Total Pageviews

Thursday, June 30, 2016

இப்படி ஆகும்னு தெரியாம போயிடுச்சே..’

அனுபவமே குரு

ஒரு வயதான மேஸ்திரி, வேலையிலிருந்து ஓய்வு பெற விரும்பினார்.

இனியாவது குடும்பத்தோடு நேரம் செலவழிக்கவேண்டும் என்பது அவர் திட்டம்!

முதலாளியான கான்ட்ராக்டரிடம் இந்த முடிவை அவர் சொல்ல.. தனது நீண்ட கால ஊழியர் ஓய்வு பெறுவதில் கான்ட்ராக்டருக்கு லேசான வருத்தம்!

சில விநாடிகள் யோசித்தவர், ‘‘எனக்காக ஒரு உதவி செய்ய முடியுமா? இன்னும் ஒரே ஒரு வீடு மட்டும் கட்டி முடித்துக் கொடுப்பீர்களா?’’ என்று பணிவோடு கேட்டார்.

மேஸ்திரி அதற்கு சம்மதித்து பணியைத் தொடங்கிவிட்டாலும், அவரால் முழுஈடுபாட்டோடு அந்தப் பணியில் கவனம் செலுத்த முடியவில்லை.

ஏதோ ஒரு பொருளை பயன்படுத்தி, ஏதோ ஒரு வடிவமைப்பில், ஏனோதானோவென்று வீடு கட்டினார்.


‘வேலையிலிருந்தே ஓய்வு பெறப் போகிறோம். இனி, இந்த வீட்டை ஒழுங்காக கட்டினால் மட்டும் என்ன கிடைத்துவிடப் போகிறது’ என்கிற அலட்சிய மனப்பாங்கு!

வேலையெல்லாம் முழுமையாக முடிந்தபிறகு, அந்த வீட்டை பார்வையிட வந்தார் முதலாளி.

வாசலிலேயே வரவேற்ற மேஸ்திரியிடம், சந்தோஷமாக அந்த வீட்டுச் சாவியை எடுத்து நீட்டினார்.

‘‘இந்தாருங்கள்.. இந்த வீடு உங்களுக்கான என் அன்புப் பரிசு! எங்கள் நிறுவனத்தில் இத்தனை நாள் வேலை செய்ததற்கான வெகுமதி!’’ என்றார் முதலாளி.

மேஸ்திரிக்கு முகத்தில் ஈயாடவில்லை. ‘என்ன கொடுமை இது! இந்த வீடு எனக்குத்தான் கிடைக்கப் போகிறது என்று தெரிந்திருந்தால், இன்னும் மூளையை கசக்கி எப்படியெல்லாமோ டிசைன் டிசைனாக கட்டியிருப்பேனே.. இருப்பதிலேயே உயர் தரமான பொருட்களை பயன் படுத்தி யிருப்பேனே!  சே! இப்படி அநியாயமாக ஏமாந்து போய்விட்டேனே..

’என்று மனதுக்குள் ஏகமாக புழுங்கினார்.

பல சந்தர்ப்பங்களில் நமது புழுக்கம்கூட இந்த ரகத்தில்தான் இருக்கிறது.

*நமக்கான வாழ்க்கையை நாம்தான் நிர்மாணிக்கிறோம் என்பதை அறியாமல், பல சந்தர்ப்பங்களில் நம் திறமையில் மிகவும் கொஞ்சம் மட்டுமே பயன்படுத்துகிறோ
ம் .
 
பிறகு, அப்படி உருவாக்கப்பட்ட வாழ்க்கையையே நாம் வாழவேண்டிய சூழல் வரும்போது, அதிர்ச்சி அடைகிறோம்!

‘இப்படி ஆகும்னு தெரியாம போயிடுச்சே..’ என்று மனம் புழுங்குகிறோம்.

நம் வாழ்க்கை என்னும் வீட்டுக்கு நாம்தான் மேஸ்திரி. ஒவ்வொரு நாளும், ஒரு சுவர் எழுப்புகிறோம். ஆணி அடிக்கிறோம்.. ஜன்னல் பொருத்துகிறோம்.

நம் மனப்போக்கும், அர்ப்பணிப்பும், நாம் தேர்ந்தெடுத்து செயல்படுத்தும் விஷயங்களும் தான் நாளை நாம் வாழப் போகும் வாழ்க்கை எனும் வீட்டின் தரத்தை நிர்ணயிக்கின்றன

*ஒவ்வொரு அடியுமே உன்னதமாக வைப்போம். எந்த அடி திருப்புமுனைதரும் என்பது யாருக்குத் தெரியும*

"You are the "architect" of your own life"

"Our own thoughts and perceptions determine "our lifestyle"

Sunday, June 26, 2016

மனசஞ்சலம் !

