேங்க் அக்கவுண்ட்டில் நையா பைசா கூட இல்லாமல் நீங்கள் எங்களைவிட்டு போவது எங்கள் துரதிர்ஷ்டம். உங்களை என்னால் பின்பற்றமுடியாது. உங்கள் அறிவுரைகளையும் கேட்க முடியாது. ஊழல் பேர்வழிகள், ஊழல் பெருச்சாளிகள என்று நீங்கள் கூறியவர்கள் எல்லாரும் அவர்கள் குழந்தைகளுக்கு பல தலைமுறைகள் சொத்து சேர்த்துவிட்டு சென்றிருக்கிறார்கள். ஆனால் நாம் இருக்கும் இந்த வீடு கூட வாடகை வீடு தான். ஸாரி…. நேர்மையாயிருந்து நாங்கள் பட்டதெல்லாம். உங்களை என்னால் பின்பற்றமுடியாது. நாங்கள் எங்கள் வழியை பார்த்துக்கொள்கிறோம்….” என்றாள்.

அவளை உற்றுநோக்கியபடி பரிதாபமாக பார்த்த அந்த ஜீவனின் உயிர் அடுத்த சில நிமிடங்களில் பிரிந்தது.

காலங்கள் உருண்டன.

கல்லூரி படிப்பை எப்படியோ தட்டுத் தடுமாறி முடித்த ப்ரியா ஒரு புகழ் பெற்ற கட்டுமான நிறுவனத்திற்கு பணிக்கு அப்ளை செய்து நேர்முகத் தேர்வுக்கு சென்றாள். அந்த பணிக்கு தேவையான தகுதியுடைய நபரை ஏற்கனவே பேனல் உறுப்பினர்கள் தேர்தெடுத்துவிட்டாலும் ஒரு ஃபார்மாலிட்டிக்காக இண்டர்வ்யூவை நடத்திக்கொண்டிருந்தனர். பேனல் மெம்பர்களுக்கு மத்தியில் அந்நிறுவனத்தின் எம்.டி.யும் அமர்ந்திருந்தார்.

ப்ரியாவின் முறை வந்ததும் உள்ளே அழைக்கப்பட்டாள்.

அவளது ரெஸ்யூமை பார்த்த பேனல் மெம்பர் ஒருவர் “உன் அப்பா மிஸ்டர்.பத்மநாபன் பொதுப் பணித்துறையிலிருந்து ஒய்வு பெற்றவரா?” என்றார்.

“ஆமாம்… சார்…”

உடனே எம்.டி. நிமிர்ந்து உட்கார்ந்தார். ப்ரியாவை நோக்கி கேள்வியை வீசினார் ….. “உங்கப்பாவுக்கு ‘பச்சைத் தண்ணி பத்மநாபன்’ங்குற பேர் உண்டா?”

“ஆமாம்… சார்…” என்றாள் சற்று நெளிந்தபடி.

“ஒ… நீங்க அவரோட டாட்டரா? இந்தக் காலத்துல அவரை மாதிரி மனுஷங்களை பார்க்க முடியாதும்மா… இந்த கம்பெனி இன்னைக்கு இந்தளவு வளர்ந்திருக்குதுன்னா அதுக்கு அவரும் ஒரு காரணம். கடலூர்ல இருக்கும்போது நான் 15 வருஷத்துக்கு முன்ன கவர்மென்ட் காண்ட்ராக்ட் ஒன்னுக்கு டெண்டர் அப்ளை பண்ணியிருந்தேன். என்னைவிட அதிகமா கோட் பண்ணின நிறைய பேர் எவ்வளவோ லஞ்சம் தர்றதா சொன்னாலும் உங்கப்பா அதுக்கெல்லாம் ஆசைப்படாம, அவங்க மிரட்டலுக்கெல்லாம் மசியாம அந்த காண்ட்ராக்ட்டை முறைப்படி எனக்கு ஒதுக்கினார். அன்னைக்கு மட்டும் அவர் அந்த காண்ட்ராக்ட்டை எனக்கு ஒதுக்கலேன்னா இன்னைக்கு நான் இல்லை. இந்த கம்பெனியும் இல்லை. ஏன்னா… என் சொத்தையெல்லாம் அடமானம் வெச்சு கம்பெனி ஆரம்பிச்ச நேரம் அது. அந்த ஒரு காண்ட்ராக்ட் மூலமாத் தான் எனக்கு நல்ல பேர் கிடைச்சி, இந்த துறையில ஒரு பெரிய என்ட்ரி கிடைச்சது. ஆனால் அதுக்கு பிறகு உங்கப்பா வேற ஊருக்கு ட்ரான்ஸ்பர் ஆயி போய்ட்டார்….”

