Total Pageviews

Thursday, November 21, 2013

ஆத்திரம்



ஒரு கிராமத்தில் ஓருவன், அழகிய புள்ளிமான் ஒன்றை, தன் வீட்டில் வளர்த்து வந்தான். ஒரு நாள், அந்த மான், காணாமல் போய்விட்டது. இதை பொறுத்துக் கொள்ள முடியாத, அவன், அந்த மானை பிடித்து போயிருப்பவனை, பழிவாங்க துடித்தான்; கடவுளிடம் முறையிட்டான்.

கடவுளும் வந்தார். அவரிடம்,  தான் ஆசையாய் வளர்த்த, மானை தாருங்கள், என்று தானே கேட்டிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு கேட்கவில்லை. ஆத்திரத்தில், 'நான் ஆசையாய் வளர்த்த மானை, யாரோ அபகரித்து சென்று விட்டனர். அந்த மானை திருடியவன், யாராக இருந்தாலும், அவனை என் முன் நிறுத்த வேண்டும்' என, கேட்டான்.

அதற்கு கடவுள், 'பக்தா, மானை நான் உனக்கு திருப்பித் தருகிறேன்.

ஆனால், மான் காணாமல் போனதற்கு, காரணமானவர் யார் என்று கேட்காதே' என்றார்.

அதை ஏற்க மறுத்த மனிதன், 'கடவுளே, நான் மிகுந்த கோபத்தில் உள்ளேன். மானை திருடியவனை, பழி வாங்காமல் விட மாட்டேன். எனவே, திருடியவனை, இங்கு வரவழைக்க வேண்டும்' எனப் பிடிவாதமாக கேட்டான்.

அதை கேட்ட கடவுள், 'சரி, நீ கேட்கின்ற வரத்தை தருகிறேன். ஆனால், பின்னால் வருத்தப்படக் கூடாது' என்றார். அந்த மனிதனும், சரி என்றான்.

'தந்தேன் நீ கேட்ட வரத்தை... இந்த மானை திருடிச் சென்றவர், உன் பின்னால் நிற்கிறார்' என, அந்த மனிதனிடம் கூறினார் கடவுள். 'கடவுளே காப்பாற்று' உடனே, அந்த மனிதன் திரும்பி பார்த்தான். மிகப்பெரிய சிங்கம் அங்கு நின்று கொண்டிருந்தது. அதை பார்த்ததும், பழி வாங்கும் கோபம் மறைந்து, பயம் கவ்விக் கொண்டது. 'கடவுளே காப்பாற்று' என, அலறி அடித்தபடி ஓடினான்.

இந்தக் கதையில் வரும் பக்தனுக்கு, அறிவு வேலை செய்யவில்லை. ஆத்திரம் தான் வேலை செய்தது; அது அழிவை தந்தது. எனவே, கோபத்தை தவிருங்கள்; அன்புடன், அமைதியுடன் வாழுங்கள்.

வெங்காய வியாபாரி


ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில், தரை துடைக்கும் பணியாளராக, ஒருவர் பணி புரிந்து வந்தார். அந்த நிறுவனத்திற்கு, புதிதாக நியமிக்கப்பட்ட மேலாளர், அங்கு பணிபுரியும், அனைவரின் இ மெயில் முகவரியை கேட்டார். கம்ப்யூட்டர் குறித்து, எதுவும் தெரியாத, தரை துடைக்கும் பணியாளருக்கு, இ மெயில் முகவரி கிடையாது. அதை மேலாளரிடம் தெரிவித்தார். "கம்ப்யூட்டர் நிறுவனத்தில், வேலை பார்ப்பவருக்கு, இ மெயில் இல்லை என்றால் எப்படி?' எனக் கூறி, அந்தப் பணியாளரை, மேலாளர் வேலையில் இருந்து நீக்கினார்.