ஞானி ஒருவரைத் தேடிவந்தவன், சுவாமி! உலகப்பற்றைத் துறந்து உங்களிடம் சீடனாகச் சேர விரும்புகிறேன் . என்றாலும் ஆசைகள் என்னை விடமாட்டேன் என்கிறது. என்ன செய்ய? எனக் கேட்டான்.

அப்படியா? சரி, போய் அந்த மரக்கிளையில் கொஞ்ச நேரம் தொங்கிவிட்டு வா! என்றார், துறவி. எதற்கென்று தெரியாவிட்டாலும், ஞானி சொல்கிறார் என்பதற்காகச் சென்று மரக்கிளையைப் பற்றிக் கொண்டு தொங்கினான். இப்பொழுது சொல் ... 
 மரக்கிளை உன்னைப் பிடித்துக் கொண்டிருக்கிறதா? நீ அதைப் பிடித்துக் கொண்டிருக்கிறாயா? நான்தான் அதைப் பற்றிக் கொண்டிருக்கிறேன்! 
அப்படியானால் நீ விரும்பினால் அதை எப்பொழுது வேண்டுமானாலும் விட்டு விடலாமே! குரு எதைப் பற்றிக் குறிப்பிடுகிறார் என அவனுக்குப் புரிந்தது.

கடவுளை அடைவதற்கு அவ்வப்போது தனிமையை நாடிச் சென்று தியானம் செய்ய வேண்டும் எனக் கூறுகிறார்களே , அப்படியானால் இல்லறத்தில் இருப்பவனால் பக்தி செய்ய முடியாதா ? குருவிடம் சந்தேகம் கேட்டான் சீடன். 
தயிரிலிருந்து வெண்ணெய் எடுக்க வேண்டுமானால் உறையிட்ட பாலை ஆடாமல் அசையாமல் தனியிடத்தில் வைக்கிறோம் அல்லவா? பாத்திரத்தை அசைத்துக் கொண்டே இருந்தால் தயிர் தோயாது. தயிர் நன்கு தோய்ந்தால் தான் அதைக் கடைய வெண்ணெய் திரண்டு வரும். இவ்வாறே தனிமையில் அமர்ந்து தியானம் செய்து வந்தால் மனம் ஒருமைப்பட்டு ஞானம் பிறக்கும். அந்த ஞானத்திலிருந்து பக்தி தோன்றும். இல்லறம் நீர் போன்றது; மனமோ பால் போன்றது. பாலாகிய மனதை இல்லறத்தில் கலந்தால் நீரோடு ஒன்றாகி நீர்த்து விடுகிறது. அதிலிருந்து வெண்ணெய் எடுக்க இயலாது. ஆனால் நீர் கலக்காத பாலை தயிராக்கினால் அதிலிருந்து வெண்ணெய் எடுக்கலாம். அந்த வெண்ணெயை ( இறை ஞானத்தை) இல்லறமாகிய நீரில் போட்டாலும் அது மிதக்குமே தவிர, கரைந்து போகாது! குரு விளக்கம் தர சீடன் தெளிவு பெற்றான்.


சூப்பர்.
எதிலும் மனசஞ்சலமற்ற ஈடுபாடு கொண்டு செய்வது பலன் பயன் உண்டு என்று எண்ணுகிறேன். நன்றி! 

Thursday, June 23, 2016

நாயுடன் நானும் வரலாமா?

தனது வீட்டு கேட் முன் நின்று கொண்டு இருந்த உயர்சாதி நாயை அப்போது தான் கவனித்தார் அவர்.

அது நீண்ட நேரமாக நின்று கொண்டு இருப்பதாக தோன்றியது.

அவரையே கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டு இருந்தது சற்று வியப்பை தந்தது. மேலும் ஐந்து நிமிடம் கழிந்தது. மெதுவாக விசிலடித்து கூப்பிட்டார். உடனே அது நாலுகால் பாய்ச்சலில் உள்ளே ஓடி வந்து அவரருகே நின்றது. வாஞ்சையுடன் அதன் கழுத்தை தடவிக்கொடுத்தார். பதிலுக்கு அதுவும் அவரது கால்களை நக்கியது. பின்னர் மாடிப்படிக்கு கீழே சென்று படுத்து நிமிடத்தில் சுகமாக உறங்கிப்போய் விட்டது.

இவருக்கோ குழப்பம். எதோ செல்வந்தருடைய நாய் என்பது அதன் தோற்றம், கட்டியிருந்த பெல்ட், தாட்டியான உடம்பு போன்றவற்றில் இருந்து புரிந்தது. இங்கே எதற்காக வந்தது?

எழுந்து குளித்து உடைமாற்றி காலை உணவு முடித்துஅலுவலகம் புறப்பட்டு செல்லும் வரை அது தூங்கிக்கொண்டு இருந்தது. வேலையாளிடம் சொல்லிவிட்டு புறப்பட்டு சென்றார்.