“அவருக்கு என்னோட நன்றிக்கடனை செலுத்த இதைவிட பெரிய வாய்ப்பு கிடைக்காதும்மா… யூ ஆர் செலக்டட். நாளைக்கே நீ டூட்டியில் ஜாய்ன் பண்ணிக்கலாம்….” என்றார்.

அந்நிறுவனத்தின் எச்.ஆர். பிரிவில் தலைமை அதிகாரியாக ப்ரியாவுக்கு வேலை கிடைத்தது. அலுவலகம் வந்து செல்ல ஒரு டூ-வீலர் வாங்கித் தந்தார்கள். பி.எப்., இன்சென்டிவ், ரெண்ட் அலொவன்ஸ் என பலப் பல சலுகைகள். கனவிலும் ப்ரியா எதிர்பார்க்காத ஒரு வேலை.

இரண்டு ஆண்டுகள் சென்றன… ப்ரியா பணியிடத்தில் நல்ல பெயர் எடுத்தாள்.

இதற்கிடையே அவர்கள் சிங்கப்பூர் கிளை அலுவலகத்தின் தலைமை பொறுப்பில் இருந்தவர் வேலையை ராஜினாமா செய்துவிட, அங்கு தலைமை பொறுப்புக்கு தகுதியான ஆள் தேவைப்பட்டார். BOARD OF DIRECTORS ஒன்று கூடி விவாதித்து ப்ரியாவையே சிங்கப்பூர் பிரிவுக்கு தலைமைப் பொறுப்பில் நியமிப்பது என முடிவானது.

மாதம் பத்து லட்ச ரூபாய் சம்பளம். கம்பெனி சார்பாக ஒரு கார், அப்பார்ட்மென்ட் என அத்தனை வசதிகளும் அவளுக்கு கிடைத்தன. கடுமையாக உழைத்து சிங்கபூர் நிறுவனத்தின் லாபத்தை பன்மடங்கு அதிகரிக்கச் செய்தாள் ப்ரியா.

அவளை லோக்கல் பிஸ்னஸ் பத்திரிக்கை ஒன்று பேட்டி கண்டது.

“உங்கள் வெற்றிக்கு காரணம் என்ன என்று கருதுகிறீர்கள்?”

கேள்வி கேட்க்கப்பட்டதுமே ப்ரியா உடைந்து அழலானாள்.

“இது எல்லாம் என் அப்பா எனக்கு போட்ட பிச்சை. அவர் மறைந்த பிறகு தான் நான் உணர்ந்தேன்… பொருளாதார ரீதியாக அவர் ஏழையாக மறைந்தாலும் ஒழுக்கத்திலும், நேர்மையிலும் நாணயத்திலும் அவர் கோடீஸ்வரராக மறைந்தார்….”

“அதுக்கு ஏன் இப்போ இவ்வளவு நாள் கழிச்சு அழுறீங்க?”

“என் அப்பா இறக்கும் தருவாயில் அவரது நேர்மைக்காக அவரை நான் அவமதித்தேன். என் அப்பாவின் ஆன்மா என்னை மன்னிக்கும் என்று நம்புகிறேன். இன்று நானிருக்கும் நிலைக்கு வர நான் எதுவும் செய்யவில்லை. அவர் கஷ்டப்பட்டு அல்லும் பகலும் பலவித தியாகங்களுக்கு இடையே போட்ட பாதையில் நான் சுலபமாக நடந்து வந்துவிட்டேன்.”

“அப்போது உங்கள் தந்தை உங்களிடம் கேட்டுக்கொண்டது அவர் அடியொற்றி செல்வீர்களா?”

“ஒவ்வொரு கணமும். என் வீட்டு வரவேற்பறையில் அவருடைய படத்தை பெரிதாக மாட்டியிருக்கிறேன். அந்த ஆண்டவனுக்கு பிறகு எனக்கு எல்லாமே என் அப்பா தான்….” கண்களை துடைத்தபடி சொன்னாள் ப்ரியா.

நீங்கள் எப்படி பத்மநாபனை போலவா?

உண்மையான நல்லபெயரை சம்பாதிப்பது என்பது மிக மிகக் கடினம். அதன் வெகுமதி உடனே வருவதில்லை. ஆனால் அது எவ்வளவு தாமதமாக வருகிறதோ அந்தளவு நீடித்து நிலைத்து நிற்கும்.

நேர்மை, நாணயம், ஒழுக்கம், சுய-கட்டுப்பாடு, தீயவற்றுக்கு அஞ்சுவது, கடவுளின் மீது அசைக்கமுடியாத நம்பிக்கை – இவையெல்லாம் தான் ஒரு மனிதனை முழுமையாக்குகின்றன. கோடீஸ்வரனாகவும் ஆக்குகின்றன. வங்கிக் கணக்கில் இருக்கும் பணம் அல்ல.