வேலை இல்லை என்றதும், அந்த மனிதருக்கு என்ன செய்வது எனப் புரியவில்லை. தன் சேமிப்பில் இருந்த, 1,000 ரூபாயைக் கொண்டு, சந்தையில், வெங்காயம் வாங்கினார். அதை குடியிருப்பு பகுதிகளுக்கு, எடுத்துச் சென்று, கூவி கூவி விற்றார். சில ஆண்டுகளில், பெரிய வெங்காய வியாபாரியானார்.

இச்சூழ்நிலையில், ஒரு வங்கியில், கணக்கு துவக்குவது தொடர்பாக, வங்கி ஊழியர், அந்த வியாபாரியை சந்தித்தார். கணக்கு துவக்குவதற்கான விவரங்களை, படிவத்தில் பூர்த்தி செய்துவிட்டு, இ மெயில் முகவரியை எழுதுவதற்காக, முகவரியை கேட்டார்.அதற்கு, அந்த மனிதர், "எனக்கு கம்ப்யூட்டர் குறித்து எதுவும் தெரியாது. எனவே, இ மெயில் முகவரி இல்லை' எனப் பதில் அளித்தார். உடனே, அந்த வங்கி ஊழியர், 'இ மெயில் இல்லாமலே, இந்த அளவு முன்னேறி இருக்கிறீர்கள். உங்களுக்கு, கம்ப்யூட்டர், இ மெயில், இன்டர்நெட் குறித்து தெரிந்திருந்தால், எந்த அளவு முன்னேறி இருப்பீர்கள்?' என, ஆச்சரியமாக கேட்டார்.

அதற்கு அந்த வெங்காய வியாபாரி, "அது தெரிந்திருந்தால், ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில், தரை துடைத்துக் கொண்டிருப்பேன்' என்றார்.எனவே, வாய்ப்புகள் உங்களை விட்டு விலகிச் செல்லும்போது, வருத்தப்படாதீர்; முயற்சி செய்யுங்கள். அதைவிட பெரிய வாய்ப்பு, உங்களைத் தேடி வரும்

புதிதாக ஏதாவது சம்பாதிக்கிறீர்களா என்ன?




ஓர் ஊரில் ஒரு பணக்கார இளைஞர் இருந்தார். ஒரு நாள் அவர் தனது நண்பர்கள் சிலருடன் பேசிக் கொண்டிருந்தபோது அவருடைய மனைவி வந்து வாருங்கள் பழையது சாப்பிடலாம் என்று கணவரை அழைத்தார்.

இதேபோல் பலமுறை பத்துப் பேருக்கு முன்பாக பழையது சாப்பிடலாம் என்று மனைவி கூறி வந்தது அந்த இளைஞருக்கு வினோதமாகவும், வேதனையாகவும் இருந்தது.

மற்றொரு நாள் வழக்கம் போல், நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த அந்த இளைஞரை பழையது சாப்பிடலாம் என்று மனைவி அழைத்தவுடன் சற்றுக் கோபமாக எழுந்து உள்ளே சென்றார். வகை வகையான பதார்த்தங்கள் இலையை ஆக்கிரமித்துக் கொண்டிருக்க, அப்பெண் சுடச்சுட சோற்றைப் பரிமாறினார்.

உடனே அந்த இளைஞர் கேட்டார். எப்போது பார்த்தாலும் நான்கு பேருக்கு மத்தியிலே பழையது சாப்பிட வாருங்கள் என்று கூப்பிடுகிறாயே, இங்கே என்ன பழைய சோறா போடுகிறாய்? நெய், வடை, பாயாசத்தோடு சுடு சோறல்லவா போடுகிறாய்?

மற்றவர்கள் என்ன நினைப்பார்கள். கஞ்சப்பிரபு என்றல்லவா எண்ணுவார்கள்? என்று அவர் கூறியவுடன் மனைவி, நீங்கள் சுடச்சுட புதிதாக ஏதாவது சம்பாதிக்கிறீர்களா என்ன?