மாலை வந்து பார்க்கும் போது நாய் அங்கில்லை. விசாரிக்கும் போது மதியமே சென்று விட்டதாக சொன்னார் பணியாள்.

மறுநாள் காலை. மறுபடியும் அதே நேரம். அதே நாய். அதே போல் உள்ளே வந்து இவரிடம் சற்று குலாவிவிட்டு அதே இடத்தில் தூங்கி விட்டது. மாலை வந்து பார்க்கும் போது நாய் அங்கில்லை.

இந்த சம்பவம் பல நாட்கள் தொடர்ந்தது. வேலையாளை விட்டு பின் தொடர்ந்தும் நாய் எங்கிருந்து வந்தது என்று கண்டுபிடிக்க முடியவில்லை.

ஒருநாள் ஒரு துண்டு சீட்டில் விபரம் எழுதி கழுத்தில் கட்டி அனுப்பினார். மறுநாள் அந்த நாய் வரும்போது கழுத்தில் வேறு ஒரு துண்டு சீட்டு இருந்தது. படித்து விட்டு உருண்டு புரண்டு சிரிப்பதை பார்த்து வேலையாளுக்கு ஒன்றும் புரியவில்லை.

அப்படி என்ன தான் எழுதியிருந்தது?

" அன்பு மிக்கவருக்கு
வணக்கம். இந்த நாய் என்னுடையது தான். இது என்னுடைய மனைவியின் காட்டு கூச்சலால் விடிய விடிய தூங்காமல் கஷ்டப்பட்டு கொண்டிருந்தது. சில நாட்களாக காலை வேளைகளில் காணாமல் போய்க்கொண்டு இருந்தது. தங்கள் கடிதம் மூலம் தங்கள் வீட்டில் அது நிம்மதியாக உறங்கி எழுந்து வருவது அறிந்து கொண்டேன். தங்களது அன்பிற்கு மிக்க நன்றி.
இப்படிக்கு

...................

பி.கு.
ஒரு விண்ணப்பம். நாளை முதல் நாயுடன் நானும் வரலாமா? நானும் நன்றாக தூங்கி பல ஆண்டுகள் ஆகின்றன

அட இது தான் வாழ்க்கையடா !

ஒரு கிராமம். 

சிறுவன் ஒருவன் ஏரிக்கரையில் விளையாடிக் கொண்டு இருக்கிறான்.

அப்போது, “என்னை காப்பாற்று, காப்பாற்று“ என்று ஓர் அலறல். ஆற்றோரத் தண்ணீரில், வலைக்குள் சிக்கி இருக்கும் முதலை ஒன்று சிறுவனைப் பார்த்துப் பரிதாபமாக கதறுகிறது.

’மாட்டேன். உன்னை விடுவித்தால் என்னை விழுங்கி விடுவாய். காப்பாற்ற மாட்டேன்’ என மறுக்கிறான் சிறுவன்.

ஆனால் முதலை, “நான் உன்னை சத்தியமாகச் சாப்பிட மாட்டேன். என்னை காப்பாற்று” என்று கண்ணீர் விடுகிறது.

முதலையின் பேச்சை நம்பி, சிறுவனும் வலையை அறுக்க ஆரம்பிக்கிறான். அறுத்து முடிப்பதற்குள், சிறுவனின் காலைப் பிடித்துக் கொண்டது .

”பாவி முதலையே இது நியாயமா? என்று சிறுவன் கண்ணீருடன் கேட்க,

“அதற்கென்ன செய்வது, பசி வந்தால் பத்தும் பறந்துவிடும். இதுதான் உலகம். இதுதான் வாழ்க்கை” என்று சொல்லிவிட்டு விழுங்க ஆரம்பித்தது முதலை.

சிறுவனுக்கு சாவது பற்றிக்கூட கவலை இல்லை. முதலை ஏமாற்றி விட்டதோடு மட்டும் அல்லாமல், நன்றிகெட்டதனத்தை, ’இதுதான் உலகம்’ என்று சொல்வதை அவனால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.

மரத்திலிருந்த பறவைகளைப் பார்த்துக் கேட்டான். இதுதான் உலகமா?. அதற்கு பறவைகள், ”எத்தனையோ பாதுகாப்பாக மரத்தின் உச்சியில் நாங்கள் முட்டையிடுகிறோம். ஆனாலும், பாம்புகள் முட்டைகளை குடித்து விடுகின்றன. அதனால், இதுதான் உலகம்” என்று சொல்கின்றன.

அங்கு மேய்ந்து கொண்டு இருக்கும் கழுதைகளைப் பார்த்து கேட்கின்றான். ”நாங்கள் இளமையாக இருந்த காலத்தில் அதிகபடியான சுமைகளை சுமக்க செய்து, அடித்து, சக்கையாக வேலை வாங்குகிறார்கள். எங்களுக்கு வயதாகி, நடை தளர்ந்தவுடன், தீனி போட முடியாது என்று விரட்டிவிடுவதால், முதலை சொல்வது சரிதான்” என்கின்றன.