உங்கள் குழந்தைகளுக்கு நல்லவற்றை விட்டுச் செல்லுங்கள். இதைத் தான் அக்காலங்களில் சொன்னார்கள்…

“பிள்ளைகளுக்கு பணம் சேர்ப்பதைவிட புண்ணியத்தை சேர்க்கவேண்டும்” என்று.

* நிறைய உண்மை கலந்த கதை இது! * நேர்மையாக இருப்பதால் கண்ணீர் தான் பரிசு என்று மனம் கலங்காதீர்கள் * ....உங்கள் நேர்மை தான் உங்கள் குடும்பத்தை நிஜமாகக் காப்பாற்றும் , நமது நாட்டையும் நேர்மைதான் காப்பாற்ற வேண்டும் *.....ஆகவே மகிழ்ச்சியாக , நேர்மையாக சமுதாயப்பணியாற்றுவோம் ....

லஞ்சம் இல்லா சமுதாயத்தை நிச்சயமாகவே உருவாக்குவோம்

கண்ணன் வந்தான் !

ஒரு குட்டிக் கதை.ஆனால் ரொம்பப் பெரிய விஷயம்.......

அது ஒரு சின்ன கிராமம்.

அந்த கிராமத்திலே ஒரு கிருஷ்ணன் கோவில்.

அந்த கோவிலில் திருவிழா.

அந்த கிராமத்து மக்கள் எல்லாம் அங்கே கூடி இருந்தாங்க. ஒரு கதை சொல்லற பாகவதர் கிருஷ்ணனின் அருமை பெருமையெல்லாம் கதையா சொல்லி கிட்டு இருந்தார்.

இந்த சமயம் பார்த்து ஒரு திருடன் ஊருக்குள்ள திருட வந்தான். இந்த ஊர்ல உள்ள அத்தனை பேரும், கோவில்ல இருக்காங்க. நமக்கு நல்ல வேட்டைதான். வீட்டுக்கு வீடு புகுந்து கண்ணுல அகப்பட்டதை சுருட்ட வேண்டியதுதான் அப்படின்னு திட்டம் போட்டு வீடு வீடா புகுந்தான்.

அவன் கெட்ட நேரம் ஒரு வீட்டுல கூட, உருப்படியா ஒன்னும் இல்லை.

என்னடா இது.......... இந்த ஊர்ல எல்லா பயலும் பிச்சைகாரனா இருப்பான் போலிருக்கே. அப்படின்னு யோசிச்சு கிட்டே கோவில் பக்கம் வந்தான்.

அங்கே யாராவது ஒரு ஏமாளி பய சிக்காமலா போய்டுவான் என்பது அவன் எண்ணம்.

பாகவதர் சுவாரஸ்யமா கிருஷ்ணன் கதையை சொல்லி கிட்டு இருந்தார்.

குழல் ஊதும் கிருஷ்ணன் இருக்கானே.... கொள்ளை அழகு. அவன் கழுத்துல தங்க மாலை போட்டு இருப்பான். இடுப்புல பட்டையா ஒட்டியாணம் மாதிரி வைரம் பதிச்ச பெல்ட் போட்டு இருப்பான்.

காதுல வைர கடுக்கன். கையில தங்க காப்பு. கால்ல முத்து பதிச்ச தண்டை. அட அட அட .... அப்படியே கண்ணனை பார்க்க கண் கோடி வேண்டும்.
இப்படி... கண்ணன் அழகை வர்ணிச்சார் பாகவதர்.

இதை கேட்டான் திருடன். அவனுக்கு கண்ணன் யாருன்னு எல்லாம் தெரியாது. அவனுக்கு தெரிஞ்சது எல்லாம் திருட்டு வேலை மட்டும்தான்.

அடடா... அந்த பாகவதர் யாரோ ஒரு பணக்கார வீட்டு பையனை பற்றி சொல்றார். அவன் யார் வீட்டு பையன்னு கேட்டு, நம் கை வரிசையை கட்ட வேண்டியதுதான். அப்படின்னு கதை முடியுற வரை காத்திருந்தான்.

கதை முடிஞ்சுது.. ஊர் மக்கள் எல்லாம் போன பிறகு, மெல்ல பாகவதர் பக்கம் வந்தான் திருடன்.
ரொம்ப நேரமா ... ஒரு பையனை பற்றி சொன்னிங்களே அவன் யார். எங்கே இருப்பான். உடனே சொல்லு. இல்லை உன்னை இந்த கத்தியாலேயே குத்தி கொன்னுடுவேன் அப்படின்னு மிரட்டினான்.