உங்கள் அப்பா சம்பாதித்து வைத்துவிட்டுப் போன பழைய சொத்தை வைத்துக் கொண்டுதானே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்கள்? என்று பதிலளித்தார். 


கலைவாணர் , நான் சம்பாதித்த பழையதைக் கொண்டிருக்க வேண்டுமா?

அவர்களே உழைத்துச் சுடுசோறு சாப்பிடட்டுமே! 

அவர் சொன்னதுபோல் தம் வாரிசுகளுக்குச் சொத்துக்களை அல்லது பணத்தைச் சேமித்து வைத்துவிட்டுப் போகவில்லை. 

அவருடைய பிள்ளைகள் பழையது சாப்பிடாமல் உழைத்து கௌரவமாக வாழ்கிறார்கள்.
 

Monday, November 11, 2013

சகிப்புத்தன்மை இருந்தால் தான் நிரந்தர வெற்றி கிட்டும் !



நவம்பர் 16 சர்வதேச சகிப்புத் தன்மை தினம். உலக மக்களிடையே சகிப்பு தன்மையை உருவாக்க வேண்டும்

உலக மக்களிடையே சகிப்பு தன்மையை உருவாக்க வேண்டும் என்பதற்காக யுனெஸ்கோ அமைப்பால் கடந்த 1995 ஆம் ஆண்டு உருவக்கப்பட்டதுதான், உலக சகிப்புத் தன்மை தினம் (International Day for Tolerance, November 16).

இந்தத் தினத்தில் மக்களிடையே சகிப்பு உணர்வு இல்லாததால் ஏற்படும் மோசமான விளைவுகள் எடுத்துச் சொல்லப்படுகிறது. கூடவே, சகிப்புத்தன்மை மற்றும் அகிம்சையின் தேவையை அவர்களுக்கு எடுத்துச் சொல்லி அதன் உலக அளவில் நடந்த நல்ல சம்பவங்கள் எடுத்துச் சொல்லப்படுகின்றன.

குடும்பம் தொடங்கி நாடு வரையில் அனைத்து இடங்களிலும் சகிப்பு தன்மையுடன் நடந்துக் கொண்டால் அரிய பல காரணங்களை சாதிக்க முடியும். அதற்கு சிறந்த உதாரணம், நம் தேசப் பிதா மகாத்மா காந்தி சகிப்பு தன்மை மற்றும் அகிம்சையுடன் நடந்துக் கொண்டதால்தான் நாடு சுதந்திரம் பெற முடிந்தது.

சகிப்புத்தன்மைக்காக ஒரு சிறிய கதை

முல்லா வழக்கமாக சாப்பிடும் உணவகத்திற்கு வந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அப்போது அந்த ஊரில் உள்ள முரடன் ஒருவன், உணவகத்திற்குள் வந்தான். அவனை பார்த்த மற்ற வாடிக்கையாளர்கள் ஓடிவிட்டார்கள். முல்லா இதை கவனித்தார். இருந்தாலும், அந்த முரடனை பார்த்து பயப்படாமல் சாப்பிட்டுகொண்டிருந்தார். முல்லாவின் அருகில் வந்த முரடன், முல்லாவின் தலைபாகையை தட்டிவிட்டு சென்றான்.

இப்படி ஒருமுறை அல்ல. ஒவ்வோரு நாளும் முல்லா வழக்கமாக அந்த உணவகத்திற்கு சாப்பிட வரும்போதெல்லாம், அந்த முரடன் வந்து முல்லாவின் தலைபாகையை தட்டிவிட்டு செல்வதை வாடிக்கையாக வைத்திருந்தான். 

இதை பார்த்த அங்கிருந்தவர்கள் முல்லாவிடம் வந்து, “உங்களுக்கு இந்நாட்டு அரசர் நண்பராயிற்றே. இந்த முரடனை பற்றி மன்னரிடம் சொன்னால் எல்லோருக்கும் நிம்மதியல்லவா?” என்றார்கள்.