ஆடுகளை கேட்கிறான். ”எங்களுக்கு இரை போட்டு வளர்ப்பவர்களே, எங்களை இரையாக்கி கொள்வதால், முதலை சொல்வது சரிதான்” என ஆமோதிக்கின்றன.

கடைசியாக ஒரு முயலைப் பார்த்துக் கேட்கின்றான். “இதுவல்ல உலகம். முதலை பிதற்றுகிறது” என முயல் சொல்ல, முதலைக்கு கோபம் வந்துவிடுகிறது.

‘சிறு முயல் உனக்கு என்ன தெரியும்?’ என்று முதலை சொல்லவும்,

’நீ பேசுவது சரியாக புரியவில்லை, தெளிவாக பேசு’ என்கிறது முயல்.

காலை விட்டால் சிறுவன் ஓடிவிடுவான் என்ற முதலையைப் பார்த்து, முயல் பெரிதாக சிரித்தது.

உன் வாலை வைத்து அவனை அடித்து விடமுடியாதா? ஒரே அடியில் அவனை வீழ்த்திவிடமுடியும் உன்னால் என்றவுடன், கர்வத்துடன் காலை விட்டுவிட்டு, இதுதான் உலகம் என பேச துவங்கியது முதலை.

முயல் சிறுவனைப் பார்த்து ‘நிற்காதே! ஓடிவிடு’ என்கிறது.

சிறுவன் ஓடிவிடுகிறான். வாலால் அடித்து விடலாம் என நினைத்த முதலைக்கு ஏமாற்றமாகப் போய்விடுகிறது, வலையில் சிக்கியிருக்கும் வால் பகுதியை விடுவிப்பதற்குள் சிறுவனை பிடித்தது நினைவுக்கு வருகிறது.

கோபத்துடன் முயலைப் பார்க்க, ”புரிந்ததா? இதுதான் உலகம். இதுதான் வாழ்க்கை” என்கிறது முயல்.

தப்பி ஓடிய சிறுவன் கிராமத்தினரை அழைத்துவர, அவர்கள் முதலையை கொன்றுவிடுகின்றனர்.

சிறுவனோடு வந்த வளர்ப்பு நாய், புத்திசாலி முயலை பாய்ந்து பிடிக்கிறது. சிறுவன் காப்பாற்றுவதற்குள் முயலை நாய் கொன்றுவிடுகிறது.

உயிராக வளர்த்த நாய்தான் என்றாலும், உயிரைக் காப்பாற்றிய முயலை கொன்றுவிட்டதை; அவனால் சகித்துக் கொள்ளமுடியவில்லை.
கல்லெடுத்து எறிந்து நாயை விரட்டிவிடுகிறான்.

உதவி செய்தவர்களுக்கு உபத்திரவம் ஏற்படுவதும், நேசித்தவர்களையே வெறுக்க நேரிடுவதும் அவனை குழப்பிவிடுகிறது.

இதுதான் உலகமா?
இதுதான் வாழ்க்கையா? என்ற கேள்விக்கு பதில் சொல்வார் யாருமில்லை!.

முன்னுக்குப்பின் முரணனானதாகவும், எதிரும் புதிருமான நிகழ்வுகள்தான் வாழ்க்கை!.

அடுத்த நொடிகளில் நடக்க இருப்பது, அதிர்ச்சிகளா? ஆச்சரியங்களா? என அறியமுடியாமல் இருப்பதுதான் வாழ்க்கையின் சுவராஸ்யம்.

"வாழ்க்கையை புரிந்துகொள்ளமுடியாது. புரிய வைக்கவும் முடியாது. (எதிர் வருவதை) எது நடந்தாலும் ஏற்றுக்கொண்டு, முன்னேறுவதுதான் வாழ்க்கை".......

Wednesday, June 22, 2016

நாயின் தாய் பாசம் !

ஒரு குப்பைத்தொட்டியில் ஒரு நாய் ஒன்று உணவு தேடிகிட்டு இருந்தது. அங்கு பக்கத்தில் விளையாடிகிட்டு இருந்த சிறுவர்கள் அதை பார்த்ததும் கல்லை எடுத்து எடுத்து எறிந்தனர். அந்த கல் அந்த நாயின் காலில் பலமாக அடிபட்டது. காலில் இரத்தம் சொட்ட ஒட முயன்ற அந்த நாய் வலியிலும் குப்பையில் கிடந்த எதோ ஒரு உணவு பொட்டலத்தை வாயில் கவ்விக்கொண்டு நொன்டிகொண்டே ஓடியது.