பாகவதருக்கு கை கால் எல்லாம் வெட வெடன்னு ஆரம்பிசுடிச்சு. கடவுளே இது என்ன சோதனை. நான் அந்த மாய கண்ணனை பற்றி அல்லவா கதை சொன்னேன். இந்த முட்டாள் திருடன் அதை உண்மைன்னு நம்பி வந்து கேட்கிறானே.
அப்படின்னு யோசித்தவர்...

அவனிடம் தப்பிக்க.... அதோ தெரியுதே சோலை, அந்த சோலை பக்கம் தான் அந்த கண்ணன் விளையாட வருவான். போய் பிடிச்சுகோன்னு சொல்லி அப்போதைக்கு தப்பிச்சுட்டார்.

திருடனை பொறுத்தவரை பாகவதர் சொன்னது உண்மைன்னு நம்பினான். கண்ணன் வருவான் அப்படின்னு சோலைல போய் ஒளிஞ்சு இருந்தான்.
அவன் நினைவு எல்லாம்... கண்ணன் எப்போ வருவான்... கண்ணன் எப்போ வருவான் என்பதாகவே இருந்தது.

உண்மையா பாகவதர் சொன்ன மாதிரி கண்ணன் வந்தான். பாகவதர் சொன்ன மாதிரி நகை எல்லாம் போட்டு இருக்கானான்னு திருடன் பார்த்தான்.
உண்மைதான்... அவர் சொன்ன அத்தனை நகையும் கண்ணன் போட்டு இருந்தான்.

மெல்ல சின்ன கண்ணன் பக்கம் போய்... அடேய் தம்பி... உன் நகை எல்லாம் அழகா இருக்கு. அதை எனக்கு தருவியான்னு கேட்டான். கண்ணன் உடனே எல்லாத்தையும் கழட்டி கொடுத்துட்டான்.
நல்ல பையன்னு சொல்லிட்டு திருடன் நகையை எல்லாம் ஒரு மூட்டையா கட்டி எடுத்து கிட்டு பாகவதரை தேடி வந்தான்.

தன் வீட்டு வாசலில் இருந்த பாகவதர் தூரத்தில் வரும் திருடனை பார்த்துட்டார்.

அவருக்கு மறுபடியும் கை கால் எல்லாம் ஆட அரம்பிசுடிச்சு. திருடன் போய் சோலைல பார்த்திருப்பான். கண்ணன் வந்திருக்க மாட்டான். அந்த கோபத்தோட வருவான். இவன் கிட்டே இருந்து எப்படி தப்பிக்கிறது... அவனும் நம்மளை பார்த்துட்டான் .. அப்படின்னு யோசிக்கும் போது, திருடன் பக்கத்துல வந்து ரொம்ப நன்றி... ரொம்ப நாளைக்கு பிறகு நல்ல வேட்டைன்னு சொன்னான்.

பாகவதருக்கு பயம் போயிடிச்சு. என்னப்பா சொல்றேன்னார்.

உண்மைதான்... நீங்க சொன்ன மாதிரி சின்ன கண்ணன் வந்தான். என்ன அழகு. என்ன சிரிப்பு, அவனை அப்படியே பார்த்துகிட்டே இருக்கலாம் போல இருக்கு.
நான் கேட்டதும் எந்த மறுப்பும் சொல்லாம அப்படியே கழட்டி கொடுத்துட்டான். இதோ அந்த நகை எல்லாம் இருக்கு. உனக்கு கொஞ்சம் பங்கு தரவான்னு கேட்டான்.

பாகவதரால நம்பவே முடியலை. என்ன சொல்றேன்னார். அவனை பார்த்தியான்னு கேட்டார்.

ஆமாம் சாமி. உங்களுக்கு சந்தேகம் இருந்தா என் கூட வாங்க ... அந்த சோலைலதான் இன்னும் விளையாடி கிட்டு இருக்கான். வாங்க கட்டுறேன்னு சொன்னான்.
நம்பவே முடியாம பாகவதர் அவன் கூட போனார். சோலை கிட்டே வந்ததும் அதோ.... பாருங்க... சின்ன கண்ணன்... நீல வண்ணன் விளையாடிகிட்டு இருக்கான் பாருங்கன்னு சொன்னான்.

பாகவதர் கண்ணுக்கு எதுவுமே தெரியலை. சிரிப்பு சத்தம் மட்டும் கேட்டது.

இது என்ன சோதனை... என் கண்ணுக்கு தெரியலை... கேவலம் இந்த திருடன் கண்ணுக்கு தெரியுறியா கண்ணானு பாகவதர் அழவே ஆரம்பிச்சுட்டார்.

அப்போ .. அந்த திருடன் கையை பிடிங்கோனு ஒரு குரல் கேட்டது. உடனே அவன் கையை பிடிச்சார். நீல வண்ண கண்ணன் அவர் கண்ணுக்கு தெரிஞ்சார்.