அதற்கு முல்லா, “அந்த முரடனிடம் விரோதம் எதற்கு?. ஒருவேளை அவன் தண்டனையிலிருந்து விடுதலை ஆன உடன், நான் அவனுக்கு எதிரியாக தெரிவேன். எனது வேலை அவனுடன் மோதி கொண்டிருப்பதல்ல.” என்றார்.

“அப்படி என்றால் இந்த முரடனின் செயல்களுக்கு முற்றுபுள்ளி எப்போது” என கேட்டனர் மக்கள்.

“இறைவனின் விருப்பம் எப்போதோ அப்போது” என்றார் முல்லா.

ஒருநாள். வழக்கம்போல உணவகத்திற்கு வந்து கொண்டிருந்தார் முல்லா. எதிரே மன்னரின் காவலர் வந்துக்கொண்டிருந்தார். முல்லாவும் அந்த காவலரும் நண்பர்கள்.

தன்னுடன் வந்து சிற்றுண்டி சாப்பிடும்படி காவலரை அழைத்தார் முல்லா. அவரும் சம்மதித்து இருவரும் உணவகத்திற்கு வந்து அமர்ந்தார்கள்.

அப்போது, அந்த முரடன் வருவதை கவனித்துவிட்டார் முல்லா. உடனே அவருக்கு ஒரு யோசனை தோன்றியது.

தனது நண்பரான மன்னரின் காவலரிடம், “நண்பரே என்னுடைய தலைபாகை உங்களுக்கு அழகாக இருக்கும். அணிந்து பாருங்கள்.” என்றார் முல்லா.

காவலரும் முல்லாவின் தலைபாகையை அணிந்தார். உடனே முல்லா, ”இங்கேயே உட்கார்ந்து இருங்கள். இதோ வந்துவிடுகிறேன்.” என்ற முல்லா, அங்கிருந்து எழுந்து சென்று அந்த உணவகத்தின் வேறு ஒரு இருக்கையில் அமர்ந்துக்கொண்டார்.

முரடன் வந்தான். வழக்கமாக முல்லா அமர்ந்திருக்கும் இருக்கையில் மன்னரின் மெய்காவலர் அமர்ந்து இருப்பதை கவனிக்காமல், தலைபாகையை பார்த்து முல்லாதான் அமர்ந்து இருப்பதாக நினைத்து தலைபாகையை தட்டிவிட்டான் முரடன்.

மன்னரின் மெய்காவலருக்கு வந்ததே ஆத்திரம். தனது வாளை உருவி முரடனின் தலையை ஒரே சீவாக சீவி கொன்றார். இதை பார்த்த மக்கள் மகிழ்ந்தார்கள். பிறகு ஒன்று தெரியாததைபோல வந்த முல்லா, ”நண்பரே மன்னிக்கவும். உங்களை காத்திருக்க வைத்துவிட்டேன். வாருங்கள் கிளம்புவோம்.” என்று காவலரை அழைத்து சென்றார் முல்லா.

முரடனுடன் நேரடியாக மோதினால் ஆபத்து தனக்குதான் என்பதை உணர்ந்து, இந்த முரடனை அடியோடு அழிக்க காத்திருந்த முல்லாவின் சாமர்த்தியம் இது என்பதை மக்கள் புரிந்து, முல்லாவை பாராட்டி பேசினார்கள்.


ஆம். காரியம் சாதிக்க வேண்டும் என்றால் சகிப்புதன்மை வேண்டும். அந்த சகிப்பு தன்மை இருந்தால்தான் நிரந்தரமான வெற்றி கிடைக்கும், அமைதியும் கிடைக்கும் என்பதற்கு இந்த கதை ஒரு உதாரணம்.

உலகம் உனக்கு சொர்க்கமாகும் !

குரு ஒருவரிடம்  செல்வந்தர் ஒரு கேள்வி கேட்டார்... என் மனம் மிகவும் குழப்பத்தில் இருக்கிறது. என் பணியாட்கள்கூட எனக்கு உண்மையாக இல்லை. என் மனை...