 அந்த சிறுவர்களிடம் இப்படில்லாம் செய்யாதீர்கள் அது பாவம் என்று கூறிவிட்டு ஒரு பிஸ்கட் பாக்கெட்டை வாங்கிக்கொண்டு எனது வண்டியை எடுத்தேன். நாய் சென்ற வழியில் சென்றேன் சிறிது தூரம் சென்றதும் அந்த நாய் ஒரு புதரின் அருகில் நிற்பதை பார்த்தேன். அதை பார்த்ததும் என் மனம் கலங்கியது. அங்கு ஐந்து நாய் குட்டிகள் இருந்தது. அந்த நாயின் குட்டிகள் என நினைக்கிறேன். அது கவ்விக்கொண்டு வந்த உணவு பொட்டலத்தை குட்டிகள் சாப்பிட்டு கொண்டிருந்தன.

 அந்த நாயின் தாய்மை பாசத்தை நினைத்து கண்கள் கலங்கியது. நான் கொண்டுவந்த பிஸ்கட் பாக்கெட்டை பிரித்து அந்த நாயின் அருகில் சென்றேன். வலியில் அந்த நாயின் கண்களில் இருந்து கண்ணீர் வருவதை பார்த்ததும் என் மனம் வருந்தியது. அதோட கண்ணை பாருங்க உங்களுக்கு புரியும் அதோட வலி. அதுவும் ஒரு உயிர் ஜீவன் தானே.

 அதற்கு நம்மால் உதவ முடியலைனாலும் பறவாயில்லை இந்தமாதிரி செய்யாதீர்கள். இது ஏதோ சிறுவர்கள் செய்த தவறு தான் ஆனாலும் சில அறிவாளிகளும் இப்படி செய்கின்றனர். அது தவறு என்பதை இனிமேலாவது உணருங்கள். உஙகளால் முடிந்தால் உங்கள் தெருவில் உள்ள நாய்க்கு ஒரு பாக்கெட் பிஸ்கட் இல்ல பழைய சோற்றை போடுங்க அது உங்க வீட்டை பாதுகாத்து நன்றியுடன் இருக்கும்.

Shopping ! ஷாப்பிங் தியாகம் !

ஒரு பெண் ஷாப்பிங் போனார் ..!!

கேஷ் கவுன்டரில் பணம் கொடுக்கும்போது அவரது கை பைக்குள் டி.வி ரிமோட் இருப்பதைப் பார்த்து கடைக்காரருக்கு
ஆச்சரியம் ..!!

நீங்க டி.வி ரிமோட்டை எப்பவுமே உங்க பையிலதான் வச்சிருப்பீங்களா ..?!?என்று கேட்டார்
அதற்கு அந்தப் பெண்  இல்லை இல்லை என் கூட
ஷாப்பிங் வரமாட்டேன்னு என் ஹஸ்பண்ட் சொல்லிடாரு அதான் அவர் டி.வி பார்க்காம இருக்கறதுக்காக ரிமோட்டை கையோட தூக்கிட்டு வந்துட்டன் என்றாள் ..!!

கருத்து

மனைவி எங்கே  கூப்பிட்டாலும் செல்ல மறுக்காதீர்கள் ..!!

இதைக்கேட்டு கடைக்காரர் சிரித்தபடி அந்த பெண் வாங்கிய பொருட்களை எல்லாம் எடுத்து உள்ளே வைத்தார் ..!!

என்னாச்சு என்று ஆச்சரியத்தோடு அந்த பெண் கேட்டார் ..அதற்கு அந்த கடைக்காரர் சொன்னார் உங்க கிரடிட் கார்டை உங்க ஹஸ்பண்ட் பிளாக் பண்ணிருக்கார் என்று ..!!

கருத்து

உங்கள் கணவரின் ஆசைகளையும் மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள் ..!!

அந்த பெண் உடனே தன் பையிலிருந்து தனது கணவனின் கிரடிட் கார்டை எடுத்து நீட்டினார் ..!!
 
அது பிளாக் செய்யப்படாமலிருந்தது இப்போது அந்த பெண்  கடைக்காரரைப் பார்த்து ஏளனமாக ஒரு சிரிப்பு சிரித்தார் ..!!
 
கருத்து

மனைவியின் பவரை குறைத்து மதிப்பிடாதீர்கள் ..!!
அந்த கிரடிட் கார்டை ஸ்வைப் செய்தவுடன் ..ஒன் டைம் பாஸ்வேர்டை என்டர் செய்யவும் ..
 
அது உங்கள் மொபைலுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது என்று  மெஷின் ஒளிர்ந்தது ..!!
 
கருத்து

ஆண்கள் சமத்தாக இருந்தாலும் கூட மெஷின்கள் அவர்களை சாமர்த்தியமாக காப்பாற்றும் ..!!
 
அந்த பெண் பொருட்கள் எதுவும் வாங்காமல் மனம் நொந்து போய்  கடையிலிருந்து வெளியே வந்தார் .!!