கண்ணா... இது தர்மமா... என் நினைவு தெரிந்த நாள் முதல் உன் கதையை சொல்றேன். அதை தவிர வேற எதுவுமே எனக்கு தெரியாது. இது வரை எனக்கு தரிசனம் தராத நீ.... இந்த திருடன் கண்ணுக்கு தெரிகிறாய்.

அவன் கையை பிடித்த பிறகுதான் நீயே எனக்கு தெரிந்தாய்.

பாகவதரே.... உங்கள் வருத்தம் புரிகிறது. ஆனால்... இத்தனை ஆண்டு காலம் என் கதையை சொன்னாலும், நான் வருவேன் என்ற எண்ணம் உங்களுக்கு வந்ததே இல்லை.

நான் இருக்கேனா இல்லையா என்பதே உங்களுக்கு சந்தேகம்தான்.

ஆனால் இந்த திருடன் அப்படி இல்லை. நான் இருக்கேன் என்று நம்பினான். நான் வருவேன் என்று நம்பினான். அதனால் வந்தேன்.

கடவுள் பத்தி என்பதே நம்பிக்கைதான் என்று சொல்லி விட்டு கண்ணன் மறைந்து விட்டான்

Thursday, February 16, 2017

இறைவன் நம்மை சோதிப்பது ஏன்?

இறைவன் நம்மை சோதிப்பது ஏன்?
குரு குலத்தில் பாடம் நடந்துகொண்டிருந்தது. "யாருக்காவது ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் கேட்கலாம்" என்கிறார் குரு. ஒரு மாணவன் உடனே எழுந்து, "குருவே அனைத்தும் அறிந்த இறைவன் நம்மை சோதிப்பது ஏன்? சோதனைகளை சந்திக்காமல், கஷ்டங்களை சந்திக்காமல் அவனின் அருளை பெறவே முடியாதா?" என்று கேட்டான். "நல்ல கேள்வி. இதற்கு உனக்கு நாளை பதில் அளிக்கிறேன்" என்று கூறினார் குரு.

மறுநாள்..

ஆசிரியர் சொல்லப்போகும் விடையை அறிய மாணவர்கள் ஆவலுடன் வகுப்புக்கு வருகிறார்கள் அவர்களுக்கு முன்னாள் மண்ணால் செய்யப்பட்ட இரண்டு ஜாடிகள் இருக்கின்றன. பார்ப்பதற்கு அவை ஒரே மாதிரி இருந்தன

"இங்கே இருப்பது என்ன? இவற்றில் ஏதாவது வேறுபாடு தெரிகிறதா?" என்று மாணவர்களை பார்த்து கேட்கிறார் குரு மாணவர்கள் ஒரு கணம் கழித்து "இரண்டு ஜாடிகளும் ஒரே இடத்தில் தயார் செய்யப்பட்டவை தான். ஒரே கொள்ளளவு கொண்டவை தான்" என்றார்கள்..

"இவற்றில் ஏதாவது வேறுபாடு தெரிகிறதா?" என்று குரு கேட்கிறார். மாணவர்கள், "தெரியவில்லை!" என்று பதிலறக்கிறார்கள்.

"ஆனால் இரண்டிற்கும் ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது" என்ற குரு, முதல் ஜாடியை கீழே தள்ளி கவிழ்த்தார். அதிலிருந்து தேன் வெளியே வந்தது. மற்றொரு ஜாடியை கவிழ்த்தார் அதிலிருந்து சாக்கடை நீர் வெளியே வந்தது.

"ஜாடியை நான் கீழே தள்ளியவுடன், அதனுள் என்ன இருக்கிறதோ அது வெளியே வந்தது. அதை நான் கீழே தள்ளும் வரை அதற்குள் என்ன இருந்தது என்று உங்களுக்கு தெரியாது. இரண்டும் ஒன்றே என்று நினைத்துக்கொண்டீர்கள். வித்தியாசம் உள்ளே இருந்த பொருளில்தான் இருந்தது. அது வெளியே தெரியாமல் இருந்தது. ஆனால் அதை கீழே தள்ளியவுடன் உள்ளே இருப்பதை காட்டிவிட்டது. . இறைவன் நமக்கு தரும் சோதனைகளும் இப்படித் தான். நாம் சோதனைகளை சந்திக்காத வரை சகஜமாக நல்லவர்களாக இருக்கிறோம். ஆனால் சோதனையை சந்திக்கும் போதுதான் நமக்கு உள்ளே இருக்கும் நமது உண்மையான குணம் வெளியே வருகிறது. . நமது உண்மையான எண்ணங்களும், நமது மனப்பான்மையும் வெளிப்படுகிறது. நமது உண்மையான குணத்தை பரீட்சிக்கவே இறைவன் சோதனைகளை தருகிறான்" என்றார் குரு.

மேலும் மாணவர்களிடம் ஒரு கேள்வியைக் கேட்டார்: "மேற்படி இரண்டு ஜாடிகளில் ஒரு ஜாடியை நீங்கள் எடுத்துக்கொள்ள நான் அனுமதியளித்தால் நீங்கள் எதை தேர்ந்தெடுப்பீர்கள்?" என்றார்.

மாணவர்கள் அனைவரும் ஒருமித்த குரலில், "தேன் அடைக்கப்பட்டுள்ள ஜாடியைத் தான!" என்றார்கள். .

"இரண்டும் பார்க்க ஒரே மாதிரி இருக்கின்றன. ஒரே இடத்தில் செய்யப்பட்டவையே. இருப்பினும் தேன் ஜாடியை மட்டும் நீங்கள் வேண்டும் என்று ஏன் கூறுகிறீர்கள்? சற்றுயோசித்து பாருங்கள்! கெட்டவர்களுக்கும் சந்தர்ப்பம் கிடைக்காத நல்லவர்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்பதை இறைவன் நன்கு அறிவான். 
 
ஆகையால் தான் சில சமயம் நமது வேண்டுகோள்களை அவன் செவி சாய்ப்பதில்லை. இறைவன் நம்மை சோதிப்பதும் சீண்டுவதும் நமது உண்மையான குணத்தை நாம் அறியவே! அவனறிய அல்ல. அவனுக்கு தான் உள்ளே இருப்பது சந்தனமா சாக்கடையா என்று தெரியுமே. அவன் அப்படி செய்வது நம்மை நாமே தெரிந்துகொள்ள. நம்மை நாம் அறிந்துகொண்டால்தான் நம்மை திருத்திக்கொள்ள முடியும். இல்லையெனில் நமது தவறுகளை திருத்திக்கொள்ள நமக்கு வாய்ப்பே கிடைக்காமல் போய்விடும்!"


Thanks to Karuna

Friday, January 6, 2017

வாழ்வில் தேடித் தேடி சேகரித்து வைக்க வேண்டியது பணத்தை அல்ல; மனித உறவுகளை!

இரு நண்பர்கள் பாலைவனத்தில் பயணம் செய்தனர். 

வெயிலும் பாலைவன சுடுமணலும் அவர்களின் பயணத்தைக் கடுமையாக்கின.

கையில் வைத்திருந்த உணவையும் தண்ணீரையும் பகிர்ந்து சாப்பிட்டார்கள்.

ஒரு கட்டத்தில் இருவரில் பணக்கார நண்பன், தன் உணவை ஏன் மற்றவனோடு பகிர்ந்து சாப்பிட வேண்டும் என்று எரிச்சல் கொண்டான்.

அதனால் தன் ஏழை நண்பனுக்குப் பகிர்ந்து தராமல் அதிக உணவைத் தானே சாப்பிடத் தொடங்கினான்.

தண்ணீரையும் அவன் ஒருவனே குடித்து வந்தான்.
இதைக் கண்ட அந்த ஏழை நண்பன் கோபம் கொள்ளவே இல்லை.

பாலைவனத்தில் ஓரிடத்தில் ஈச்சை மரம் இருந்தது. அம்மரத்திலிருந்து விழுந்த பழங்களை ஏழையானவன் ஓடிப்போய்ப் பொறுக்கினான்.

உடனே பணக்காரன், அவை யாவும் தனக்கே சொந்தமானவை என்று சொல்லிப் பறித்தான்.

உன்னிடம்தான் தேவையான உணவு இருக்கிறதே.
பிறகு ஏன் இதைப் பறிக்கிறாய் எனக்கு கேட்டான் ஏழை.

அப்படியானால் நான் உணவை வைத்துக்கொண்டு உன்னை ஏமாற்றுகிறேன் என்று குற்றம் சொல்கிறாயா?

என்று சொல்லி கோபத்தில் ஏழையின் முகத்தில் ஓங்கி அடித்தான் பணக்காரன்.

அந்நேரமே இருவரும் பிரிந்து நடக்கத் தொடங்கினர்.
வலியும் அவமானமும் கொண்டவனாக பாலைவன மணலில்,

"இன்று என் நண்பன் என்னை அடித்து விட்டான்" என்று பெரிதாக எழுதி வைத்துவிட்டு நடந்தான் ஏழை.

ஓரிரு நாட்கள் இருவரும் தண்ணீர் கிடைக்காமல் பாலைவனத்தில் அலைந்து திரிந்தார்கள்.

அப்போது ஓரிடத்தில் சிறிதளவு தண்ணீர் இருப்பதைக் கண்டு ஓடிச் சென்று குடிக்க முயன்றான் பணக்காரன்.