அப்போது அவளுடைய மொபைலுக்கு ஒரு எஸ்.எம்.எஸ் வந்தது அது ஒரு ஃபார்வர்டு மெஸேஜ்
என்றிருந்தது ..அது அவளுடைய கணவர் அனுப்பியது ..உடனே அவள் முகம்மலர்ந்தது ..!!
 
ஆனால், அவள் கண்களில்  கண்ணீர் மட்டும் தேங்கி நின்றது..!! மீண்டும் கடைக்குள் நுழைந்தவள் வேண்டிய பொருட்கள் அனைத்தையும் வாங்கினாள்!

கருத்து

உங்கள் கணவரைப் பற்றி நீங்கள் என்ன வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளுங்கள் ..!!

ஆனால்

அவர்கள் எப்போதும் தன் மனைவிக்காக தியாகம் செய்பவர்களாகவே இருக்கிறார்கள் இருப்பார்கள் ..!!

கடுமையாக உழைப்பதை விட திறமையாக உழைக்கக் கற்று கொள்ள வேண்டும்.

ஒரு நாள்,
 

நாய் ஒன்று காட்டில் வழி தவறிவிட்டது. 

அப்பொழுது அங்கு சிங்கம் ஒன்று பசியோடு அலைவதைப் பார்த்த நாய் ஒரு நிமிடம் பதறி இன்றோடு நம் கதை முடிந்தது என்று எண்ணியது. 

அப்பொழுது அங்கு கிடந்த எலும்பு துண்டுகளைப் பார்த்ததும் அருமையான திட்டம் ஒன்றை தீட்டியது. சிங்கம் வரும் வழியில் திரும்பி உக்கார்ந்து கொண்டு எலும்பு துண்டுகளை சுவைக்க தொடங்கியது. சுவைத்து கொண்டே சத்தமாக, சிங்கத்தை கொன்று தின்பது எவ்வளவு சுவையாக உள்ளது, ஆனால் வயிறு நிறையவில்லை. இன்னொரு சிங்கம் கிடைத்தால், ஆஹா! வயிறு நிறைந்து விடும்" என்று கூறியது.

 இதைக் கேட்ட சிங்கம் "அய்யோ..! இந்த நாய் சிங்கத்தை அல்லவா கொன்று தின்கிறது" என்று நினைத்து பயந்து அங்கிருந்து ஓடி போனது. இதையெல்லாம் மரத்தின் மேல் இருந்து குரங்கு ஒன்று பார்த்து கொண்டிருந்தது. சிங்கத்தை ஏமாற்றிய இந்த நாயை சிங்கத்திடம் போட்டுக் கொடுத்தால்,சிங்கத்தின் நடப்பை பெற்று வாழ் நாளெல்லாம் பயம் இல்லாமல் வாழலாம் என்று நினைத்தது. 

உடனே சிங்கத்திடம் சென்று, நாய் செய்த தந்திரத்தைப் பற்றி சொன்னது. அதை கவனித்த நாய் எதோ தப்பு நடக்க போகிறது என்று உணர்ந்தது. குரங்கு சொன்னதைக் கேட்ட சிங்கம் கோபம் கொண்டு, "இப்பொழுது அந்த நாயை என்ன செய்கிறேன் பார். நீ என் முதுகில் ஏறிக் கொள்" என்று குரங்கை முதுகில் ஏந்திய படி நாய் இருந்த இடத்தை நோக்கி ஓடியது. தன்னை நோக்கி சிங்கம் பாய்ந்து வருவதைப் பார்த்த நாய், முன் போலவே திரும்பி உட்கார்ந்து கொண்டு, "இந்த குரங்கை அனுப்பி ⌚ஒரு மணி நேரமாகிவிட்டது. இன்னும் ஒரு சிங்கத்தைக் கூட ஏமாற்றி அழைத்து வரவில்லையே" என்று உரக்க கூறியது.

 இதை கேட்டதும், சிங்கம் குரங்கைத் தூக்கி எறிந்து விட்டு திரும்பிக்கூட பார்க்காமல் ஓடியே விட்டது.

 நாம் பணிபுரியும் இடத்தில் பல குரங்குகள் நம்மை சுற்றி இருக்கலாம், அவர்களை அடையாளம் காண முயற்சி செய்யுங்கள். "கடுமையாக உழைப்பதை (Hard Work) விட திறமையாக உழைக்கக் (Smart Work) கற்று கொள்ள வேண்டும்.
 
படித்ததில் பிடித்தது.

Monday, June 20, 2016

எங்கே நிம்மதி ?

எங்கே நிம்மதி

குரு ஒருவரிடம் செல்வந்தர் ஒரு கேள்வி கேட்டார்.!

என் மனம் மிகவும் குழப்பத்தில் இருக்கிறது.