திடீரென நண்பனின் நினைவு வந்தது.
இவ்வளவு காலம் பழகிய நண்பனை ஒரு கஷ்டம் வந்ததும் ஏமாற்றி விட்டோமே என்று உணர்ந்து நண்பனைச் சத்தமிட்டு அழைத்தான்.

குரல் கேட்டு ஓடோடி வந்த ஏழை நண்பன் அங்கே தண்ணீர் இருப்பதைக் கண்டு ஆச்சர்யமடைந்தான்.

இதிலுள்ள தண்ணீரை ஒருவர் மட்டுமே குடிக்க முடியும்.
நீயே குடித்துக்கொள் என்றான் பணக்காரன்.

உடனே ஏழை தாகம் மிகுதியில் தண்ணீரை முழுவதும் குடித்து விட்டு நண்பனை அணைத்துக்கொண்டு நன்றி தெரிவித்தான்.

பின்னர் இருவரும் ஒன்றாக நடக்கத் தொடங்கினர்.
ஏழை நண்பன் அங்கிருந்த ஒரு கல்லில்,

"என் நண்பன் இன்று மறக்க முடியாத ஓர் உதவி செய்தான்"
என்று எழுதி வைத்தான்.

உடனே வானத்திலிருந்து ஒரு தேவதூதன் தோன்றி ஏழையிடம், அவன் உன்னை அடித்தபோது அதை மணலில் எழுதி வைத்தாய்.

உதவி செய்தபோதோ அதைக் கல்லில் எழுதி வைக்கிறாய்.
அது ஏன்? என்று கேட்டான்.

நடந்த தவறுகள் காற்றோடு போக வேண்டியவை.
அதனால் அதை மணலில் எழுதினேன்.

ஆனால் செய்த நன்றியை என்றும் மறக்கக் கூடாது.
ஆகவே அதைக் கல்லில் எழுதி வைத்தேன் என்றான் ஏழை.

ஒருவர் நமக்குச் செய்த தீமைகளை மறந்து அவர் செய்த நன்மைகளை நினைவில் வைத்திருந்தால் உறவுகள் மேம்படும்.

வாழ்வில் தேடித் தேடி நாம் சேகரித்து வைக்க வேண்டியது பணத்தை அல்ல; மனித உறவுகளை!

"இறைவன் நம்மை தேடி வருவார்..."

"இறைவன் நம்மை தேடி வருவார்..."

புதிதாக தன்னிடம் வந்து சேர்ந்த சீடனிடம் குரு கேட்டார்,
“ஆன்மிகத்தின் நோக்கம் என்ன என்று சொல்ல முடியுமா?”

புதிய சீடன், “இறைவனை அறிவது தான், அடைவது தான் ஆன்மிகத்தின் நோக்கம்...”

“அப்படியா?”

“என்ன அப்படியா என்று கேட்கிறீர்கள்... அப்படித்தானே இருக்க முடியும்?”

“சரி. இத்தனை நாள் ஆன்மிகத்தில் சாதகம் செய்து வருகிறாயே இறைவனை அறிந்தாயோ?”

“இல்லை. ஆனால் முயன்று கொண்டிருக்கிறேன்.”

“நல்லது... உண்மையிலேயே இறைவனை அறிந்து கொண்டுவிட முடியும் என்று நம்புகிறாயா?”

சீடன் சற்றே யோசித்துவிட்டுச் சொன்னான்.

“நம்புகிறேன்... இருப்பினும், கொஞ்சம் சந்தேகமாகவே இருக்கிறது.”

“எதனால் இந்த சந்தேகம் வருகிறது?”

“பலர் பலவிதமாக இறைவனைப் பற்றிச் சொல்கிறார்கள். மிகவும் ஆராய்ந்து பார்த்தால் தெளிவை விடக் குழப்பமே மிஞ்சுகிறது.”

“நல்லது... எப்போது நீ உள்ளது உள்ளபடி சொன்னாயோ அதுவே நல்லது. சீடனே, இப்போது நான் வேறு விதமாகக் கேட்கிறேன். நீ ஆண்டவனைத் தெரிந்துகொள்ள, அடைய விரும்புகிறாயா...?”

“ஆமாம் குருவே.”

“உன் விருப்பத்தின் காரணமாகத்தான் நீ ஆன்மிகப் பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறாய். அப்படித்தானே?”

“ஆமாம் குருவே.”

“அன்புள்ள சீடனே! நீ இறைவனைத் அடைய, ஓர் எளிமையான மாற்று வழியைச் சொல்லித் தருகிறேன்...”

“மிகவும் சந்தோஷம் குருவே. இந்த வழிக்காகத்தான் நான் காத்துக்கொண்டிருக்கிறேன்.”

“ஆனால் இந்த வழியில் நீ இறைவனை அடைய முடியாது. ஆனால் இறைவன் உன்னை வந்து அடைவான்.”

“இது குழப்பமாக இருக்கிறதே.”

“ஒரு குழப்பமும் இல்லை...
ஒரு அரசன் இருக்கிறான். பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு அவன் ராஜா. அவன் அருகே நெருங்குவதோ பேசுவதோ அறிவதோ எளிமையான விஷயம் அல்ல. முடியவும் முடியாது.”

“ஆம்.”

“ஆனால் ராஜாவை சந்திக்க வேண்டும் என்கிற பிரஜை, ஓர் அருமையான காரியத்தைச் செய்கிறான்...
அவன் தேசத்தில் உள்ள மக்கள் எல்லோருக்கும் பயன்படும்படியாக உழைக்கிறான். பல அறச் செயல்களைச் செய்கிறான். இந்தச் செய்தி ராஜாவுக்குப் போகிறது.

உடனே ராஜா பிரதிநிதிகளை அனுப்பி தன் அரசவைக்கு அவனை வரவழைக்கிறார். அல்லது அவரே நேரில் அவனைப் பார்க்க வருகிறார். அவனோடு உரையாடுகிறார். பாராட்டுகிறார். பரிசுகள் தருகிறார். இது நடக்கும் இல்லையா?”

“நடக்கும் குருவே.”

“இப்போது ராஜாதான் இறைவன்.
நீதான் அவன். நீ என்ன முயற்சி செய்தாலும் ராஜாவைப் நெருங்குவது கஷ்டம். ஆனால் உன் செயல்கள் பலருக்கும் பயனுடையதாக இருந்தால் அந்த ராஜாவே உன்னைப் பார்க்க வருவார்.

எனவே, இறைவனைப் பார்க்கும் முயற்சியைக் கைவிடு. இறைவன் உன்னைத் தேடி வரும் தகுதியான செயல்களில் ஈடுபடு... இறைவனே உன்னை வந்து அடைவான்... சரிதானே...?”

“மிகவும் சரிதான் குருவே...”

“நல்லது சீடனே, இனி ஆன்மிகம் உனக்குப் கை கூடும். போய் வா...”

சீடன் தெளிவடைந்து குருவிற்கு நன்றி தெரிவித்தான்...

நம்
எண்ணங்களும்...
உணர்வுகளும்...
சிந்தனைகளும்...
சொல்களும்...
செயல்களும்...

நம்மை சுற்றி உள்ள மனிதர்களுக்கு...

நல்லது செய்யுமெனில்...

இறைவனை
நாம் தேட வேண்டியதில்லை...

*இறைவனே நம்மை தேடி வருவார்...

கைத்தடி !

கைத்தடி  ! ஆசை !! -

கங்கையில் ஒரு வியாபாரி குளித்துக் கொண்டிருந்தான். அப்போது அழகான கைத்தடி ஒன்று மிதந்து வந்தது. அதை எடுத்துக் கொண்டு கரையை நோக்கி நீந்தினான் அவன். அப்போது ஒரு நீர்ச்சுழலில் மாட்டிக் கொண்டான்.தப்பிக்கக் கடும் முயற்சி செய்தான்.ஒரு வழியாகப் போராடி உயிர் பிழைத்தான். ஆனால் அந்தக் கைத்தடி எங்கோ நழுவிப் போய் விட்டது.

கரைக்கு வந்த அவன் அழகான கைத்தடியை இழந்து விட்டேனே என்று கதறினான். அங்கு இருந்த ஒரு துறவி, ''அய்யா, நீங்கள் குளிக்க வெறுங்கையுடன் வந்ததை பார்த்தேனே? இப்போது கைத்தடியை நழுவ விட்டதாகக் கூறுகிறீர்களே?'' என்று கேட்டார்.

வியாபாரி நடந்ததைக் கூறினான்.

துறவி சொன்னார், ''அய்யா, உங்களைப் பார்த்தால் எனக்கு சிரிப்பு வருகிறது. கங்கையில் கைத்தடி மிதந்து வந்தது. இப்போதும் அது மிதந்து கொண்டு போகிறது. அப்படி இருக்கையில் அது உங்கள் கைத்தடி என்று எப்படிக் கூறுகிறீர்கள்? அந்தக் கைத்தடியை இரண்டு நிமிடங்கள் தங்கள் கையில் வைத்திருந்ததனால் அது உங்களுடையது என்று சொந்தம் கொண்டாட உரிமை பெற்று விட்டீர்களா?
''

உலகம் உனக்கு சொர்க்கமாகும் !

குரு ஒருவரிடம்  செல்வந்தர் ஒரு கேள்வி கேட்டார்... என் மனம் மிகவும் குழப்பத்தில் இருக்கிறது. என் பணியாட்கள்கூட எனக்கு உண்மையாக இல்லை. என் மனை...