என் பணியாட்கள்கூட எனக்கு உண்மையாக இல்லை. என் மனைவி, பிள்ளைகள் உள்பட உலகமே சுயநலக் கூட்டமாக உள்ளது. யாருமே சரியில்லை என்றார்.

புன்னகைத்த குரு, கதை ஒன்றைச் சொன்னார்.

ஓர் ஊரில் ஆயிரம் கண்ணாடிகள் இருக்கிற அறை ஒன்று இருந்தது. அதற்குள் சென்று ஒரு சிறுமி விளையாடினாள்.

தன்னைச் சுற்றி ஆயிரம் குழந்தைகளின் மலர்ந்த முகத்தைக் கண்டு மகிழ்ந்தாள். அவள் கை தட்டியவுடன், ஆயிரம் பிம்பங்களும் கை தட்டின.

உலகிலேயே மகிழ்ச்சியான இடம் இதுதான்! என்று எண்ணி, அடிக்கடி அங்கே சென்று விளையாடினாள்.

அதே இடத்துக்கு ஒருநாள் மனநிலை சரியில்லாத ஒருவன் வந்தான்.
தன்னைச் சுற்றி ஆயிரம் கோபமான மனிதர்களைக் கண்டான்.

அச்சம் கொண்ட அவன், அந்த மனிதர்களை அடிக்க கை ஓங்கியவுடன், ஆயிரம் பிம்பங்களும் அவனை அடிக்க கை ஓங்கின.

உலகிலேயே மோசமான இடம் இதுதான்! எனக் கூறி, அங்கிருந்து வெளியேறினான்.

இந்த சமூகம்தான் ஆயிரம் கண்ணாடிகள் இருக்கிற அறை. நாம் எதை வெளிப்படுத்துகிறமோ அதையே சமூகம் பிரதிபலிக்கிறது.

உன் மனதைக் குழந்தையைப் போல் வைத்திரு.

உலகம் உனக்கு சொர்க்கமாகும்! என்றார், குரு.

Thursday, June 16, 2016

விடாமுயற்சி !

விடாமுயற்சி
=============

ஒரு விவசாயி வளர்த்து வந்த வயதான பொதி சுமக்கும் கழுதை ஒன்று தவறி அவன் தோட்டத்தில் உள்ள வறண்ட கிணற்றில் விழுந்துவிடுகிறது. உள்ளே விழுந்த கழுதை அலறிக்கொண்டே இருந்தது. அதை எப்படி கிணற்றிலிருந்து வெளியேற்றி காப்பாற்றுவது என்று அவன் விடிய விடிய யோசித்தும் ஒரு யோசனையும் புலப்படவில்லை.

காப்பாற்ற எடுக்கும் எந்த முயற்சியும் அந்த கழுதையின் விலையை விட அதிகம் செலவு பிடிக்ககூடியதாக இருந்தது. அந்த கிணறு எப்படியும் மூடப்பட வேண்டிய ஒன்று. தவிர அது மிகவும் வயதான கழுதை என்பதால் அதை காப்பாற்றுவது வீண்வேலை என்று முடிவு செய்த அவன், கழுதையுடன் அப்படியே அந்த கிணற்றை மூடிவிடுவது என்று முடிவு செய்தான்.

அக்கம் பக்கத்தினரை உதவிக்கு கூப்பிட அனைவரும் திரண்டனர். சற்று அருகில் இருந்த ஒரு மண் திட்டிலிருந்து மண்ணை மண்வெட்டியில் அள்ளி கொண்டு வந்து அந்த கிணற்றில் அனைவரும் போட ஆரம்பித்தனர். கழுதை நடப்பதை உணர்ந்து தற்போது மரண பயத்தில் அலறியது. ஆனால் அதன் அலறலை எவரும் சட்டை செய்யவில்லை. இவர்கள் தொடர்ந்து மண்ணை அள்ளி அள்ளி கொட்ட கொஞ்சம் நேரம் கழித்து அதன் அலறல் சத்தம் அடங்கிவிட்டது.

ஒரு பத்து நிமிடம் மண்ணை அள்ளி கொட்டியவுடன் கிணற்றுக்குள்ளே விவசாயி எட்டிப் பார்க்க, அவன் பார்த்த காட்சி அவனை வியப்பிலாழ்த்தியது. ஒவ்வொரு முறையும் மண்ணை கொட்டும்போது, கழுதை தனது உடலை ஒரு முறை உதறிவிட்டு, மண்ணை கீழே தள்ளி, அந்த மண்ணின் மீதே நின்று வந்தது.

இப்படியே பல அடிகள் அது மேலே வந்திருந்தது. இவர்கள் மேலும் மேலும் மண்ணை போட போட கழுதை தனது முயற்சியை கைவிடாது, உடலை உதறி உதறி மண்ணை கீழே தள்ளி தள்ளி அதன் மீது ஏறி நின்று வந்தது.

கழுதையின் இடைவிடாத இந்த முயற்சியால் அனைவரும் வியக்கும் வண்ணம் ஒரு வழியாக கிணற்றின் விளிம்பிற்கே வந்துவிட்டது.
விளிம்பை எட்டியவுடன் மகிழ்ச்சியில் கனைத்த கழுதை ஒரே ஓட்டமாக ஓடி தோட்டத்திற்குள் சென்று மறைந்தது.

வாழ்க்கை பல சந்தர்ப்பங்களில் இப்படித் தான் நம்மை படுகுழியில் தள்ளிக் குப்பைகளையும், மண்ணையும் நம் மீது கொட்டி நம்மை சமாதி கட்ட பார்க்கும். ஆனால் நாம் தான் இந்த கழுதை போல தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் கொண்டு, அவற்றை உதறித் தள்ளி மேலே வரவேண்டும்.

நம்மை நோக்கி வீசப்படும் ஒவ்வொரு கல்லையும் சாமர்த்தியமாக பிடித்து படிக்கற்க்களாக்கிக் கொள்ளவேண்டும், எத்தனை பெரிய குழியில் நீங்கள் விழுந்தாலும்.. “இத்தோடு நம் கதை முடிந்தது” என்று கருதாமல் விடாமுயற்சி என்ற ஒன்றைக் கொண்டு நீங்கள் நிச்சயம் மேலே வரலாம்.

“நீங்கள் எதுக்குள்ளே விழுந்தா என்ன, உங்க மேல எது விழுந்தா என்ன?

எல்லாத்தையும் உதறிட்டு, நம்பிக்கையுடன் செயல்படுங்கள்.

Tuesday, June 14, 2016

இது சிரிக்க அல்ல சிந்திக்க ! சிகரட் குடித்தால்..!

ஒரு தேசத்தில் சிகரட் விற்பனை கிடையாது யாரும் குடிப்பதும் கிடையாது..


அந்த சிகரட் கம்பனி ஒரு ஆளை வேலைக்கு சேர்த்தது அவனோ பிரசார உக்தியைகையாண்டான் 

அதாவது,ஒரு விளம்பரம் செய்தான் சிகரட் குடித்தால்..!

1 திருடன் உங்கள் வீட்டுக்கு வரமாட்டான்
2 உங்களுக்கு முதுமையே வராது
3 பெண் குழந்தை பிறக்காது

இந்த விளம்பரத்தை பார்த்து எல்லோரும் சிகரட் குடிக்க ஆரம்பித்து விட்டார்கள். அந்த தேசத்தில் இருந்த சமூக ஆர்வலர் இந்த கதை தவறு என்பதை நீருபிக்க உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

வழக்காடினார்.நீதி மன்றத்தின் முன் வழக்கு வந்தது சிகரட் விற்பனை பிரதிநிதி நீதி மன்றதின் முன் ஆஜராகி நீதிபதியிடம் விளக்கம் அளித்தார் ."இப்படி ஒரு கருத்தை விளம்பரம் செய்து உள்ளாய் அறிவியலுக்கு ஏற்றதாய் இல்லையே" என்று நீதிபதி கேட்டார்

அதற்க்கு அவன் "சொன்னான் முதலில் நான் என்ன சொன்னேன்"

"திருடன் உங்கள் வீட்டுக்கு வரமாட்டான்""ஆமாம் வரமாட்டான் ... காரணம் எப்பொழுது சிகரட் குடிக்க ஆரமித்து விட்டார்களோ அப்பொழுதே இருமல் வந்து விடும். இருமி கொண்டே இருப்பதால் இவர்களுக்கு தூக்கம் வராது. .முழித்து கொண்டு இருக்கிறார்கள் என்று திருடன் வரமாட்டான்

"2 வது என்ன சொன்னேன்முதுமையே வராது எப்படி வரும் சிகரட் குடித்தால் இளமையிலே செத்து விடுவான் எப்படி முதுமை வரும்?

3 வது என்னசொன்னேன்பெண் குழந்தை பிறக்காது. எப்படி பிறக்கும் சிகரட்டில் நிக்கோடின் எனும் நட்ச்சு தன்மை இருப்பதால் மலட்டு தன்மை வந்துவிடும் பிள்ளை பேரே இருக்காது இதில் ஆண் என்ன பெண் என்ன பிள்ளையே பிறக்காது"#

 இது சிரிக்க அல்ல சிந்திக்க !

உலகம் உனக்கு சொர்க்கமாகும் !

குரு ஒருவரிடம்  செல்வந்தர் ஒரு கேள்வி கேட்டார்... என் மனம் மிகவும் குழப்பத்தில் இருக்கிறது. என் பணியாட்கள்கூட எனக்கு உண்மையாக இல்லை. என் மனை...